Tuesday, May 25, 2010

நாடு கடந்த தமிழீழ அரசு.

நாடு கடந்த தமிழீழ அரசு குறித்த ஷோபாசக்தியின் கட்டுரை மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு. அதை இங்கே ஒரு குட்டி பதிவாக வரும் நாட்களில் எழுதலாம் என்று நினைத்திருந்தேன். முதலில் இலங்கையில், ஈழத்தில் தீவிரமாக எத்தனையோ நடப்பதும், அதை கேள்வி கேட்க நாதியில்லாமல் இருக்கும் கொடூர யதார்த்தத்தில் (நடந்ததை கேட்பது வேறு) நாடு கடந்த அரசு என்ற 'வேடிக்கையை' விமர்சிப்பதை முதற்கரிசனமாக ஷோபாசக்தி கொள்வதே எனக்கு மிகவும் பிரச்சனைக்குரியது. ஆனால்    'உங்களின் அரசியல் விருப்புகளிற்கு ஈழத்து மக்களை நீங்கள் பலிகொடுக்க முடியாது. எதிர்கால ஈழத் தமிழர் அரசியல் இயங்குதிசை அவர்களால் மட்டுமே தீர்மானிக்கப்படும். உறுதுணை மட்டுமே உங்களது வேலை.' என்ற அளவில் சோபாவை ஏற்பதாக ட்விட்டரில் எழுதியிருந்தேன். இதை தொடர்ந்து பெயரிலி எழுதிய ட்விட்களில் உள்ள பல கருத்துக்களை நான் ஏற்கிறேன். சொல்ல போனால் அடிப்படையில் கிட்டதட்ட முழுவதுமே எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் நான் முன்வைக்கும் மொழி மாறியிருக்கும். வேறு சில விஷயங்களை சொல்லியிருப்பேன்.

இவை இப்படியிருக்க நாடு கடந்த அரசு குறித்து எனக்கு பெரிய நம்பிக்கைகள் எதுவும் இல்லை. ஆனால் இப்படி ஒரு அரசியலை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருப்பது தேவை என்றே நினைக்கிறேன். இது அரசியல் அல்ல, அரசியல் என்பது இடது சாரித்தனமாக (சாதிய எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு எல்லாமே இதில் சேர்த்தி) பேசுவது மட்டுமே என்று ஷோபா வலியுறுத்துவது போல் நான் கருதவில்லை. சோபாசக்தி கேடாக, கேவலமாக நினைக்கும் முதலாளித்துவ ஏகாதிப்பத்திய அரசாங்கத்திடம் மனு சமர்ப்பிப்பது கூட தேவை, சோபா அ.மார்க்ஸ் போன்றவர்கள் முன்வைக்கும் அரசியலை விட நடைமுறைக்கு யதார்த்தத்திற்கு தேவையானது என்று நினைக்கிறேன் - அதில் சிலரது சுயநலன், ஊழல் என்பன இருந்தாலும். நாடுகடந்த அரசு என்பதை சாக்காக வைத்து அடக்கு முறையை இலங்கை அரசு தர்க்கப்படுத்தி அவிழ்த்துவிடும் என்பது ஒரு ஏற்கத்தக்க வாதமாக எனக்கு தோன்றவில்லை. தற்சமய இலங்கை அரசு ஈராக் தாக்குதலின் போதான அமேரிக்க திமிரை விட அதிக திமிருடன் இயங்கி வருகிறது. அமேரிக்கா ஐநா அங்கீகாரத்துடன்தான் ஈராக் மீது படையெடுக்க விரும்பியது. அங்கீகாரம் கிடைக்காவிட்டால் அங்கீகாரம் தேவையில்லை என்பதை உலகுக்கு உணர்த்தும் வாய்ப்பாக அதை எடுத்துக் கொண்டு தான் நினைத்ததை நிறைவேற்றியது. இலங்கையும் அதே நிலையில்தான் உள்ளது. தமிழ் மக்களின் அரசியல் சார்ந்து இலங்கைக்கு எந்த அழுத்தமும் தர வாய்பில்லாத, எந்த நியாய அங்கீகாரமும் தேவையில்லாத நிலையில்தான் உள்ளது. ஆகையால் ஷோபாசக்தியின் கட்டுரையில் உள்ள ஒரே முக்கிய பாயிண்டான இந்த *புதிய* அடக்குமுறை வரும் என்ற வாதமும் எனக்கு சரியாக படவில்லை.

