Monday, May 27, 2013

இன்று இப்படித்தான் யோசிக்க முடிகிறது!

ஜெயமோகன் கருத்தியல்ரீதியாக எதிர்க்கப்பட வேண்டியவர் என்பதுதான் என் நிலைபாடும்; என்னால் ஆன அளவு நானும் எதிர்த்திருக்கிறேன்; எதிர்க்கிறேன். ஆனால் ஜெமோ சொன்னதன் எதிர்வினையாக தமிழ் வெகுசமூகத்தின் ஆழ்நோயை புறக்கணிக்கவோ, அப்படி ஒன்று இல்லையென்று மறுக்கவோ முடியாது. சமத்துவம் சார்ந்ததாக தன் நிலைபாட்டை கற்பித்துக் கொண்ட ஞாநியின் பதிவு வழக்கம் போல அபத்தமானது. அதற்கு ஜெமோவின் (அவரது வார்த்தையில்) தமிழ் 'பரப்பியல் கலாச்சார' சாடுதலே மேல். அறிவுபூர்வத்தை மலினப்படுத்துவதை எதிர்ப்பது பாசிசமாகாது. இந்த மலினப்படுத்தலை தமிழ் சமூகத்தில் எல்லா தளங்களிலும்-பல்கலைகழக்த்திலிருந்து, ட்விட்டர்வரை- காண்கிறோம். கேரளத்தில் இப்படி இல்லையா, கர்நாடகத்தில் இல்லையா என்கிறார்கள். நிச்சயம் தமிழ்நாட்டு சாலைகளில் கேட்கும் ஹார்ன் ஒலிபோல இவ்வளவு நாராசமாக வேறு எங்கும் இல்லை என்பதுதான் என் திடமான மனப்பதிவு. ஜெமோ சொல்லிவிட்டார் என்பதற்காக, அறிவுக்கு எதிரான அதிகாரம் கொண்ட பாமரத் திமிருக்கு கருத்தியல் நியாயம் கற்பிப்பது அறிவுடமை ஆகாது.

ஜெமோவிற்கு இதை சொல்ல அருகதை இல்லை என்றால் இருந்துவிட்டு போகட்டும். தமிழ் சமூகம் மீது அக்கறை உள்ளவர்கள் ஜெமோவை புறக்கணித்து விட்டாவது இந்த நோயை அணுகித்தான் ஆகவேண்டும். இதற்கு திராவிட இயக்கமும் திரைப்பட கலாச்சரமும்*தான்* காரணம் என்று நான் ஜெமோ போல் எண்ணவில்லை; ஒருவேளை அவைதான் காரணம் என்றால், ஜெமோ முன்வைக்கும் அறிவியக்கத்தை விட திராவிட அரசியலும், தமிழ் வெகுஜன கலாச்சாரமும் முக்கியம் என்பதுதான் என் எண்ணம். ஆனால் இவை இரண்டிற்கும் பங்கில்லை என்றும் உறுதியாக சொல்லி காலத்தின் தேவையான விமர்சனத்தையும் மறுக்க முடியாது.

திமுகவின் எல்லவகை ஊழலுக்கும், பிஜேபியுடன் கூட்டுச் சேர்ந்தது உடப்பட்ட எல்லாவகை சந்தர்ப்பவாத அரசியலுக்கும், துரோகங்களுக்கும் அளிக்ககூடிய கருத்தியல் நியாயத்தை, தமிழ் சமூகத்தின் தீராத நோய்களுக்கும் மருந்து என்று எண்ணி இடலாகாது.

Saturday, May 4, 2013

அன்புள்ள குழலிக்கு...

அன்புள்ள குழலி, இதை கொலை அல்ல என்று நான் ஒரு போதும் சொல்லவில்லை. கொலை செய்தவர்களை வண்மையாக கண்டிக்கிறேன். நாட்டில் நடக்கும் ப்ரொஃப்ஷனல் கொலைகளை எல்லாம் நான் கண்டிப்பதில்லை; நீங்கள் என் பெயரை குறிப்பிட்டு கருத்து கேட்பதால் நேரடியான வார்த்தைகளில் கண்டிக்கிறேன். 

