Tuesday, May 25, 2010

நாடு கடந்த தமிழீழ அரசு.

நாடு கடந்த தமிழீழ அரசு குறித்த ஷோபாசக்தியின் கட்டுரை மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு. அதை இங்கே ஒரு குட்டி பதிவாக வரும் நாட்களில் எழுதலாம் என்று நினைத்திருந்தேன். முதலில் இலங்கையில், ஈழத்தில் தீவிரமாக எத்தனையோ நடப்பதும், அதை கேள்வி கேட்க நாதியில்லாமல் இருக்கும் கொடூர யதார்த்தத்தில் (நடந்ததை கேட்பது வேறு) நாடு கடந்த அரசு என்ற 'வேடிக்கையை' விமர்சிப்பதை முதற்கரிசனமாக ஷோபாசக்தி கொள்வதே எனக்கு மிகவும் பிரச்சனைக்குரியது. ஆனால்    'உங்களின் அரசியல் விருப்புகளிற்கு ஈழத்து மக்களை நீங்கள் பலிகொடுக்க முடியாது. எதிர்கால ஈழத் தமிழர் அரசியல் இயங்குதிசை அவர்களால் மட்டுமே தீர்மானிக்கப்படும். உறுதுணை மட்டுமே உங்களது வேலை.' என்ற அளவில் சோபாவை ஏற்பதாக ட்விட்டரில் எழுதியிருந்தேன். இதை தொடர்ந்து பெயரிலி எழுதிய ட்விட்களில் உள்ள பல கருத்துக்களை நான் ஏற்கிறேன். சொல்ல போனால் அடிப்படையில் கிட்டதட்ட முழுவதுமே எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் நான் முன்வைக்கும் மொழி மாறியிருக்கும். வேறு சில விஷயங்களை சொல்லியிருப்பேன்.

இவை இப்படியிருக்க நாடு கடந்த அரசு குறித்து எனக்கு பெரிய நம்பிக்கைகள் எதுவும் இல்லை. ஆனால் இப்படி ஒரு அரசியலை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருப்பது தேவை என்றே நினைக்கிறேன். இது அரசியல் அல்ல, அரசியல் என்பது இடது சாரித்தனமாக (சாதிய எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு எல்லாமே இதில் சேர்த்தி) பேசுவது மட்டுமே என்று ஷோபா வலியுறுத்துவது போல் நான் கருதவில்லை. சோபாசக்தி கேடாக, கேவலமாக நினைக்கும் முதலாளித்துவ ஏகாதிப்பத்திய அரசாங்கத்திடம் மனு சமர்ப்பிப்பது கூட தேவை, சோபா அ.மார்க்ஸ் போன்றவர்கள் முன்வைக்கும் அரசியலை விட நடைமுறைக்கு யதார்த்தத்திற்கு தேவையானது என்று நினைக்கிறேன் - அதில் சிலரது சுயநலன், ஊழல் என்பன இருந்தாலும். நாடுகடந்த அரசு என்பதை சாக்காக வைத்து அடக்கு முறையை இலங்கை அரசு தர்க்கப்படுத்தி அவிழ்த்துவிடும் என்பது ஒரு ஏற்கத்தக்க வாதமாக எனக்கு தோன்றவில்லை. தற்சமய இலங்கை அரசு ஈராக் தாக்குதலின் போதான அமேரிக்க திமிரை விட அதிக திமிருடன் இயங்கி வருகிறது. அமேரிக்கா ஐநா அங்கீகாரத்துடன்தான் ஈராக் மீது படையெடுக்க விரும்பியது. அங்கீகாரம் கிடைக்காவிட்டால் அங்கீகாரம் தேவையில்லை என்பதை உலகுக்கு உணர்த்தும் வாய்ப்பாக அதை எடுத்துக் கொண்டு தான் நினைத்ததை நிறைவேற்றியது. இலங்கையும் அதே நிலையில்தான் உள்ளது. தமிழ் மக்களின் அரசியல் சார்ந்து இலங்கைக்கு எந்த அழுத்தமும் தர வாய்பில்லாத, எந்த நியாய அங்கீகாரமும் தேவையில்லாத நிலையில்தான் உள்ளது. ஆகையால் ஷோபாசக்தியின் கட்டுரையில் உள்ள ஒரே முக்கிய பாயிண்டான இந்த *புதிய* அடக்குமுறை வரும் என்ற வாதமும் எனக்கு சரியாக படவில்லை.