பெயரிலி எழுதிய ட்விட்களை அவர் ஒரு பதிவாக விரிவாக எழுத வேண்டும் என்பது என் வேண்டுகோள். அதை செய்வாரா என்பது தெரியாததால் அவரது ட்விட்களை ஒன்று சேர்த்து கீழே பதிகிறேன். இனி இதாலிக்கில் வருவது பெயரிலி எழுதியது என்பதை நினைவில் வைத்து வாசிக்கவும். அப்படியே வெட்டி ஒன்றுஇ சேர்த்து ஒட்டியது மட்டும் என் வேலை. இதில் அவருக்கு ஆட்சேபம் இருக்கும் பட்சத்தில் நீக்கிவிடுவேன்.

சோபா போன்றவர்களும் இன்னும் பலரும் பொதுவாக இதனைச் சொல்லிவிட்டுப்போகின்றார்கள். ஆனால், அதற்கான இவர்களது செயற்றிட்டம் என்ன? ஈழத்தமிழரின் அரசியல் இயங்குதிசை அவர்களாலேதான் தீர்மானிக்கப்படும். உண்மை. ஆனால், இன்றைக்கு அவர்களின் நிலைமையும் வருமானமும் என்ன? உல்லாசப்பிரயாணத்துறையிலே வரவீட்டுதலா? அவர்களின் குடியிருப்புகளிலே நடக்கும் சிங்களக்குடியேற்றங்களுக்கு யார் குரல்கொடுப்பது?

ஸ்ரீலங்கா அரசின் செயல்களையெல்லாம் புலிகளிலே போட்டுவிட்டு, சிங்கள, முஸ்லீம் மக்களோடு ஆரத்தழுவுவோம் என்று சொன்னால், கைதட்டி வரவேற்கப் பலரிருக்கின்றனர். இந்தியர்கள், மார்க்ஸியர்கள், தலித்தியவாதிகள், உதிரிகள்,மாற்றுக்கட்சிகளென்று சொல்லிக்கொள்கின்றவர்கள்.   
சொல்லப்போனால், இலங்கையிலே இனப்பிரச்சனைக்குக் காரணமே விடுதலைப்புலிகள்தான் என்று கையைக் கழுவிவிட்டுப்போக எல்லோருக்கும் வசதியாகிவிட்டது :-(

நாடுகடந்த அரசு என்பதிலே எனக்கு உடன்பாடு பெரிதுமில்லை - அது விடுதலைப்புலிகளின் எச்சமாக ஷோசபோல ஆங்கிலச்செவ்விகளிலே தனக்கான போராளிவிம்பத்தை உருவாக்கிக்காட்டிக்கொள்ளும் ஆட்களுக்கும் எடுத்ததற்கெல்லாம் பாசிசம் பினாமி சியோனிசம் என்று அரசியல்நடைமுறைப்பாதிப்பு எதுவும் இல்லாமலே கதறும் ஸ்ரீரங்கன், ரயாகரன் போன்றோருக்கு வாய்ப்பந்தல்போட வசதிப்படுவதாலே. ஆனால், குறைந்தளவு அகிலம் தழுவிய ஓர் அழுத்தத்தை இலங்கை அரசுக்கு ைக்கின்றோமென்ற திட்டமேனும் அவர்களிடமிருக்கின்றது. ஷோபாவுக்கும் லும்பினி அ. மார்க்ஸுக்கும் ஸ்ரீரங்கனுக்கும் ரயாகரனுக்கும் என்ன திட்டம்?   

