Sunday, May 8, 2016

தேர்தல் அமைப்பு -2 24/04/2016

/”அவர் ஜெயிக்க வாய்ப்பில்லையே. ஜெயிக்க வாய்ப்புள்ள வேட்பாளருக்குத்தான் போடுவோம்” என்றார்கள். நான் ”ஐயா,நீங்கள் வாக்களித்தால் அல்லவா அவர் ஜெயிக்க முடியும்?” என்றேன். “இல்லை ,இப்போதிருக்கும் வேட்பாளர் வலிமையானவர் .அவரை தோற்கடிக்கும் அளவுக்கு வலிமையானவருக்கே வாக்களிக்கவேண்டும். நாம் வாக்களிக்கும் வேட்பாளர் ஜெயிக்க வேண்டும் இல்லையென்றால் நமது வாக்கு வீணாகிவிடும்” என்றார்கள்.
ஒருமணிநேரத்துக்கு மேலாக அவர்களிடம் விவாதித்த போதும் கூட நான் நினைப்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு சிறந்த வேட்பாளருக்கு வாக்களிப்பதுதான் வாக்காளராகிய நமது கடமை. எவ்வளவு கீழ்மகனாக இருந்தாலும் வெற்றி பெறும் ஒரு வாக்காளருக்கு நமது வாக்கை போட்டோம் என்ற நிறைவு நமக்கு ஏற்படவேண்டுமென்பது எந்த வகையிலும் ஜனநாயகத்துக்கு பொருத்தமில்லாத முற்றிலும் அசட்டுத்தனமான நம்பிக்கை. ஆனால் படித்தவர்களிடமும் இது உள்ளது./
ஜெயமோகனின் கட்டுரை வாசித்த உடனே அப்படியே எதிர்வினை செய்தேன். இப்போது சிலர் இதை மேற்கோள் காட்டியதை கண்டு மீண்டும் உடனே இந்த எதிர்வினை. 
ஜெயமோகன் அந்த 'பாமரின்' வாதத்தை அசட்டுத்தனம் என்று சொல்வது மிக விநோதமானது. உண்மையில் ஜெயமோகனும், ஜெயமோகன் சொன்னதை முன்வைப்பவர்களும் பேசுவதுதான் அசட்டுத்தனமானது; அல்லது அசட்டு லட்சியவாதம் கொண்டது. லட்சியவாதத்திற்கு ஒரு கவர்ச்சி இருப்பதால் அது அசட்டுத்தனம் இல்லை என்றாகிவிடாது. "நாம் வாக்களிக்கும் வேட்பாளர் ஜெயிக்க வேண்டும் இல்லையென்றால் நமது வாக்கு வீணாகிவிடும்” என்று சொல்வதுதான் - தேர்தல் நமக்கு தரும் வாய்ப்புகளை கணக்கில் கொண்ட - யதார்த்தத்துடன் நெருங்கிய நடைமுறை வாதமாக உள்ளது. (என் வாதம் அப்படியே இதுவல்ல.) 
தான் நினைக்கும் ஆதர்ச வேட்பாளருக்கு வாக்களிப்பதால், தான் தோற்கடிக்க நினைப்பவர் வெற்றிபெற நேர்ந்துவிடும் என்பதுதான் தேர்தல் கணக்கின் கொடூர யதார்த்தம். தான் தோற்கடிக்க நினைப்பவரை தோற்கடிக்கக் கூடிய வலுவானவர்க்கு அதனால்தான் வாக்களிக்க நினைக்கிறார்கள். பல நேரங்களில், அதுவும் குறிப்பாக இன்றய காலகட்டத்தில் தேர்தலில் வாக்களிப்பது என்பது குறிப்பிட்டவரை (குறிப்பிட்ட கட்சியை) தோற்கடிப்பதைத்தான் நோக்கமாக கொண்டுள்ளது; நாற்பது வருடங்களாக உள்ள தேர்தல் கரிசனம் தோற்கடிப்பதை மையப்படுத்தித்தான் நடக்கிறது. இது ஆரோக்கியமானது என்று சொல்ல வரவில்லை. இந்த தேர்தல் அமைப்பு வாக்காளர்களுக்கு உண்மையாக அளிக்கும் வாய்ப்பும் அதுதான். இந்த தேர்தலிலிலேயே 'லட்சியவாதமாக' யோசிக்கும் பலரின் அணுகுமுறைகளால் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வரும் பேராபத்திற்குதான் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. 
வலுவானவர்களாக தோற்றமளிப்பவர்களை தவிர்த்து, வலுவற்ற நமது லட்சிய வேட்பாளருக்கு அளிக்கும் வாக்கு - தேர்தலின் உண்மையான நோக்கத்தை பொறுத்த மட்டில்- வீணாகவில்லை என்பதற்கு இவர்கள் எந்த உருப்படியான வாதத்தையும் முன்வைக்கவில்லை. ரொம்ப காலமாக சொல்லப்படும் நைந்துபோன ரொமாண்டிக்கான லட்சியவாதத்தை மட்டுமே முன்வைக்கிறார்கள். இதை 70, 80களில் முன்வைத்த துக்ளக் கூட, இப்படி அண்மைய 25 ஆண்டுகளில் பேசுவதில்லை என்பதை கவனிக்க வேண்டும். இந்த லட்சிய வாத்த்தை பொதுவில் பேசும் பலர், அதற்கு நேர்மாறாக திமுகவை தோற்கடிக்க ஜெயலலிதாவுடனோ, விஜயகாந்துடனோ சமரசம் செய்ய தயாராகா இருப்பதையும் கவனிக்க வேண்டும்.
லட்சியவாதத்தை முன்வைத்து பேசுவதில் தவறில்லை. அதற்கான நடைமுறை முகாந்திரம் நாளையோ இன்றோ கூட தோன்றலாம். ஒருவேளை ஜெயமோகனே கூட, 'இன்று நாம் நம் லட்சிய வேட்பளருக்கு வாக்களித்து ஒரு புதிய போக்கை தோற்றுவித்தால், ஒரு இருபது வருடங்களில் உண்மையான மாற்றம் நிகழும்' என்று சொன்னால் அதில் பொருளுண்டு. ஆனால் இருக்கும் சாத்தியங்களை உணர்ந்து நடைமுறைவாதியாக செயல்படுபவரை அசட்டுத்தனம் என்று வர்ணிப்பது அறிவுமல்ல, நாகரிகமும் அல்ல.

No comments:

Post a Comment