Sunday, May 8, 2016

23/02/2016

மநகூவிற்கு விஜயகாந்த் வந்தால் அவரை கிங் ஆக்குவதாக திருமாவளவன் கூறியதாக ஒரு செய்தி வாசித்தேன். இதற்கு அவர்கள் அதிமுகவுடனேயே கூட்டணி அமைத்து இந்த ஆட்சி தொடரவே வழி வகுக்கலாம். இன்றய அரசியல் சார்ந்த கருத்துதிர்ப்புகளில், விஜயகாந்தை கழக ஆட்சிகளின் சீரழிவிற்கு ஒரு மாற்றாக முன்வைப்பதை போன்ற அரசியல் அடிமுட்டாள்த்தனம் வேறு இருப்பதாக தோன்றவில்லை. 
தேமுதிகவின் வளர்ச்சியை ஜெ தலைமையிலான அதிமுகவை விட ஆபத்தான நிகழ்வாக கருதுகிறேன்; கழக ஆட்சிகளுக்கு எதிராக, இப்போது மக்கள் நலக்கூட்டணியை ஆதரிக்கும் சில அறிஞர்கள், விஜயகாந்தை ஏதோ கழகங்களுக்கு பரவாயில்லை என்பதாக கருதுவது ஒன்றே அவர்களின் அறிவு லட்சணத்தை பறைசாற்றக் கூடியது. இதுவரை அதிகாரத்தில் இல்லாத காரணத்தால் ஊழல், அராஜகம் போன்றவற்றில் ஈடுபட்டு சாதிக்கவில்லை என்பதை மட்டும் எந்த விதத்தில் ஒரு தகுதியாக கருதுகிறார்கள் என்பது புரியவில்லை. இவர்களின் லட்சியமான நல்லாட்சியை தருவதற்கான அடையாளமாக அவர் என்ன தடயங்களை இதுவரை விட்டு வந்திருக்கிறார் என்பதுதான் கவனிக்க வேண்டியது. 
அதிமுகவிற்காவது (குறிப்பாக ஜெயலலிதாவிற்காவது) அரசியல் சார்ந்த வேர்களும், தொடர்சியான உதிர்ப்புகளும் தவிர்க்க முடியாமல் படிந்து விட்டதுண்டு; அதிமுகவை விட அரசியலற்ற ஒரு அமைப்பிற்கு உதாரணமாக தேமுதிகவைத்தான் குறிப்பிட முடியும். இப்போது யோசித்தோமானால் 1991-96 ஜெயா ஆட்சி அதிர்ச்சி தந்தாலும், அதில் உண்மையில் அதிர்ச்சிடைய எதுவுமேயில்லை. அவ்வாறுதான் அந்த ஆட்சி இருந்திருக்க முடியும் என்பதற்கான ஏராளமான தடயங்களைத்தான் அவர் கொள்கை பரப்பு செயலாளராக ஆன நாளில் இருந்து அளிந்து வந்திருக்கிறார். அது தெரிந்து அப்போதும், அதற்கு பின் நேரடியாக வரலாறாகிவிட்ட சாட்சியங்களுக்கு பின்னும், மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர்த்த நேர்ந்ததை நினைத்துதான் நாம் அதிர்ச்சி அடைய வேண்டும். சொல்லப்போனால், இப்போது தடயங்களை தேடினால் எம்ஜியாரின் ஆட்சியையும், 70களின் கருணாநிதியின் ஆட்சியையும் நாம் முன்னமே அனுமானித்திருக்கக் கூடிய தடயங்களை வரலாற்றில் வாசிக்கலாம். 
அந்த வகையில் இதுவரையான கழக ஆட்சிகளை விட, குறிப்பாக இன்றய அதிமுக ஆட்சியை விட மிக மோசமான ஊழல்களையும், கேலிக்கூத்துகளையும், சீரழிவு நடவடிக்கைகளையும் அதிகாரத்திற்கு வந்தால் நிகழ்த்துவதற்கான தடயங்களையே விஜயகாந்த் தொடர்ந்து அளித்து வந்திருக்கிறார். அனைவருக்கும் தெரிந்த இந்த பொது அறிவிற்கு ஆதாரப் பட்டியல் தேவையே இல்லை. நேரடி அதிகாரத்திற்கு கூட வரவேண்டாம்; கூட்டணி ஆதரவு நிர்பந்தம் மூலம் அரசை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அடைந்தால் கூட பல கேலிக்கூத்துகளை அவர் நிகழ்த்திக் காட்டுவார். இன்றய அரசியல் சூழலில் ஒரு தவிர்க்க இயலா முக்கிய இடத்தை அவர் பிடித்திருப்பது தமிழகத்தை பீடித்த தீமைகளில் ஒன்று. 
இப்போதைக்கு அதிகாரத்தை தேமுதிக கைப்பற்ற வாய்ப்பேயில்லை என்பது நிம்மதி அளிக்கிறது என்றாலும், தேமுதிகவிலிருந்து நம்மை காக்கக் போவது திமுகவோ, மநகூவோ அல்ல. அவர்கள் உண்மையில் தேமுதிகவின் பிம்ப வளர்ச்சிக்கு உதவிக்கொண்டிருக்க, நம்மை தேமுதிக எதிர்காலத்தில் அதிகாரதிற்கு அருகில் வருக்கூடிய ஆபத்தில் இருந்து காப்பற்றக் கூடிய ஒரே சக்தி விஜயகாந்த் மட்டுமே.

No comments:

Post a Comment