நாடுகடந்த அரசு என்ற தலைப்பினை பாலஸ்தீனம், செச்சினியா, தென்சூடான் போன்றவற்றின் அடிப்படையிலே அவர்கள் பேசும் குரலுக்காக அமைத்தனர் எனமுடியாதா? பாலஸ்தீனியருக்கு என்றால் சரி, ஈழத்தமிழருக்கென்றால் இவர்களுக்கு ஆயிரம் கேள்விகள். நாடுகடந்த அரசு என்றில்லாமல் ஈழப்பாட்டாளிகளின் கூட்டாளிகள் என்று தலைப்பினைப் போட்டுவிட்டு இருந்தால், ஈழத்திலே இருப்பவர்களுக்கு எல்லாப்பிரச்சனையும் தீர்ந்துவிட்டதாக அர்த்தப்படுமா? இப்படியாக அமுக்கிவிட்டுத் தாமும் பேட்டிகளும் போஸுகளும் பதிவுகளும் மட்டும் போட்டுக்கொண்டிருந்தால், இவர்களுக்கும் அ. முத்துலிங்கத்துக்கும் என்ன வித்தியாசம்? போய் groundviews முதல் கொஞ்சம் அரசியலிலே நிதானம் நிற்க எழுத முயலும் இடங்களிலேகூடப்பாருங்கள். status quo..

  
விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாதிகள் ஒழிந்துவிட்டார்கள். இனியேனும், ஸ்ரீலங்கா அரசு என்ற புள்ளியிலேதான் தொடங்கமுடியும் - ஓரிரு விதிவிலக்கு. முஸ்லீங்களைக் கொன்றார்கள் என்று "வன்னிப்"புலிகளையே இன்னும் காட்டும் இவர்களுக்கு அந்நேரத்திலே விரல்காட்டிய "கருணா"ப்புலிகளைப் பத்திரமாகக் கொழும்பிலே கொண்டுபோய்ச்சேர்க்கமுடிகின்றது. டக்ளஸ் தேவானந்தாவுடன் எதுவரை பௌஸருக்கு எதுவிதமான அரசியற்றொடுப்பும் இல்லையென்று மனிதாபிமானம் முன்னிட்ட செவ்வியை அவருக்குக் கொடுத்த ஷோபாசக்தி சொல்வாரா? செய்த தவறுகளையும் ஏன் ஸ்ரீலங்கா, இந்தியஅரசுகள் இழைத்த குற்றங்களையும் விடுதலைப்புலிகள்மீது தள்ளிவிடுவது இவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆதரவாளர்களும் இந்நாள் திடீர்மனிதக்காவலர்களுக்கும் வசதி.

கொல்லப்பட்ட அப்பாவிமுஸ்லீங்கள், அப்பாவிச்சிங்களவர்கள் என்று உருகும் இவர்களிலே ஒருவருமே இந்த அப்பாவிகளிலே எத்தனைபேர் ஸ்ரீலங்கா இராணுவத்தின் மேற்பார்வையின் கீழே இயங்கிய 'ஜிகாத்', ஊர்காவற்படையினர், தமிழர்தாய்நிலத்திலே குடியேற்றப்பட்ட பழைய சிறைக்கைதிகள் என்பதைப் பேசுவதில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதம், இந்துத்துவவாதிகளுக்கு எவ்விதத்திலும் குறைந்ததில்லை. ஒன்றை ஆதரித்து மற்றைதைமட்டும் தேர்ந்தெடுத்து எதிர்க்கும் அ. மார்க்ஸின் சீடர்களிடம் லும்பினி ஞானத்தை எதிர்பார்க்கமுடியாது லும்பன் தனத்தைத்தான் எதிர்பார்க்கமுடியும்.