பெயரிலி எழுதிய ட்விட்களை அவர் ஒரு பதிவாக விரிவாக எழுத வேண்டும் என்பது என் வேண்டுகோள். அதை செய்வாரா என்பது தெரியாததால் அவரது ட்விட்களை ஒன்று சேர்த்து கீழே பதிகிறேன். இனி இதாலிக்கில் வருவது பெயரிலி எழுதியது என்பதை நினைவில் வைத்து வாசிக்கவும். அப்படியே வெட்டி ஒன்றுஇ சேர்த்து ஒட்டியது மட்டும் என் வேலை. இதில் அவருக்கு ஆட்சேபம் இருக்கும் பட்சத்தில் நீக்கிவிடுவேன்.

சோபா போன்றவர்களும் இன்னும் பலரும் பொதுவாக இதனைச் சொல்லிவிட்டுப்போகின்றார்கள். ஆனால், அதற்கான இவர்களது செயற்றிட்டம் என்ன? ஈழத்தமிழரின் அரசியல் இயங்குதிசை அவர்களாலேதான் தீர்மானிக்கப்படும். உண்மை. ஆனால், இன்றைக்கு அவர்களின் நிலைமையும் வருமானமும் என்ன? உல்லாசப்பிரயாணத்துறையிலே வரவீட்டுதலா? அவர்களின் குடியிருப்புகளிலே நடக்கும் சிங்களக்குடியேற்றங்களுக்கு யார் குரல்கொடுப்பது?

ஸ்ரீலங்கா அரசின் செயல்களையெல்லாம் புலிகளிலே போட்டுவிட்டு, சிங்கள, முஸ்லீம் மக்களோடு ஆரத்தழுவுவோம் என்று சொன்னால், கைதட்டி வரவேற்கப் பலரிருக்கின்றனர். இந்தியர்கள், மார்க்ஸியர்கள், தலித்தியவாதிகள், உதிரிகள்,மாற்றுக்கட்சிகளென்று சொல்லிக்கொள்கின்றவர்கள்.   
சொல்லப்போனால், இலங்கையிலே இனப்பிரச்சனைக்குக் காரணமே விடுதலைப்புலிகள்தான் என்று கையைக் கழுவிவிட்டுப்போக எல்லோருக்கும் வசதியாகிவிட்டது :-(

நாடுகடந்த அரசு என்பதிலே எனக்கு உடன்பாடு பெரிதுமில்லை - அது விடுதலைப்புலிகளின் எச்சமாக ஷோசபோல ஆங்கிலச்செவ்விகளிலே தனக்கான போராளிவிம்பத்தை உருவாக்கிக்காட்டிக்கொள்ளும் ஆட்களுக்கும் எடுத்ததற்கெல்லாம் பாசிசம் பினாமி சியோனிசம் என்று அரசியல்நடைமுறைப்பாதிப்பு எதுவும் இல்லாமலே கதறும் ஸ்ரீரங்கன், ரயாகரன் போன்றோருக்கு வாய்ப்பந்தல்போட வசதிப்படுவதாலே. ஆனால், குறைந்தளவு அகிலம் தழுவிய ஓர் அழுத்தத்தை இலங்கை அரசுக்கு ைக்கின்றோமென்ற திட்டமேனும் அவர்களிடமிருக்கின்றது. ஷோபாவுக்கும் லும்பினி அ. மார்க்ஸுக்கும் ஸ்ரீரங்கனுக்கும் ரயாகரனுக்கும் என்ன திட்டம்?   

