Sunday, May 8, 2016

தோழர்களும் அறிவும் 18/01/2016

நேற்றய பதிவு ஒன்றில் நான் ஆதாரமின்றி கம்யூனிஸ்டுகளை முட்டாள்கள் என்று முன்முடிவுடன் சொன்னதாக வாசகர் ஒருவர் வருத்தப்பட்டார். (பத்து லைக்கு வாங்கும் உனக்கு யாரடா வாசகர் என்று கேட்கக்கூடாது; நானே கூட எனக்கு ஒரு சிறந்த வாசகன்தான்.) வாசகர் சொன்னது சரிதான்; உண்மையில் நான் எதையுமே வாசிக்காமல் - தோழர்கள் அப்படி அறிவோடு என்னத்த எழுதிவிடப்போகிறார்கள் என்கிற அசாத்திய நம்பிக்கையில்தான் - அப்படி எழுதினேன். இப்போது என் நம்பிக்கைக்கான ஆதாரத்தை தரும் வகையில் இந்த பதிவை ஜாலியாக எழுதத்தொடங்குகிறேன். (ஜாலியாக தொடங்கினாலும் இடையில் சீரியசாக திட்டும் மோடுக்கு போகும் வாய்ப்புகள் நிறையவே உள்ளது.)
அ.மார்க்ஸ் மற்றும் குமரேசன் அசாக் எழுதிய இரண்டு பதிவுகளை எடுத்துக் கொள்வோம். அ.மார்க்ஸ் என்ன சொல்கிறார். தோழர் ஐ.மா. பா நல்லவர் வல்லவர், அடித்தள சமூகத்தை சேர்ந்தவர். அவரை 
/இளையராஜா மரியாதைக் குறைவாக அவதூறு செய்துள்ளது முறையற்றது.... ஐ மா பாவை அறிந்தவர்களால் மன்னிக்க இயலாதது…./ 
அதாவது இளையராஜா அவதூறு செய்துள்ளாரா, அவர் சொன்னது உண்மையா பொய்யா என்கிற பேச்சே கிடையாது. 'மூச்… தோழரை பத்தி யாரும் பேசப்படாது" என்று மட்டும் சொல்கிறார். குமரேசன் வளவளவென எழுதிய நீண்ட பதிவில் ஒரு வரியில் சின்னதாக பதில் சொல்கிறார்.
அவதூறு என்பது என்ன? அறியப்பட்ட ஒருவரை பற்றி, பொய்யாகவும் மோசமாகவும் சொல்வதை அவதூறு எனலாம். பொய் + மோசம் இரண்டும் கூட்டுச் சேரவேண்டும். ஒருவரை பற்றி பொய்யாகவோ நிஜமாகவோ, நல்ல விஷயத்தையோ அவ்வளவு மோசமில்லாத விஷயத்தையோ சொன்னால், அல்லது நிஜமாக இருக்கும் பட்சத்தில் என்னத்த சொன்னாலும் அதை அவதூறு என்று சொல்லமுடியாது. 
இப்போது ராஜா சொன்ன விஷயம் என்ன? நாங்க இன்ன தோழரை நம்பிப் போய், ̀அறை வாடகைக்கு தரும்படி கேட்டோம்', ̀அவர் கட்சியிடம் கேட்டுவிட்டுத்தான் தரமுடியும் என்று சொல்லி வாடகைக்கு தரவில்லை', ̀ஏழைகளுக்கான கட்சி என்கிற நம்பிக்கை போய்விட்டது' என்பது. இதில் நம்பிக்கை போய்விட்டது என்று சொல்வது அன்று ராஜாவிற்கு ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட மனப்பதிவு; அந்த உரிமை அனைவருக்கும் உண்டு; மற்றவர்கள் வேறு மாதிரி முடிவுக்கு வரலாம். தகவலாக அவர் சொல்வது அறை வாடகைக்கு கேட்டோம், தரவில்லை என்பது. கவனிக்கவும் இந்த தகவல் பொய் என்று ஒருவர் -வசைபாடிய இத்தனை பேரில் ஒருவர் கூட- மறுக்கவில்லை; சும்மாவேனும் கூட அவர்களுக்கு மறுக்கத் தோன்றவில்லை. 
அ. மார்க்சுக்கு தகவல், தர்க்கம், ஆதாரம் இதை முன்வைத்து பேசுவது என்றுமே பொருட்டில்லை; தோழருக்கு குடமிளகாய் பிடிக்கும் என்று சம்பந்தமில்லாததை அடுத்து பேசுவது அவர் பாணி. குமரேசனும் இளையராஜா சொன்ன தகவலை மறுக்கவில்லை; பொய் என்று சொல்லவில்லை. ஆனால் தோழர் வாடகைக்கு வீடு தராததற்கு ஒரு காரணத்தை சொல்கிறார். அதையும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.ஏ. பெருமாள்தெரிவித்ததாக சொல்கிறார். அந்த காரணம் ராஜாவுக்கு தெரியாமல் இருக்கலாம் என்று அவரே சொல்கிறார். அதாவது அவர் வாதப்படியே ராஜா பொய் சொல்லவில்லை, புரியாமல் ஏதோ சொல்லியிருக்கிறார். இதற்குத்தான் இவர்களுக்கு இவ்வளவு ஆத்திரம்.