ஆனால் நீங்கள் குறிப்பாக யாரையோ கண்டிக்க என்னை அழைப்பதாக தெரிகிறது. யாரை என்று தெளிவாக சொல்லுங்கள். திருமாவளவனையா? அவர் இந்த கொலைக்கு பின்னால் ஒரு திட்டமிட்டவாரக இருப்பதாக நீங்களும், வன்னிய ஜாதிவெறி தரப்பை மட்டும் ஒலிக்கும் ஒரு குழு மட்டுமே சொல்கிறது. வேறு வகையில் இதற்கு ஆதரமாக நம்பும்படி எந்த செய்தி வந்தாலும் அந்த நேரத்து கருத்தை பதிவுகிறேன். மற்றபடி இந்த கொலைக்கு தூண்டுதலாக திருமா எந்த பேச்சையாவது முன்வைத்தாரா என்றால் நிச்சயமாக இல்லை. மறைமுகமாக தூண்டினார் என்று நீங்கள் சொன்னால் அதை நாங்கள் நம்ப ஆதாரம் என்ன? சிறிதும் விமர்சனம் இன்றி ஜாதி சார்பான நிலை எடுக்கும் நீங்கள் சொல்வதை மட்டும் எதை வைத்து நம்புவது? நம்பினால் அது திருமாவிற்கு செய்யும் அநீதியாக இருக்கும். திருமா இதுவரை பொதுவில் தெரிய பேசிய அனைத்தும் மிகுந்த பொறுப்புணர்வுடன் நான் ஆதரிக்கும் அரசியலாக இருக்கிறது என்றுதான் என்னால் என் கருத்தை பதிவு செய்ய முடியும். ஆகையால் திருமாவை கண்டிக்க ஏதுமில்லை.

திட்டமிட்டதாக அல்லாமல், ஆனால் விடுதலை சிறுத்தையை சேர்ந்தவர்கள் செய்திருந்தால் கூட செய்தவர்களை நிச்சயம் கண்டிக்கிறேன். இப்போது கொலை என்று சொல்லியுள்ள போலிஸோ, வேறு ஏதாவது ஆதரத்துடன் (உங்கள் தரப்பை தவிர) யார் சொன்னாலும் தீவிரமாக பரிசீலித்து கருத்தை முன்வைக்கிறேன்.

அல்லது அங்கிருக்கும் தலித் மக்களை கண்டிக்க வேண்டும் என்கிறீர்களா? பாமக ரௌடிகளிடம் அடிவாங்கி குடிசைகள் எரிந்தவர்களை கண்டிக்க சொல்கிறீர்களா? 'இரண்டு உயிரை விட குடிசை முக்கியமா' என்று உங்களை போல நான் கேட்கமுடியாது. தலித்களின் குடிசைகள் இரண்டு உயிர்களை விட முக்கியமாக இருக்கலாம். கலவரத்தை தூண்டிய தாக்கிய தரப்பை சார்ந்தவரை விட, தாக்கப்பட்டவர்கள் வாழும் குடிசைகள் முக்கிமானதாக படலாம். ஆனாலும் இங்கே தலித்கள்தான் தொடங்கினார்கள் என்று நம்ப ஆதரம் எதுவும் கிட்டவில்லை. நீங்கள் வழக்கம் போல போது புது புது தர்க்கங்களை உருவாக்குவதை தவிர வேறு ஆதாரம் கிடைக்கவில்லை. 

மாறாக ராமதாஸும் ஒட்டு மொத்த பாமகவும் தமிழகம் இதுவரை காணாத ஜாதிவெறியை முன்வைத்திருக்கிறது. இதுவரை காணாத என்று ஏன் சொல்கிறேன் என்றால், இவ்வளவு தீவிரமாக அமைப்புரீதியாக எல்லா ஆதிக்க ஜாதிகளையும் திரட்டி தலித் சமுதாயத்திற்கு எதிராக யாரும் அணிதிரட்டியதில்லை. (தலித்துக்கு எதிரான பொதுப்புத்தி எப்போதுமே உண்டு என்றாலும் அதை பொதுவில் ஒரு பெரும் அரசியல் குரலாக நியாயம் கற்பித்து அணி திரட்டி யாரும் முன்வைக்கவில்லை.) வன்முறையை தூண்டும் வகையில் எவ்வளவோ பேசியுள்ளது. வன்முறையில் இறங்குவோம் என்று பகிரங்கமாக அறைகூவியிருக்கிறது.'அமைதியாக அறவழியில் போராடுங்கள்' என்றாலே தொண்டர்கள் என்னவகை வன்முறையில் இறங்குவார்கள் என்று தெரிந்த நிலையில், இதற்கான விளைவு என்னவென்று சொல்லவேண்டியதில்லை. எந்த சந்தேகமும் இன்றி பலதரப்பட்ட வன்முறையை பாமக செய்திருக்கிறது. இப்படி வெளிப்படையாக தெரிந்த ஜாதிவெறி அரசியலையும், வன்முறை அரசியலையும்தான் மனித நேயமாக அறிவுபூர்வமாக, சிந்திப்பவர்கள் கண்டிக்கமுடியும். அதைத்தான் நான் கண்டிக்கிறேன். அதைத்தான் மரக்காணம் சம்பங்களுக்கு காரணமாக்குகிறேன். இன்னம்மும் நான் நம்பும் நல்லவர்கள் எனக்கு தெரிந்து இதை தீவிரமாக எதிர்க்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். 

