Sunday, May 8, 2016

பொங்கல் (எதிர்வினை)

பொங்கல் தமிழ் உணவுதான்; இந்தியாவின் பிற பாகங்களிலும் அதை போலவே பருப்பு, அரிசி, மிளகு, ஜீரகம், நெய் கலந்து வேறு பெயரில் டிஷ் ஏதாவது செய்து உண்டாலும் கூட, பொங்கலை தமிழ் உணவு என்று சொல்லிக் கொள்வதில் எந்த முரண்பாடும் இல்லை. நம் பொங்கலை அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கலாம்; நாமே கூட கிச்சடியை பொங்கலாக நமக்கேற்ப மாற்றி எடுத்து கொண்டாலும் அதில் தமிழ் தன்மை இல்லை என்றாகிவிடாது. அப்படி எல்லாம் தூய தமிழ்தன்மை தமிழ் மொழிக்கே கிடையாது என்கிற போது, உணவுக்கும் பண்டிகைக்கும் இருக்க வாய்பில்லை. ஒருவேளை இந்துக்கள் மட்டுமே, இன்னும் குறிப்பாக சில ஜாதிகள் மட்டுமே பொங்கல் உண்ணும் பழக்கத்தை வைத்திருந்தாலும் கூட, அதை தமிழ் உணவு என்று சொல்லிக் கொள்வதில் தவறு இல்லை; அதை பொங்கி புசிக்கும் மைய மரபு, மற்றவர்கள் அதை உணவாக அணுக தடை இல்லாத பட்சத்தில் அது தமிழர்க்கான பொது உணவுதான். பொங்கலில் ஹலால் பிரச்சனை கூட இல்லை. 
பொங்கல் பண்டிகை குறிப்பிட்ட கடவுளை முன்னிறுத்தாமல், சூரியனையும் விவசாயத்தையும் முன்னிறுத்துவதால், அதில் நரகாகாசூரன் கிருஷ்ணன் போன்ற பிரச்சனைகள் இல்லாததால், ஒரு ஆதி பழங்குடித்தன்மை அதற்கு இருப்பதால் அதை தமிழர்களின் மதம் தாண்டிய பண்டிகை என்று கொள்ளலாம் என்று தோன்றுகிறது. கொண்டாடுபவர் ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் கூறுகளை ஆராய்வதை விட, அதை யார் விரும்பினாலும் தங்களுக்கு ஏற்ப ஒரு தமிழர் பண்டிகையாக தகவமைத்துக் கொள்வதற்கான சாத்தியங்களை ஆராய்வதுதான் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். அந்த வகையில் விதண்டாவாதமாக பொங்கலை பற்றி நிறைய சொல்லலாம்; எதைப்பற்றியும் சொல்லலாம். பண்டிகைகளின் தேவைகளை அங்கீகரித்து ஆக்கபூர்வமாக சிந்தித்து பொங்கலை உண்மையான தமிழ்ப்பொது பண்டிகையாகவும் மாற்றிக் கொள்ளலாம். எல்லா பண்டிகையையும் கூட இப்படி அணுகலாம் என்றாலும், பொங்கலிடம் அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

No comments:

Post a Comment