அடுத்து புரியாமல் சொன்னதிலும் மோசமாக ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தல் விஷயம் ஒரு சப்பை மேட்டர். ஒருவர் ஊழல் செய்வதாகவோ, கையப்பிடிச்சு இழுத்ததாகவோ சொல்வது (அது பொய்யாக இருக்கும் பட்சத்தில்) அவதூறு. தன் சொந்த வீட்டை வாடகைக்கு தரமாட்டேன் என்று சொன்னதாக சொன்னதில் -அதுவும் அந்த தகவல் உண்மையாக இருக்கும் படசத்தில் - என்னப்பா அவதூறு இருக்கிறது? உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூடவா மூளை இல்லை! 
சரி, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.ஏ. பெருமாள் தெரிவித்ததாக குமரேசன் சொல்லும் காரணத்தை கவனிப்போம். 
/கட்சிக்கு ஏற்கெனவே விடப்பட்டிருந்த பின்னணியில், திடீரென சொத்து தொடர்பாக அவருடைய அண்ணன் குடும்பத்திற்கும் ஐ.மா.பா. குடும்பத்திற்கும் இடையே சிக்கல் ஏற்பட்டு, வழக்கு நீதிமன்றம் சென்றுவிட்டது என்று தெரிவிக்கிறார் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.ஏ. பெருமாள். ஆகவே ஐ.மா.பா. அறையை வாடகைக்கு விட முடிந்திருக்காது என்பதை எவரும் ஊகிக்கலாம்/ 
சொத்துத் தகறாறு ஆகி கோர்ட்டில் இருக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அங்கே தொடர்ந்து இயங்கலாம், இவர்களுக்கு ஒரு அறையை வாடகைக்கு விட முடியாது என்கிற குழப்பமான நடைமுறை சிக்கலை நான் ஏற்றுத் தொலைக்கிறேன். ஆனால் அந்த காரணத்தையே வெளிப்படையாக சொல்வதில் தோழருக்கு என்ன பிரச்சனையோ? 'கட்சியிடம் கேட்கவேண்டும்' என்று ஏன் சொன்னார்? சொன்ன காரணத்தை கேள்வி கேட்காமல் ஏற்பதன்றி, இப்படி லாஜிக்கலாக கேள்வி கேட்டுக்கொள்வது கம்யூனிஸ்டுகளுக்கு ஒவ்வாது என்பதை தவிர வேறு பதில் எதுவும் இதற்கு கிடையாது. 
ஆக ஒரு சப்பை மேட்டரை, அதுவும் பொய்யில்லாத ஒரு விஷயத்தை சொன்னதற்குத்தான் கும்பலாக இவர்கள் வசைபாடிக்கொண்டு இருக்கிறார்கள். தோழர்களை பற்றி உண்மையை சொன்னால் கூட அதற்கு பெயர் அவதூறு; அவர்கள் மற்றவர்களை என்ன கேவலமாக பேசினாலும் அது அவர்களின் அரசியல் உரிமை. இதே மார்க்ஸ் எவ்வளவு பேர்களை பற்றி ஆதரமின்றி அவதூறு செய்திருக்கிறார். ̀மார்க்ஸ் செருப்பாலடித்தால் கூட வாங்கிக் கொள்வேன்' என்று சொன்ன ராஜன்குறையை, தனக்கு ஒத்துவராமல் பேசிய காரணத்திற்காக 'தொகாடியா ரேஞ்சிற்கு பேசுவதாக' மார்க்ஸ் சொல்லவில்லையா! நீண்டகாலம் பழகிய நண்பரை -கருத்து ஒத்துவராததால் - பார்பன சூழ்ச்சி செய்வதாக சொல்லவில்லையா!
அந்த பேட்டியை பார்க்கும் பாமரனுக்கும் புரியும், ராஜா சாதாரணமாக அன்று தன் வாழ்வில் ஏற்பட்ட மனப்பதிவுகளை முன்வைக்கிறார் என்பது; இந்த பேட்டி மட்டுமல்ல எல்லா இடங்களிலும் தன் மனப்பதிவுகளை மிகுந்த நேர்மையுடன், துல்லியமான தொடர்ந்த கன்சிஸ்டன்சியுடன், எதை பற்றியும் யாரை பற்றியும் கவலைப்படாமல் முன்வைத்து வருகிறார். அதை நாம் ஏற்பதும் மறுப்பதும் வேறு. ஆனால் அதை அற்பத்தனமாக புரிந்து கொண்டு, பொதுப்புத்தியின் முட்டாள்தனத்துடன் எதிர்வினை செய்வதைத்தான் தமிழ் சமுகம் செய்து வருகிறது. ஒரு மூத்த இசைக்கலைஞரை தான் அவமானப்படுத்தி விட்டதாக ராஜா வாக்குமூலம் தருவதும், வருந்துவதும் இந்த நேர்மையின் வெளிபாடே! அதையும் இந்த அற்பர்கள் திரிக்கிறார்கள். 