ண்டும் கேட்கிறேன்; நாடுகடந்த அரசினை எதற்காக எதிர்க்கின்றார்கள்? உருத்திரகுமாரன் அதிலே இருக்கின்றார் என்பதற்காகமட்டுமேதானா? வேறேதும் வலிதான காரணமுண்டா? நாடுகடந்த அரசினைப் பேசுகின்றவர்கள் ஈழத்திலே இண்றைக்கு இருக்கும் நிலையிலே தமிழ்மக்களுக்கு உதவக்கூடாதென்றார்களா? அவர்களின் இன்றைய துயரங்களைப் பேசக்கூடாது; ஆயுதம் வாங்கி அனுப்புகிறோம்; வீட்டுக்கொரு பிள்ளையைத் தாருங்கள் என்றா சொன்னார்கள்? எதற்காக எதிர்க்கின்றார்கள்? அரசும் இந்திய அரசும் தருகின்றதையே ஏற்றுக்கொண்டு அவர்கள் வாழ்வதே அவர்களுக்கான அரசியலாகட்டும். 1948-->1968--> என்று பின்னோர் இண்டிபாட்டா இருபதாண்டுகளின் பின்னாலே, எமது கதை, கவிதை, கார்ல்மார்க்ஸின் விதைவிந்துபரவியது எவரிடம் எப்படி கட்டுரைகள், போஸுகள், பேட்டிகளுக்குப் பங்கம் வராமல் வந்தாலே போதுமானதென்பதாகவா? குறைந்தபட்சம், விடுதலைப்புலிகள் கயமைத்தனம் கொண்டவர்களென்றாலும் இவர்கள்மாதிரியாகப் பங்கம் இல்லாது அரசியல் பேசும் வசதியோடு இருக்கவில்லையே? ஈழத்தமிழர்களையே தீர்மானிக்கவிடுங்கள்; விடுங்கள் என்று சொல்கின்றவர்களுக்கு இவர்கள் இன்றைக்கு என்னசெய்தார்கள்? என்னசெய்தாய் என என்னிடம் கேட்டால், நான் சொல்லப்போவதில்லை; அதனாலே, அவர்களும் சொல்லவேண்டுமென நானும் வற்புறுத்தப்போவதில்லை.

  
ஈழம் என்பதே சாதிமான்யாழ்ப்பாணிகளுக்கு நேர்ந்த தரப்படுத்தலின் விளைவான பழிவாங்குதலே என யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களிலே நடந்த தமிழரின்பூர்வீகபிரதேசங்கள் பறிபோதலையெல்லாம் கண்டுகொள்ளாமலே விட்டுவிட்டு ஆதவன் தீட்சண்யாபோன்றவர்களுக்குப் படம் காட்டிய தலித்தியவாதிகள் இவர்களுக்கும் சாதிமான்யாழ்ப்பாணிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் என்ன வேறுபாடு? அவரவர் அவரவருக்கான போராட்டங்களைத் தேர்ந்துகாட்டுகிறார்கள். ஆக வேலைவாய்ப்புகள்மட்டுமே இத்தனைநாட்களும் தமிழர்களுக்குகான முக்கியபிரச்சனையென்றால் சொல்ல ஏதுமில்லை. சீனாவும் இந்தியாவும் முதலீட்டு வேலை வாய்ப்புகளை உருவாக்கினாலென்ன, எவர் வடகிழக்கிலே வேலைவாய்ப்பினை உருவாக்கினாலென்ன, அதிலே வடகிழக்கிலேயிருக்கும் தமிழர்களுக்கு எத்துணை வாய்ப்பு என்பது முக்கியமானது; தவிர, இந்தவேலைவாய்ப்பு எந்தளவுக்கு அரசியல்ரீதியான ஈழத்தமிழர்களின் (சரி உங்களின் ஸ்ரீலங்கா தமிழர்களின்) எதிர்காலத்தினை நிச்சயப்படுத்தும்? "பொடியளெல்லாம் இயக்கத்துக்குப் போறங்களெண்டு தியேட்டரில புளூபிலிம் காட்டி, இரவின்மடியில் போட்டுத் திசைதிருப்பவேணும்" என்ற ஏதாவதிலே இப்போதைக்கு ஈடுபடச்செய்யும் வழிமுறைகளாகவே முடிந்துவிடுவதுபோதுமா? அரசியல்ரீதியான ஒரு முன்னெடுப்பு அவசியமேயில்லையா?

நான் சொல்லவருவதெல்லாம் இதுதான்; எல்லாவற்றுக்கும் பிரபாகரனையும் உருத்திரகுமாரையும் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருப்பது வெறுமனே எமது தப்புதலே. எனது கருத்தெல்லாம் ஸ்ரீலங்கா அரசினைச் ுட்டுவிரல்நுனியிலே வைத்திருக்க ஏதாவதொரு அகிலம் பரவிய அமைப்பு ஓரளவு திட்டத்துடன் அவசியமென்பதுமட்டுமே. அது நாடுகடந்த அரசானாலுஞ்சரி; நாடு கனன்ற ஆலானுஞ் சரி. காஸ்பர்ராஜும் பா.ராகவனும் டைனோவும் லக்கிலுக்கும் இன்னபிற தமிழகத்தலைவர்களும் அதைச் செய்யப்போவதில்லை என்பதே பரபரப்பு யதார்த்தம்; ஆங்! ஷோபாசக்தி, அ. மார்க்ஸ், தலித்திய, பெண்ணிய, புண்ணிய, மண்ணிய, என்னிய ஏனைய பிறவுங்கூட ;-)

Monday, May 17, 2010

சுய முரணும், அறிவு நேர்மையும்.