நாடுகடந்த அரசு என்ற தலைப்பினை பாலஸ்தீனம், செச்சினியா, தென்சூடான் போன்றவற்றின் அடிப்படையிலே அவர்கள் பேசும் குரலுக்காக அமைத்தனர் எனமுடியாதா? பாலஸ்தீனியருக்கு என்றால் சரி, ஈழத்தமிழருக்கென்றால் இவர்களுக்கு ஆயிரம் கேள்விகள். நாடுகடந்த அரசு என்றில்லாமல் ஈழப்பாட்டாளிகளின் கூட்டாளிகள் என்று தலைப்பினைப் போட்டுவிட்டு இருந்தால், ஈழத்திலே இருப்பவர்களுக்கு எல்லாப்பிரச்சனையும் தீர்ந்துவிட்டதாக அர்த்தப்படுமா? இப்படியாக அமுக்கிவிட்டுத் தாமும் பேட்டிகளும் போஸுகளும் பதிவுகளும் மட்டும் போட்டுக்கொண்டிருந்தால், இவர்களுக்கும் அ. முத்துலிங்கத்துக்கும் என்ன வித்தியாசம்? போய் groundviews முதல் கொஞ்சம் அரசியலிலே நிதானம் நிற்க எழுத முயலும் இடங்களிலேகூடப்பாருங்கள். status quo..

  
விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாதிகள் ஒழிந்துவிட்டார்கள். இனியேனும், ஸ்ரீலங்கா அரசு என்ற புள்ளியிலேதான் தொடங்கமுடியும் - ஓரிரு விதிவிலக்கு. முஸ்லீங்களைக் கொன்றார்கள் என்று "வன்னிப்"புலிகளையே இன்னும் காட்டும் இவர்களுக்கு அந்நேரத்திலே விரல்காட்டிய "கருணா"ப்புலிகளைப் பத்திரமாகக் கொழும்பிலே கொண்டுபோய்ச்சேர்க்கமுடிகின்றது. டக்ளஸ் தேவானந்தாவுடன் எதுவரை பௌஸருக்கு எதுவிதமான அரசியற்றொடுப்பும் இல்லையென்று மனிதாபிமானம் முன்னிட்ட செவ்வியை அவருக்குக் கொடுத்த ஷோபாசக்தி சொல்வாரா? செய்த தவறுகளையும் ஏன் ஸ்ரீலங்கா, இந்தியஅரசுகள் இழைத்த குற்றங்களையும் விடுதலைப்புலிகள்மீது தள்ளிவிடுவது இவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆதரவாளர்களும் இந்நாள் திடீர்மனிதக்காவலர்களுக்கும் வசதி.

கொல்லப்பட்ட அப்பாவிமுஸ்லீங்கள், அப்பாவிச்சிங்களவர்கள் என்று உருகும் இவர்களிலே ஒருவருமே இந்த அப்பாவிகளிலே எத்தனைபேர் ஸ்ரீலங்கா இராணுவத்தின் மேற்பார்வையின் கீழே இயங்கிய 'ஜிகாத்', ஊர்காவற்படையினர், தமிழர்தாய்நிலத்திலே குடியேற்றப்பட்ட பழைய சிறைக்கைதிகள் என்பதைப் பேசுவதில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதம், இந்துத்துவவாதிகளுக்கு எவ்விதத்திலும் குறைந்ததில்லை. ஒன்றை ஆதரித்து மற்றைதைமட்டும் தேர்ந்தெடுத்து எதிர்க்கும் அ. மார்க்ஸின் சீடர்களிடம் லும்பினி ஞானத்தை எதிர்பார்க்கமுடியாது லும்பன் தனத்தைத்தான் எதிர்பார்க்கமுடியும்.