இவர்களுக்கு என்ன பிரச்சனை? கவனிக்க வேண்டும். தொடர்ந்து ராஜா ரசிகர்கள் தொட்டா சிணுங்கிகளாக எதிர்வினை செய்வதாக சொல்கிறார்கள். இளையராஜா மீது அவதூறுகளும், வெறுப்புகளும், வசைகளும், பொய்களும், முன்முடிவுகளும், அபத்தமான கூற்றுகளும், முட்டாள்தனமான தீர்ப்புகளும் ஆயிரம் பக்க புத்தகம் எழுதும் அளவிற்கு தமிழ் சூழலில் புழங்குகிறது. ராஜா மீது மதிப்பும் அபிமானமும் கொண்டவன் இதற்கு எதிர்வினை செய்யாவிட்டால்தான் இயல்புக்கு மாறானது. மாறாக இந்த உதாரணத்தில் நடந்தது என்ன? ஒரு சப்பை மேட்டருக்கு, அதுவும் நடந்த ஒரு சம்பவத்தை போகிற போக்கில் சொன்னதற்கு இவ்வளவு வெறுப்பை கக்குகிறார்கள். யார் தொட்டாற்சிணுங்கிகள்? யாரிடம் பிம்ப வழிபாடு உள்ளது? யாருக்கு மனநோய்? 
இந்த மனநோயின் உளவியல் என்ன? எளிய பின்னணியை கொண்ட ராஜா இப்படி ஒரு உயர் ஆளுமையாக பேசுவதுதான் இவர்களுக்கு பிரச்சனை; இந்த உதாரணத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றியுள்ள பணிவை எதிர்பார்க்கிறார்கள். 
தோழரின் பதிவில் இன்னும் ஜாலியான விஷயங்களை பார்ப்போம். /இந்தப் பின்னணிகள் இளையராஜாவுக்கு அப்போது (இப்போதும்) தெரிந்திருக்காதுதான். ஆனாலும் இப்படிப் பேசுவது ஏன்?/ என்னப்பா லாஜிக்? பின்னணி தெரிந்து பேசும்போதுதானே 'இப்படி பேசுவது ஏன்' என்று கேட்கவேண்டும்; தெரியாமல் இருக்கும்போது வேறு எப்படித்தான் பேசமுடியும்? 
தோழர் இப்படி பதிவை ஆரம்பிக்கிறார். /“அறிவிருக்கா...” கேள்வியால் பலரையும் முகம் சுளிக்கவைத்த இசைஞானி,/ கவனிக்க வேண்டும். ஒரு வெள்ள நிவாரண பணி பற்றி பேசிக்கொண்டிருக்கும் இடத்தில், 'இந்த மனிதாபிமானம் தற்காலிகமாக இருக்க கூடாது, நிரந்தரமாக இருக்க வேண்டும்' என்று ராஜா சொன்ன மறுநொடி 'பீப் சாங் பத்தி என்ன நினைக்கறீங்க?' என்று கேட்ட பொறுக்கி பத்திரிகையாளனை பார்த்து ஒரு கம்யூனிஸ்ட் தோழர் முகம் சுளிக்கவில்லை.;அறிவிருக்கா என்று தார்மிக கோபம் கொண்டு கேட்டதற்குதான் முகம் சுளிக்கிறார். ஞாநி தொடங்கி டி என் கோபாலன் குமரேசன் வரை எல்லாரின் தர்க்கமும் எப்படி சாக்கடையில் இருந்து வருகிறது! 
அடுத்த ஜோக் /கம்யூனிஸ்ட்டுகளைக் குறைகூறினால் பலருக்கும் பிடிக்கும், “அறிவிருக்கா” எனக் கேட்டதன் கோபத்தை அது தணிக்கும் என்று கணக்குப் போட்டார் போலும்!/ நான் ஏதோ சும்மா தோழர்களை முட்டாள்கள் என்று சொன்னதாக நினைத்தவர்களுக்கு இந்த அற்புதமான தர்க்கம் சமர்ப்பணம்.
அ.மார்க்சின் பதிவு https://www.facebook.com/marx.anthonisamy/posts/979772082095516
குமரேசன் பதிவு https://www.facebook.com/theekathirasak/posts/10205763431705994

No comments:

Post a Comment