Sunday, May 8, 2016

நீதியின் ஊழல் 04/03/2016

ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள கஷ்டமாக இருக்கிறது. அந்த நீதிபதிகள் 'உள்ளாடையை ஏன் துவைக்கவில்லை?', "மீனை ஏன் ஒழுங்காக கழுவி சமைக்கவில்லை' என்று எழுத்து மூலம் எப்படி அவ்வளவு உண்மையாக கேட்கிறார்கள்? கையெழுத்திட்டு அளிக்கும் ஒரு ஆவணத்தில், பொதுவில் தெரிந்தால் அசிங்கமாகிப்போகும் ஒரு மிக அநீதியான நடவடிக்கையை குறிப்பிடுவது குறித்து சிறிய சஞ்சலம் கூட அவர்களுக்கு இல்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. நாம் அறிந்த கதைகளிலும் நிஜங்களிலும், கீழ்படியாத, ஒத்துவராத அலுவலரை தண்டிக்க பொய் குற்றச்சாட்டு கூறி நடவடிக்கை எடுத்ததாகத்தான் கேள்விப்பட்டிருப்போம்; நீதிபதியின் வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் எதையும் பொய்யாக புனையும் சாத்தியங்களும் நிறைய உள்ளதே. புகார் அளித்தோ, மேல் முறையீடு செய்தோ, அந்த நீதிபதி மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமல்ல, அந்த ஆணையை ரத்து செய்யக்கூட சட்டவழி எட்டாத -அல்லது இல்லாத - நிலையில், வேறு அத்துமீறல் செய்ததாக சொல்லி பொய்யாக குற்றம் சாட்டியிருந்தால், அதை மறுக்கவோ நிறுவவோ, அந்த அப்பாவி பணியாளருக்கு வாய்ப்பும் சக்தியும் இருந்திருக்காது. ஆனாலும் ரொம்ப உண்மையாக உள்ளாடையை துவைக்காததை ஒரு குற்றமாக எழுத்து மூலம் சொல்லி, 'ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?' என்று கேட்கப்படுகிறது. சட்டத்தை நன்கு அறிந்த நீதிபதி இதை அங்கீகரிக்கப்பட்டதாக கருதுகிறார்; அவ்வாறு கருதுமளவிற்கான அளவுக்கு மீறிய திமிர், ஆள்பவர்களுக்கு கூட இல்லாத இந்த திமிர் நீதி வழங்கும் அதிகாரம் உள்ளவர்களுக்கு நம் அமைப்பு அளிக்கிறது. 
இப்போது இணையம் போன்ற பொதுவெளிக்கு வந்ததால் இப்படி நாறியதே தவிர, தனிப்பட்ட ஒருவர் இதை எதிர்த்து போராடியிருக்க முடியாது. ஆள்பவர்களை விமர்சிப்பதை நமக்கு அடிப்படை உரிமையாக்கியுள்ள அமைப்பு, நீதிமன்ற அவமதிப்பு என்ற பெயரில் விமர்சனமற்ற பாதுகாப்பை இவர்களுக்கு அளிக்கிறது. இங்கே தமிழ் இணையத்தில் எவ்வளவு கிண்டலடித்தாலும், குமாரசாமி மேட்டர் பற்றி ஆங்கில மீடியாவில் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை; எதோ கூட்டல் பிழை என்று எழுதினார்களே தவிர, அதில் சாத்தியமுள்ள ஊழல் பற்றி எங்கும் விவாதம் நடக்கவில்லை. ஜெயலலிதா செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஊழலை விட பெரிய ஊழல் அல்லவா அவர் விடுவிக்கப்பட்டதை முன்வைத்து பேசப்படவேண்டிய ஊழல். மேல் முறையீட்டில் ஜெயலலிதா தண்டிக்கபட அதற்கான வாய்ப்பு என்று உள்ளது; தண்டிக்கப்படாவிட்டாலும் இத்தனைக் காலமாக விசாரிக்கப்பட்டார் என்பது யதார்த்தம். ஆனால் நீதிமன்ற ஊழல் என்பது விசாரிக்கப்படாதது மட்டுமல்ல, விமர்சிப்பது என்கிற நடவடிக்கைக்கும் அப்பால் உள்ளது.

No comments:

Post a Comment