ண்டும் கேட்கிறேன்; நாடுகடந்த அரசினை எதற்காக எதிர்க்கின்றார்கள்? உருத்திரகுமாரன் அதிலே இருக்கின்றார் என்பதற்காகமட்டுமேதானா? வேறேதும் வலிதான காரணமுண்டா? நாடுகடந்த அரசினைப் பேசுகின்றவர்கள் ஈழத்திலே இண்றைக்கு இருக்கும் நிலையிலே தமிழ்மக்களுக்கு உதவக்கூடாதென்றார்களா? அவர்களின் இன்றைய துயரங்களைப் பேசக்கூடாது; ஆயுதம் வாங்கி அனுப்புகிறோம்; வீட்டுக்கொரு பிள்ளையைத் தாருங்கள் என்றா சொன்னார்கள்? எதற்காக எதிர்க்கின்றார்கள்? அரசும் இந்திய அரசும் தருகின்றதையே ஏற்றுக்கொண்டு அவர்கள் வாழ்வதே அவர்களுக்கான அரசியலாகட்டும். 1948-->1968--> என்று பின்னோர் இண்டிபாட்டா இருபதாண்டுகளின் பின்னாலே, எமது கதை, கவிதை, கார்ல்மார்க்ஸின் விதைவிந்துபரவியது எவரிடம் எப்படி கட்டுரைகள், போஸுகள், பேட்டிகளுக்குப் பங்கம் வராமல் வந்தாலே போதுமானதென்பதாகவா? குறைந்தபட்சம், விடுதலைப்புலிகள் கயமைத்தனம் கொண்டவர்களென்றாலும் இவர்கள்மாதிரியாகப் பங்கம் இல்லாது அரசியல் பேசும் வசதியோடு இருக்கவில்லையே? ஈழத்தமிழர்களையே தீர்மானிக்கவிடுங்கள்; விடுங்கள் என்று சொல்கின்றவர்களுக்கு இவர்கள் இன்றைக்கு என்னசெய்தார்கள்? என்னசெய்தாய் என என்னிடம் கேட்டால், நான் சொல்லப்போவதில்லை; அதனாலே, அவர்களும் சொல்லவேண்டுமென நானும் வற்புறுத்தப்போவதில்லை.

  
ஈழம் என்பதே சாதிமான்யாழ்ப்பாணிகளுக்கு நேர்ந்த தரப்படுத்தலின் விளைவான பழிவாங்குதலே என யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களிலே நடந்த தமிழரின்பூர்வீகபிரதேசங்கள் பறிபோதலையெல்லாம் கண்டுகொள்ளாமலே விட்டுவிட்டு ஆதவன் தீட்சண்யாபோன்றவர்களுக்குப் படம் காட்டிய தலித்தியவாதிகள் இவர்களுக்கும் சாதிமான்யாழ்ப்பாணிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் என்ன வேறுபாடு? அவரவர் அவரவருக்கான போராட்டங்களைத் தேர்ந்துகாட்டுகிறார்கள். ஆக வேலைவாய்ப்புகள்மட்டுமே இத்தனைநாட்களும் தமிழர்களுக்குகான முக்கியபிரச்சனையென்றால் சொல்ல ஏதுமில்லை. சீனாவும் இந்தியாவும் முதலீட்டு வேலை வாய்ப்புகளை உருவாக்கினாலென்ன, எவர் வடகிழக்கிலே வேலைவாய்ப்பினை உருவாக்கினாலென்ன, அதிலே வடகிழக்கிலேயிருக்கும் தமிழர்களுக்கு எத்துணை வாய்ப்பு என்பது முக்கியமானது; தவிர, இந்தவேலைவாய்ப்பு எந்தளவுக்கு அரசியல்ரீதியான ஈழத்தமிழர்களின் (சரி உங்களின் ஸ்ரீலங்கா தமிழர்களின்) எதிர்காலத்தினை நிச்சயப்படுத்தும்? "பொடியளெல்லாம் இயக்கத்துக்குப் போறங்களெண்டு தியேட்டரில புளூபிலிம் காட்டி, இரவின்மடியில் போட்டுத் திசைதிருப்பவேணும்" என்ற ஏதாவதிலே இப்போதைக்கு ஈடுபடச்செய்யும் வழிமுறைகளாகவே முடிந்துவிடுவதுபோதுமா? அரசியல்ரீதியான ஒரு முன்னெடுப்பு அவசியமேயில்லையா?

நான் சொல்லவருவதெல்லாம் இதுதான்; எல்லாவற்றுக்கும் பிரபாகரனையும் உருத்திரகுமாரையும் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருப்பது வெறுமனே எமது தப்புதலே. எனது கருத்தெல்லாம் ஸ்ரீலங்கா அரசினைச் ுட்டுவிரல்நுனியிலே வைத்திருக்க ஏதாவதொரு அகிலம் பரவிய அமைப்பு ஓரளவு திட்டத்துடன் அவசியமென்பதுமட்டுமே. அது நாடுகடந்த அரசானாலுஞ்சரி; நாடு கனன்ற ஆலானுஞ் சரி. காஸ்பர்ராஜும் பா.ராகவனும் டைனோவும் லக்கிலுக்கும் இன்னபிற தமிழகத்தலைவர்களும் அதைச் செய்யப்போவதில்லை என்பதே பரபரப்பு யதார்த்தம்; ஆங்! ஷோபாசக்தி, அ. மார்க்ஸ், தலித்திய, பெண்ணிய, புண்ணிய, மண்ணிய, என்னிய ஏனைய பிறவுங்கூட ;-)

Monday, May 17, 2010

சுய முரணும், அறிவு நேர்மையும்.