சந்தனமுல்லை அவர்கள் எழுதிய, இஸ்லாமிய பெண்கள் சுயமாக சம்பாதிப்பதற்கு எதிரான பத்வா ஒன்றை பற்றி பேசும் பதிவொன்றை முன்வைத்து, நண்பர் சுகுணா திவாகர் எழுதிய பதிவை படித்து உடனடியாக கீழுள்ள கருத்துக்களை ட்விட்டியிருந்தேன்.

// சந்தனமுல்லை பதிவை முன்வைத்த சுகுணாவின் பதிவு முழு உளறலன்றி வேறில்லை. சுய முரண்பாட்டை அறிந்தும் தெரியாமல் நடிப்பவர்களுக்கு விளக்கமுடியாது. 8:36 PM May 15th via web

அமா மற்றும் அவர் சிஷ்யர்கள்+தார்மீக ஆதரவாளர்களுக்கு சில விஷயங்களில் குறைந்த பட்ச அறிவு+நேர்மையுடன் இயங்க இயலாது என்பது வெளிப்படை.
8:37 PM May 15th via web

இவர்கள் ஆதர்சமான பெரியாரிடம் இந்த நேர்மையின்மை கிடையாது, அவர் வாதங்கள் வெளிப்படையான அறிவு நேர்மை கொண்டது. இதுதான் புரியாதது+ஆச்சரியமானது. 8:40 PM May 15th via web

ஒருவேளை பெரியாரை தாண்டி சிந்திக்கும் பின்பெரியாரிசம் இதுதானோ?
8:41 PM May 15th via web//


நான் எழுதியது ஒரு உடனடி துளி எதிர்வினை. மேலே சொன்னவற்றின் அடிப்படை பார்வையில் மாற்றமில்லை என்றாலும், சற்று நேரம் கழித்து எழுதியிருந்தால் கடுமை குறைவான வேறு வார்த்தைகளில் என் விமர்சனத்தை சொல்லியிருக்க கூடும்.

இதில் நான் குறிப்பிட்டுள்ள 'சுயமுரண்' என்பதை தன்னால் கண்டுகொள்ள முடியவில்லை என்று நண்பர் அனாதை என்னிடம் மேல் விளக்கம் கேட்டுள்ளதற்கு பதிலாக இந்த பதிவு எழுதப்படுகிறது. டிவிட்டரில் எழுத நினைத்த பதிலையே இங்கே அளிப்பதால் பதிவு கருத்து துண்டுகளாக இருக்க வாய்ப்புண்டு, முதலில் சுயமுரண் என்று நான் குறிப்பிடுவதன் விளக்கம்.

ஒரு அரசியல் சட்டகம் என்பதை நாம் ஏற்றுகொண்டால், சமூக பிரச்சனைகளை அணுக/எதிர்க்க/ஆதரிக்க நாம் கொள்ளும் முன் அனுமானங்கள் என்று சில உண்டு. இந்த முன் அனுமானங்களை இடத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வதையும், பிரச்சனைகளின் நுட்பத்திற்கு ஏற்ப அல்லாமல் நிறத்திற்கு ஏற்ப வேறு படுவதையும், முன் அனுமானங்களை கொண்டு தீர்மானிக்கப்படும் தர்க்கம் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மாறு படுவதையும் சுயமுரண் என்று சொல்லலாம். இது மற்ற சட்டகத்துடனான முரண் அல்ல; தன் சட்டகத்துனுள்ளேயே, தானே குண்டக்க மண்டக்க முரண்படுவது. முன் அனுமானங்கள் மூலம் தீர்மானிக்கப்பட்டு குறிப்பிட்ட (குறைந்த பட்சம்) இரு பிரச்சனைகளில் எழுத்தின்/எதிர்ப்பின் தீவிரம், முற்றிலும் மாறுபடுவதை சுயமுரண் என்று இந்த சந்தர்ப்பத்தில் மேலுள்ள ட்விட்களில் குறிக்கிறேன்.

