Sunday, May 8, 2016

மொழிப்பிரமை 08/032016

எம்.எஸ்.எஸ் பாண்டியனுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் ஒன்று அவர் மறைந்த சில நாட்களில் சென்னையில் நடந்தது. அழைக்கப்பட்ட விருந்தினர்களான ஓரிருவரை தவிர, முழுவதும் தமிழர்கள் நிறைந்த அரங்கில், ஜெஎன்யுவில் இருந்து வந்திருந்த பாண்டியனின் மாணவர் ஒருவர் "நண்பர்களே, நான் இப்ப ஆங்கிலத்தில பேசப்போறேன்" என்று சொல்லிவிட்டு முழுமையாக ஆங்கிலத்தில் ஒரு உரை நிகழ்த்தினார்; அவர் அதை ஏதோ ஒரு எதிர்ப்பு செயல்பாடாக செய்தது போல இருந்தது. அதாவது பிற்படுத்தப்பட்டவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்றால், தமிழை பிடித்து தொங்கிக் கொண்டிருக்க கூடாது, ஆங்கிலத்தை தங்கள் மொழியாக கைக்கொள்ள வேண்டும் என்று சொல்ல வருகிறாராம். அந்த கருத்து சரியா தவறா என்பதை இப்போது விவாதிக்கவில்லை; ஆங்கிலத்திலேயே முழுவதும் இயங்கும் கல்வித்துறை ஆளான எனக்கும் உண்மையில் இதில் தெளிவில்லை. ஆனால் தமிழில் மட்டுமே வாசித்து, தமிழில் மட்டுமே விவாதித்து, எதோ தங்களால் முடிந்த அளவு ஒரு அறிவுக் கலாச்சாரத்தை தமிழ் மூலமே உருவாக்கிக் கொண்ட ஒரு கூட்டத்தை நோக்கி, கூடியிருந்த அனைவருக்கும் புரியுமா என்பது ஒரு பொருட்டில்லாமல், ஆங்கிலத்தில் பேசியது தானுணரா ஒரு மூடச்செருக்கு அன்றி வேறில்லை. இதை ஒரு இடதுசாரி பிராமண இளைஞர் செய்திருந்தால் ஏச்சு வாங்கியிருக்க கூடும். கல்வித்துறையில் சாதிக்க ஆங்கிலத்தில் நிபுணத்துவம் கொள்ள முனையும் உற்சாகத்தில் பீடாக்கடைக்காரருடனும் ஆங்கிலத்தில் பேச நேரலாம்; இதை உளவியல்ரீதியாக புரிந்து கொள்ள முயன்றேன். ஜேஎன்யூவில் சக மாணவர்களை பார்த்தும் கூட இப்படி ஒரு நிலைக்கு வந்திருக்கலாம் என்று நினைத்தேன். 
ஆனால் இப்போதய கன்ஹைய்யா குமார் ஊடக காய்ச்சலின் போது பேச்சு என்று எதை பார்த்தாலும் ஹிந்தியில்தான் இருக்கிறது. இவர்களுக்கு எல்லாம் முன்னேற ஆங்கிலம் வேண்டாமா, குறைந்தது அவர்களுக்கு ஆங்கிலம் தெரியுமா, ஒருவேளை தீசிஸை கூட ஹிந்தியில் அளிப்பார்களோ என்றெல்லம் கூட சந்தேகமாக இருக்கிறது. மாணவர்கள்தான் என்றில்லை, ஜேஎன்யூ பேராசிரியர் பேசுகிறார் என்று வீடியோவை க்ளிக்கினால் அவர்களும் ஹிந்தியிலேயே பேசுகிறார். ஒருவேளை பாண்டியனுக்கு திமுக பின்னணி இல்லாமல் இருந்திருந்தால் அந்த மாணவர் "நண்பர்களே நான் இப்ப ஹிந்தியிலே பேசப்போறேன்' என்று சொல்லியிருப்பாரோ என்று தோன்றியது.

No comments:

Post a Comment