Sunday, May 8, 2016

தலித் முதல்வர் 02/02/2016

தலைமை என்பது தெளிவாக வரையறை செய்யப்பட்டு விட்ட திமுக அதிமுகவில் தலித் முதல்வராவதை பற்றிய விவாதம் அபத்தமானது; நடைபெறவும் செய்யாது. மக்கள் நலக்கூட்டணியில், இன்னமும் முதல்வர் பெயர் முடிவாகாத நிலையில், முன்னணி தலைவர்களில் யாருமே அதற்கான தகுதியுள்ள பரந்த மக்கள் ஆதரவை பெற்றிராத நிலையில், இப்படி ஒரு விவாதத்தை எழுப்புவதில் தவறில்லை என்பது மட்டுமல்ல, அர்த்தம் பொருந்தியதும் ஆகும். வெற்றி பெறப்போவதில்லை என்கிற நம்பிக்கையிலோ, விவாதித்தால் சண்டை வரும் என்ற பயத்திலோ முதல்வரை முடிவு செய்யாமல் இருக்கலாம்; மற்றபடி முடிவு செய்வதுதானே மக்களிடையே தங்களை முன்வைக்க ஒரு பிரசார பலமாக இருக்க முடியும். பிறர் நல்லகண்ணு போன்ற, திருமா அளவிற்குகூட தனக்கான தனித்த மக்கள் ஆதாரவு இல்லாதவர்களை முன்வைத்து பேசும்போது, தலித் என்ற பெயரில் திருமாவை முன்வைத்து பேசினாலே பிரச்சனை வரும் என்றால், இது ஒரு ஆரோக்கியமான சூழல் என்று கருத முடியாதே. ஒருவேளை தலித் ஒருவரை முதல்வர் வேட்பாளராக முன்வைத்தால், நம் சாதிய சமுகத்தில் அதனாலேயே வெற்றி வாய்ப்பு குறையலாம் என்று கருதலாம்; அதுவும் நம் சூழலின் வக்கிரம்தானே!
அடிப்படையான சமுக நியாயத்தை பேசுவதற்கு சமய சந்தர்ப்ப நிபந்தனை விதிப்பது மேற்தட்டு இங்கிதத்திற்கு இணையானதுதான். ஆகையால் தலித் முதல்வராவது குறித்த விவாதத்தை எப்போது துவக்கினாலும் அதில் எந்த தவறும் இல்லை; ஒருவேளை அவ்வாறான நிபந்தனையை ஒரு சிக்கலான நேரத்தில் -உதாரணமாக ஆட்சி ஏறுமா கவிழுமா போன்ற அசந்தர்ப்பத்தில்- முன்வைப்பதற்கு வேண்டுமானால் உள்நோக்கம் கற்பிக்கலாம். மக்கள் நலக்கூட்டணி என்பது வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்போவதில்லை என்பதே கிட்டத்தட்ட நிகழ்தகவு ஒன்றுடன் நடக்கப்போகும் நிலையில், இப்போது இதை விவாதிப்பதை அனுமதிக்காவிட்டால் வேறு எப்போதுதான் விவாதிக்கவும் முயற்சி செய்யவும் நம் சூழல் அனுமதிக்க போகிறது?

தலித் முதல்வராவதை பற்றி விவாதிப்பதை ஒரு சிண்டு முடியும் வேலை என்று அ. மார்க்ஸ் கற்பிப்பார் என்று ஒரு போதும் நான் நினைத்ததில்லை.

No comments:

Post a Comment