சமூகம், மதம், இதர ஆண்களால் தீர்மானிக்கப்படும் நிறுவனங்கள் பெண்கள் மீது செலுத்தும் அதிகாரம், மற்றும் பெண்களின் செயலை/இருப்பை கட்டுப்படுத்துவது குறித்த சுகுணாவின் கருத்துக்களை முன் அனுமானங்கள் என்று இங்கே சொல்லலாம். அவை என்ன கருத்துக்கள் என்று விளக்க வேண்டியதில்லை. இப்போது இரண்டு பிரச்சனைகளை எடுத்துக் கொள்ளலாம். முதலாவது அண்மையில் லீனா எழுதிய கவிதையை முன்வைத்து நடந்த பிரச்சனைகள். இதில் லீனாவின் கவிதை எழுதும் உரிமை மட்டுமில்லாது, அதையும் தாண்டி சுகுணா அளித்த ஆதரவு பதிவாகியுள்ளது. இரண்டாவது மேலே குறிப்பிட்டுள்ள ஃபத்வா பிரச்சனை. இந்த இரண்டில் ஒன்றில் சுகுணா கலகவாதியாகவும்,எல்லையற்ற சுதந்திரம் கொண்ட மனித விடுதலையை ஆதரிப்பவராகவும் இருக்கிறார். இன்னொன்றில் வழவழ கொழகொழக்கிறார். இதைத்தான் சுயமுரண் என்று குறிப்பிட்டுள்ளேன். என்ன சொல்ல வந்தேன் என்பதை இதற்கு மேல் விளக்க தேவையில்லை என்று நினைக்கிறேன்.

பெரியாரை நான் இழுத்தது சுய முரண் பற்றி பேசும் போது அல்ல, அறிவு நேர்மை என்பதை பற்றி பேசும் போது. சுய முரண் என்பதே இல்லாமல் அரசியல்ரீதியாக இயங்குவது சாத்தியமல்ல; வாழ்வது நிச்சயமாக சாத்தியம் அல்ல. இந்த இடத்தில் முதல் பிரச்சனை இந்த சுய முரணின் தீவிரம்; அடுத்தது சுயமுரணை சமாளிப்பது அல்லது மழுப்புவது.

மார்க்சிய திருவுருக்கள், மார்க்சிய கருத்தியல்களை பாலியல் சொல்லாடல்களுடன் கலந்த கவிதை என்று ஒன்றை சமைப்பதற்கான உரிமை என்பது நானும் ஆதரிக்கும் ஒரு விஷயம். ஆனல் இது நாம் முதன்மையாக கரிசனம் கொள்வதற்கான ஆதார உரிமை அல்ல. மாறாக பொருளீட்டுவது என்பது ஆதார உரிமை. தன் இருப்பையும், சுதந்திரத்தையும் குறைந்த பட்ச அளவில் தக்கவைக்க தேவையான அடிப்படை உரிமை. இந்த இரண்டு பிரச்சனைகளில் சுகுணாவின் கரிசனமும் தீவிரமும் நேர்மாறான தலைகீழ் விகிதத்தில் உள்ளது. அடுத்து அறிவு நேர்மை என்பதை சுயமுரண் என்று எதுவுமே இல்லாமல் இயங்குவது என்று நான் குறிப்பிடவில்லை. சுயமுரண் என்று இருப்பதை acknowledge செய்து வெளிப்படையாக ஒப்புகொள்வதையே அறிவு நேர்மை என்கிறேன். பெரியார் இஸ்லாத்தையும் சில சந்தர்ப்பங்களில் தீவிரமாக விமர்சித்தார். ஆனால் அவர் இஸ்லாத்துடன் பொதிவான உறவு கொண்ட சந்தர்பங்களில் தனது சுய முரண்கள் குறித்து மிகுந்த சுய உணர்வடன் இருந்ததையும், அதை வெளிப்படையாக முன்வைக்கும் நேர்மையும் அவரிடம் இருந்ததை காணலாம்.

