Sunday, May 8, 2016

மனநிலை

பரிசை நிராகரிக்க இளையராஜாவிற்கு எல்லா உரிமையும் உண்டு. அதற்கு அவர் சொன்ன காரணத்தை யாரும் ஏற்கவேண்டிய அவசியம் இல்லை; எனக்கும் அந்த காரணம் ஏற்பு இல்லை. ஆனாலும் அவர் செய்ததில் கீழ்தரமானதாக எதுவும் இல்லை; தரத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லாத, அவர் மனதிற்கு பட்டதை அவர் செய்திருக்கிறார். அறிவு விரோத தமிழ் மனநிலை இதற்கு வழக்கம் போல அவரை திட்ட கிளம்புவதில் ஆச்சரியம் இல்லை. அவரது அறச்சீற்றமான 'அறிவிருக்கா?'விற்கு நிகழ்ந்த எதிர்வினையே எவ்வளவு கேவலமானது, சமுகத்தின் மனவக்கிரத்தை காட்டக்கூடியது என்று இங்கே அறிவாளிகள் என்று அறியப்பட்டவர்களுக்கே புரிந்ததில்லை; அதற்கு இது பரவாயில்லைதான்.
கொஞ்ச வருடங்கள் முன்னால் ஜானகி பத்ம பூஷன் விருதை நிராகரித்தார். அதற்கு அவர் சொன்ன காரணமும் ('பாரத் ரதனா அளித்தால் வாங்குவேன்' என்று) பலருக்கு ஏற்பில்லாமல் இருக்கலாம்; சொல்லப்போனால் லதா, ஆஷா, சுசீலா அளவிற்கு மாபாடகியாக ஜானகியை ஏன் கருத முடியாது என்று தகவல் பூர்வமாக என்னால் முன்வைக்க முடியும்; மறுக்கவும் வாய்ப்புண்டு. ஆனாலும் அதுவும் அவருக்கு உரிமையுள்ள ஒரு செயல்தான். இங்கே கவனிக்க வேண்டியது, ஜானகியின் செயலுக்காக மக்கள் அவரை பாராட்டினார்கள்; ஒருவர் கூட திட்டவில்லை. அப்போதே எழுதினேன், ராஜா இதை செய்திருந்தால் தமிழ்நாட்டு அற்பங்கள் எப்படி திட்டித் தீர்த்திருப்பார்கள் என்று. இப்போது அதையே செய்கிறார்கள். இதுதான் இவர்கள் மனநிலையும் தரமும்.

No comments:

Post a Comment