சந்தனமுல்லை அவர்கள் எழுதிய, இஸ்லாமிய பெண்கள் சுயமாக சம்பாதிப்பதற்கு எதிரான பத்வா ஒன்றை பற்றி பேசும் பதிவொன்றை முன்வைத்து, நண்பர் சுகுணா திவாகர் எழுதிய பதிவை படித்து உடனடியாக கீழுள்ள கருத்துக்களை ட்விட்டியிருந்தேன்.

// சந்தனமுல்லை பதிவை முன்வைத்த சுகுணாவின் பதிவு முழு உளறலன்றி வேறில்லை. சுய முரண்பாட்டை அறிந்தும் தெரியாமல் நடிப்பவர்களுக்கு விளக்கமுடியாது. 8:36 PM May 15th via web

அமா மற்றும் அவர் சிஷ்யர்கள்+தார்மீக ஆதரவாளர்களுக்கு சில விஷயங்களில் குறைந்த பட்ச அறிவு+நேர்மையுடன் இயங்க இயலாது என்பது வெளிப்படை.
8:37 PM May 15th via web

இவர்கள் ஆதர்சமான பெரியாரிடம் இந்த நேர்மையின்மை கிடையாது, அவர் வாதங்கள் வெளிப்படையான அறிவு நேர்மை கொண்டது. இதுதான் புரியாதது+ஆச்சரியமானது. 8:40 PM May 15th via web

ஒருவேளை பெரியாரை தாண்டி சிந்திக்கும் பின்பெரியாரிசம் இதுதானோ?
8:41 PM May 15th via web//


நான் எழுதியது ஒரு உடனடி துளி எதிர்வினை. மேலே சொன்னவற்றின் அடிப்படை பார்வையில் மாற்றமில்லை என்றாலும், சற்று நேரம் கழித்து எழுதியிருந்தால் கடுமை குறைவான வேறு வார்த்தைகளில் என் விமர்சனத்தை சொல்லியிருக்க கூடும்.

இதில் நான் குறிப்பிட்டுள்ள 'சுயமுரண்' என்பதை தன்னால் கண்டுகொள்ள முடியவில்லை என்று நண்பர் அனாதை என்னிடம் மேல் விளக்கம் கேட்டுள்ளதற்கு பதிலாக இந்த பதிவு எழுதப்படுகிறது. டிவிட்டரில் எழுத நினைத்த பதிலையே இங்கே அளிப்பதால் பதிவு கருத்து துண்டுகளாக இருக்க வாய்ப்புண்டு, முதலில் சுயமுரண் என்று நான் குறிப்பிடுவதன் விளக்கம்.

ஒரு அரசியல் சட்டகம் என்பதை நாம் ஏற்றுகொண்டால், சமூக பிரச்சனைகளை அணுக/எதிர்க்க/ஆதரிக்க நாம் கொள்ளும் முன் அனுமானங்கள் என்று சில உண்டு. இந்த முன் அனுமானங்களை இடத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வதையும், பிரச்சனைகளின் நுட்பத்திற்கு ஏற்ப அல்லாமல் நிறத்திற்கு ஏற்ப வேறு படுவதையும், முன் அனுமானங்களை கொண்டு தீர்மானிக்கப்படும் தர்க்கம் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மாறு படுவதையும் சுயமுரண் என்று சொல்லலாம். இது மற்ற சட்டகத்துடனான முரண் அல்ல; தன் சட்டகத்துனுள்ளேயே, தானே குண்டக்க மண்டக்க முரண்படுவது. முன் அனுமானங்கள் மூலம் தீர்மானிக்கப்பட்டு குறிப்பிட்ட (குறைந்த பட்சம்) இரு பிரச்சனைகளில் எழுத்தின்/எதிர்ப்பின் தீவிரம், முற்றிலும் மாறுபடுவதை சுயமுரண் என்று இந்த சந்தர்ப்பத்தில் மேலுள்ள ட்விட்களில் குறிக்கிறேன்.