எல்லா கொலைகளையும் நாம் கணக்கு வைத்து கண்டித்து கொண்டிருப்பதில்லை; நீங்களும் கண்டிப்பதில்லை. கண்டிபதற்கு பின் அரசியல் காரணம் உள்ளது. வன்னிய உயிர்கள் போய்விட்டதே என்று நீங்கள் துடிக்கிறீர்கள். வன்னிய ஜாதிவெறி வன்முறை அரசியலுக்கு தலித் மக்களும் இந்த இரண்டு உயிர்களும் பலியானதாக நான் கருதுகிறேன். அதையே கண்டிக்கிறேன். 

'கண்டித்தாயா.. கண்டித்தாயா..'' என்று இவ்வளவு நீளாமாக கேட்கும் நீங்கள் எதையாவது கண்டித்தீர்களா? மரக்காணம் கொலைகளை முற்போக்காளர்கள் கண்டிக்காததால் கண்டிக்கவில்லை என்று அநியாயமா க சொல்லாதீர்கள். அதை பற்றி பேசத்தொடங்கும் முன், சித்திரை திருவிழா பற்றி ரன்னிங் கமெண்டரி கொடுத்த போது, எங்காவது ராமதாஸ் + மற்றவர்களின் ஜாதிவெறி பேச்சை வன்முறையை எங்காவது கண்டித்தீர்களா? ஏதோ ஐபிஎல் பார்த்தது போலத்தானே நிலைத்தகவல் போட்டீர்கள். அந்த ஜாதிவெறி வன்முறை பேச்சை கண்டிக்காத நீங்கள் இப்போது அதை நியாயப்படுத்தும் நீங்கள் 'கண்டித்தீர்களா?' என்று மற்றவர்களை கேட்பதே பெரும் அநியாயம். நான் கண்டிக்கிறேன். நடந்த அனைத்திற்கும் ராமதாஸையும் கூட இருந்தவர்களையும் கண்டிக்கிறேன். மாறான புதிய தகவல்கள் நம்பகத்தன்மையுடன் வரும்வரை வேறு எதுவும் சொல்வதற்கில்லை.

Wednesday, May 1, 2013

தந்திர அரசியல் நேர்மை.


2004-2006இல் குழலி நேரடியான சாதி சார்புடன், ஆனால்  பூடகமாக வன்னிய ஜாதிவெறி தீவிரத்திற்கு ஆதரவாக எழுதிக்கொண்டிருந்தபோது, அதை எதிர்த்து நான் எழுதியதை  நண்பர்கள் பலர் எதிர்த்தார்கள்; மாறுபட்டார்கள்; சிலர் மென்மையாக கண்டிக்க கூட செய்தார்கள்.  தங்கமணி நீண்ட விளக்கம் எனக்கு எழுதினார். அதற்கு 'வாவ்..' என்று பாராட்டுக்கள். சங்கரபாண்டி கண்டனமே செய்தார். 

இப்போது குழலி நேரடியாக மிக வெளிப்படையாக ஜாதிவெறி நிலைபாடு எடுத்திருக்கும்போது இவர்கள் யாராவது தங்களது அன்றய நிலைபாட்டுக்கு வருத்தம் தெரிவிப்பார்கள், குறைந்த பட்சம் குழலியின் இப்போதய ஜாதிவெறி நிலைபாட்டை கண்டிப்பார்கள், சின்ன எதிர்ப்பு குரலாவது ஒலிப்பார்கள்  என்று பார்த்தால் .. வாயையே திறக்கவில்லை. (என் கணிப்பு முழு மெய்யாவதில் எனக்கு எந்த பெருமையும் இல்லை; ஆற்றைமையான கோபம் மட்டுமே). ஏதோ ஜாதிவெறி பதிவுகளை பார்க்காமல் வேறு வேலையில் இருக்கிறார்களோ என்றும் கொள்ள முடியாது. அவரோ மானாங்கண்ணியாய் பதிவு போடுகிறார். இவர்கள்  கண்டும் காணாமல் வேறு ஏதோ பேசுகிறார்கள். எல்லாம் வேறெங்கோ அல்ல, அருகருகில் ஃபேஸ்புக்கில். இதற்கு நடுவில் சுந்தரமூர்த்தி முனிரத்தினம் குழலியின் பதிவுகள் இரண்டை லைக் வேறு செய்கிறார். நான் நிலமை இவ்வளவு கேவலமாகும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த சூழலில் புழங்குவதை விட, காலக்கொடுமையை இங்கே பதிவு செய்துவிட்டு,  கிரீயேடிவாக நான்  செய்ய காத்திருக்கும் வேலைகளை முழுகவனத்துடன்  தொடர்வது மட்டுமே எனக்கிருக்கும் வழியும் வெளியும்.