Monday, July 27, 2015

மூட ஊற்று!

எம்மெஸ்வி ரசிகர்கள் என்று சொல்லிகொள்பவர்களின் உள்ளத்தில் ராஜா மீது இவ்வளவு வெறுப்பு இருக்கும் என்று நான் உண்மையிலேயே எதிர்பார்த்திருக்கவில்லை. கடவுளால் புதிதாக படைக்கப்பட்ட காட்டாறு வழியில் உள்ளதையெல்லாம் தன்மயமாக்கி இழுத்துச் செல்வது போல், ராஜா ஆக்ரமித்துக் கொண்டிருந்த என் சிறுவயது காலத்தில், குழந்தைத்தனம் பொருந்திய பெரியவர்களின் சண்டையை பார்த்ததற்கு மேல் வெறுப்பை நான் எதிர்கொண்டதில்லை. ரஹ்மான் X ராஜா என்ற முரண் புரிதலுக்கு உட்பட்டது. ரஜினி X கமல் என்ற முரண் கூட வரலாற்றில் மழுங்கி போன நிலையில், ராஜா X எம்மெஸ்வி என்ற முரண் இன்று தீவிரமாக இருக்காது என்று நினைத்தேன்.

ஞாநி போன்ற அரசியல் கழிவுகள் பற்ற வைத்தது என்றாலும், மூன்று நாட்களாக ஒரு எம்மெஸ்வி குழுவில் வாசித்ததும் எதிர்வினை வைத்ததும் (நம்ம விடுவோமா!) மனதில் ஏற்படுத்திய தொந்தரவுகளும் முக்கிய பாடம். எம்மெஸ்வி பற்றிய ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வை அசிங்கப்படுத்திக் கொண்டிருப்பதை, நான் பலமுறை எடுத்துச் சொன்ன பிறகும் அவர்கள் யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை. வெறுப்பைப் போன்ற மூடத்தனத்தின் ஊற்று வேறு உண்டோ! இப்போதும் - காசு பிரச்சனை பற்றி பேச இனி எதுவுமே இல்லாதாதால்- ஜேம்ஸ் வசந்தன் தன் அண்மைக்கால பிரச்சனைகளால் வன்மமாக போடும் நிலைத்தகவலை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். உலகில் எங்காவது ஒரு ரசிகர் கூட்டம், தன் ரசனைக்கான ஆதர்ச பிம்பம் குறித்த நிகழ்ச்சி ஒன்று மோசமாக இருக்கிறது என்று சொல்லும் மதிப்புரையை ஆர்வமாக பகிர்ந்து கொண்டிருக்குமா? இதுதான் வெறுப்பின் அழிவுபூர்வமான முட்டாள்தனம். நான் ஒரு ராஜா ரசிகன் என்பதை தூர வைத்துவிட்டு, ஒரு சமூக அவாதானிப்பாளனாக எனக்கு இது ரொம்ப முக்கியமானதாகவும் சுவாரசியமாகவும் உள்ளது. 

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் உண்டு. ரொம்ப காலமாக கீரல் விழுந்த ரெகார்டாக ஒரு விஷயத்தை புத்திசாலி கிளிப்பிள்ளைகள் சொல்லி வருகிறார்கள். இளையராஜா மீது இன்று பலர் வன்மமாக எழுதுவதற்கு ராஜா ரசிகர்கள்தான் காரணம்; இவர்கள் ராஜாவை தவிர மற்றவர்களை மட்டமாக நினைப்பதாலும், இவர்களின் வாய் நீளத்தாலும்தான் ராஜாவை எல்லோரும் திட்டுகிறார்கள் என்பது. இதை ஒரு பேச்சுக்கு உண்மை என்று எடுத்துக் கொள்வோம். ராஜா ரசிகர்களின் செயல்களுக்கு எதிர்வினையாக அறிவு மழுங்கியவன்தான் ராஜாவை திட்டுவான்; அறிவு உள்ளவன் மிஞ்சிப்போனால் ராஜா ரசிகர்களை மட்டுமே திட்டுவான். சரி, அறிவு மழுங்கியவர்கள் அல்ல நாம் கவனிக்க வேண்டியது. எம்மெஸ்வி ரசிகர்கள் ராஜாவை பற்றி கும்பலாக அவ்வளவு வன்மமாக -தங்கள் ஆதர்ச பிம்பமான எம்மெஸ்விக்கு அஞ்சலி செலுத்தி, வசூலித்த கட்டணத்தை எம்மெஸ்வி குடும்பத்திற்கு அளிக்கப் போவதற்காக - திட்டிக் கொண்டிருக்கும் போது, ராஜா ரசிகர்கள் வருத்தத்துடன் பதில் சொன்னார்களே ஒழிய, ஒருவர் கூட எம்மெஸ்வி பற்றி குறைவாக ஒரு சொல் சொல்லவில்லை. திரும்ப திரும்ப எம்மெஸ்வி மீது ராஜா வைத்துள்ள மதிப்பை பற்றிதான் பேசினார்கள். ஆகையால் ரசிகர்கள் வாய் நீண்டால் ரசிக்கப்படும் திருஉரு அவமதிக்கப்பட வேண்டும் என்ற அவசியமே இல்லை.