சமூகம், மதம், இதர ஆண்களால் தீர்மானிக்கப்படும் நிறுவனங்கள் பெண்கள் மீது செலுத்தும் அதிகாரம், மற்றும் பெண்களின் செயலை/இருப்பை கட்டுப்படுத்துவது குறித்த சுகுணாவின் கருத்துக்களை முன் அனுமானங்கள் என்று இங்கே சொல்லலாம். அவை என்ன கருத்துக்கள் என்று விளக்க வேண்டியதில்லை. இப்போது இரண்டு பிரச்சனைகளை எடுத்துக் கொள்ளலாம். முதலாவது அண்மையில் லீனா எழுதிய கவிதையை முன்வைத்து நடந்த பிரச்சனைகள். இதில் லீனாவின் கவிதை எழுதும் உரிமை மட்டுமில்லாது, அதையும் தாண்டி சுகுணா அளித்த ஆதரவு பதிவாகியுள்ளது. இரண்டாவது மேலே குறிப்பிட்டுள்ள ஃபத்வா பிரச்சனை. இந்த இரண்டில் ஒன்றில் சுகுணா கலகவாதியாகவும்,எல்லையற்ற சுதந்திரம் கொண்ட மனித விடுதலையை ஆதரிப்பவராகவும் இருக்கிறார். இன்னொன்றில் வழவழ கொழகொழக்கிறார். இதைத்தான் சுயமுரண் என்று குறிப்பிட்டுள்ளேன். என்ன சொல்ல வந்தேன் என்பதை இதற்கு மேல் விளக்க தேவையில்லை என்று நினைக்கிறேன்.

பெரியாரை நான் இழுத்தது சுய முரண் பற்றி பேசும் போது அல்ல, அறிவு நேர்மை என்பதை பற்றி பேசும் போது. சுய முரண் என்பதே இல்லாமல் அரசியல்ரீதியாக இயங்குவது சாத்தியமல்ல; வாழ்வது நிச்சயமாக சாத்தியம் அல்ல. இந்த இடத்தில் முதல் பிரச்சனை இந்த சுய முரணின் தீவிரம்; அடுத்தது சுயமுரணை சமாளிப்பது அல்லது மழுப்புவது.

மார்க்சிய திருவுருக்கள், மார்க்சிய கருத்தியல்களை பாலியல் சொல்லாடல்களுடன் கலந்த கவிதை என்று ஒன்றை சமைப்பதற்கான உரிமை என்பது நானும் ஆதரிக்கும் ஒரு விஷயம். ஆனல் இது நாம் முதன்மையாக கரிசனம் கொள்வதற்கான ஆதார உரிமை அல்ல. மாறாக பொருளீட்டுவது என்பது ஆதார உரிமை. தன் இருப்பையும், சுதந்திரத்தையும் குறைந்த பட்ச அளவில் தக்கவைக்க தேவையான அடிப்படை உரிமை. இந்த இரண்டு பிரச்சனைகளில் சுகுணாவின் கரிசனமும் தீவிரமும் நேர்மாறான தலைகீழ் விகிதத்தில் உள்ளது. அடுத்து அறிவு நேர்மை என்பதை சுயமுரண் என்று எதுவுமே இல்லாமல் இயங்குவது என்று நான் குறிப்பிடவில்லை. சுயமுரண் என்று இருப்பதை acknowledge செய்து வெளிப்படையாக ஒப்புகொள்வதையே அறிவு நேர்மை என்கிறேன். பெரியார் இஸ்லாத்தையும் சில சந்தர்ப்பங்களில் தீவிரமாக விமர்சித்தார். ஆனால் அவர் இஸ்லாத்துடன் பொதிவான உறவு கொண்ட சந்தர்பங்களில் தனது சுய முரண்கள் குறித்து மிகுந்த சுய உணர்வடன் இருந்ததையும், அதை வெளிப்படையாக முன்வைக்கும் நேர்மையும் அவரிடம் இருந்ததை காணலாம்.