இந்த பிரச்சனை குறித்து நான் கருத்து கூற ஒரே காரணம் சமூக யதார்த்தத்தில் மத கண்காணிப்பில் நடந்து வரும் மாற்றங்கள். கடந்த 10 ஆண்டுகளில் உலக வஹாபிய பாதிப்பில் தமிழ் இஸ்லாமிய சூழலில் நடக்கும் மாற்றங்கள், பெண்கள் மீதான புதிய கண்காணிப்புகள், கட்டுப்பாடுகள். இவை எங்கோ உலக மூலையில் நடப்பவை அல்ல, நம் கண் எதிரே தமிழ் சூழலில் சமூக புழக்கத்தில் காணக்கூடிய விஷயங்கள் இவை. இது குறித்த அக்கறையிலேயே என் நிலைபாட்டை குறைந்த பட்சமாக பதிவு செய்ய ட்விட்டினேன்.

இவைகள் ஒரு பிரச்சனையே அல்ல; இந்த பிரச்சனைகளை விட முதலீட்டியமும், தமிழ் தேசியமும்தான் இன்றய ஒரே பிரச்சனை என்று சிலர் நினைக்கலாம். தாராளமாக நினைக்கட்டும். முக்கியமில்லாத பிரச்சனைகள் குறித்து -குறிப்பாக மத அடக்குமுறைகளுக்கு ஆதரவாக வாவது குறைந்த பட்சமாக - கருத்து சொல்லாமலாவது இவர்கள் இருக்கும் வரை பிரச்சனையில்லை. அ.மார்க்ஸ் போன்றவர்கள் இஸ்லாமிய மத அடிப்படைவாதத்திற்கு தார்மீக நியாயங்களை கட்டமைத்து வழங்குவார். ராஜன்குறை போன்றவர்கள் அதற்கு நடைமுறை அரசியல் என்று ஒரு நியாயம் வழங்குவார்கள். அ.மார்க்ஸை அப்படியே நகலெடுக்கும் நடையிலேயே சுகுணாவின் பதிவும் எழுதப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் விமர்சன பூர்வமான கேள்விகளை எழுப்பவாவது வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இறுதியாக நாம் வெளியில் இருந்து கொண்டு (இஸ்லாமியராக இல்லாமல்) இஸ்லாத்தை விமர்சிப்பதன் சிக்கல்களை முன்வைத்து நான் பல முறை கருத்து சொல்லியுள்ளேன். மீண்டும் அதை பதிவு செய்யலாம். ஆனால் இங்கே அந்த கேள்வி பொருத்தமில்லாதது. வெளியில் இருந்து பேசுவதில் பிரச்சனை என்றூ தோன்றினால் பேசாமலாவது இருக்க வேண்டும். தீவிர பிரச்சனைகளில் மத அடிப்படைவாதத்திற்கு வக்கலத்தாக இவர்கள் பேசுவதுதான் பிரச்சனை, அதற்குதான் விமர்சனமே தவிர 'அல்லாமல் பேசுவதில்' உள்ள பிரச்சனைகள் வேறு விஷயம். (என் கருத்தை சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், உள்ளிருந்து எதிர்ப்பும், போராட்டமும் யதார்த்தத்தில் இல்லாத, வர வாய்பில்லாத நிலையில் வெளியிருந்து பேசவாவது வேண்டும். அதாவது பேச மட்டுமாவது செய்ய வேண்டும்.)

சுகுணாவின் பதிவை விட முக்கியமாக கொள்ள வேண்டிய அரசியல் பிரச்சனைகள் உண்டு. ஆனால் இந்த விஷயத்தை பற்றிய என் நிலைபாட்டை வெளிப்படுத்துவது எனக்கு முக்கியமானது. அதனால் சின்னதாக ட்விட்டரில் எழுதினேன். அனாதை கேட்டுகொண்ட காரணத்தால் இந்த பதிவை எழுதினேன். சுகுணாவின் மேற்படி பதிவை வழவழ கொழகொழத்தல் என்று சொன்னது குறித்து எதுவும் விளக்கம் தரவில்லை. அதை சுகுணா என்னை கேட்டுகொண்டால் (அல்லது தேவையான எதிர்வினயைை வைத்தால்) மட்டும் செய்வேன்.