இந்த பிரச்சனை குறித்து நான் கருத்து கூற ஒரே காரணம் சமூக யதார்த்தத்தில் மத கண்காணிப்பில் நடந்து வரும் மாற்றங்கள். கடந்த 10 ஆண்டுகளில் உலக வஹாபிய பாதிப்பில் தமிழ் இஸ்லாமிய சூழலில் நடக்கும் மாற்றங்கள், பெண்கள் மீதான புதிய கண்காணிப்புகள், கட்டுப்பாடுகள். இவை எங்கோ உலக மூலையில் நடப்பவை அல்ல, நம் கண் எதிரே தமிழ் சூழலில் சமூக புழக்கத்தில் காணக்கூடிய விஷயங்கள் இவை. இது குறித்த அக்கறையிலேயே என் நிலைபாட்டை குறைந்த பட்சமாக பதிவு செய்ய ட்விட்டினேன்.

இவைகள் ஒரு பிரச்சனையே அல்ல; இந்த பிரச்சனைகளை விட முதலீட்டியமும், தமிழ் தேசியமும்தான் இன்றய ஒரே பிரச்சனை என்று சிலர் நினைக்கலாம். தாராளமாக நினைக்கட்டும். முக்கியமில்லாத பிரச்சனைகள் குறித்து -குறிப்பாக மத அடக்குமுறைகளுக்கு ஆதரவாக வாவது குறைந்த பட்சமாக - கருத்து சொல்லாமலாவது இவர்கள் இருக்கும் வரை பிரச்சனையில்லை. அ.மார்க்ஸ் போன்றவர்கள் இஸ்லாமிய மத அடிப்படைவாதத்திற்கு தார்மீக நியாயங்களை கட்டமைத்து வழங்குவார். ராஜன்குறை போன்றவர்கள் அதற்கு நடைமுறை அரசியல் என்று ஒரு நியாயம் வழங்குவார்கள். அ.மார்க்ஸை அப்படியே நகலெடுக்கும் நடையிலேயே சுகுணாவின் பதிவும் எழுதப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் விமர்சன பூர்வமான கேள்விகளை எழுப்பவாவது வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இறுதியாக நாம் வெளியில் இருந்து கொண்டு (இஸ்லாமியராக இல்லாமல்) இஸ்லாத்தை விமர்சிப்பதன் சிக்கல்களை முன்வைத்து நான் பல முறை கருத்து சொல்லியுள்ளேன். மீண்டும் அதை பதிவு செய்யலாம். ஆனால் இங்கே அந்த கேள்வி பொருத்தமில்லாதது. வெளியில் இருந்து பேசுவதில் பிரச்சனை என்றூ தோன்றினால் பேசாமலாவது இருக்க வேண்டும். தீவிர பிரச்சனைகளில் மத அடிப்படைவாதத்திற்கு வக்கலத்தாக இவர்கள் பேசுவதுதான் பிரச்சனை, அதற்குதான் விமர்சனமே தவிர 'அல்லாமல் பேசுவதில்' உள்ள பிரச்சனைகள் வேறு விஷயம். (என் கருத்தை சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், உள்ளிருந்து எதிர்ப்பும், போராட்டமும் யதார்த்தத்தில் இல்லாத, வர வாய்பில்லாத நிலையில் வெளியிருந்து பேசவாவது வேண்டும். அதாவது பேச மட்டுமாவது செய்ய வேண்டும்.)

சுகுணாவின் பதிவை விட முக்கியமாக கொள்ள வேண்டிய அரசியல் பிரச்சனைகள் உண்டு. ஆனால் இந்த விஷயத்தை பற்றிய என் நிலைபாட்டை வெளிப்படுத்துவது எனக்கு முக்கியமானது. அதனால் சின்னதாக ட்விட்டரில் எழுதினேன். அனாதை கேட்டுகொண்ட காரணத்தால் இந்த பதிவை எழுதினேன். சுகுணாவின் மேற்படி பதிவை வழவழ கொழகொழத்தல் என்று சொன்னது குறித்து எதுவும் விளக்கம் தரவில்லை. அதை சுகுணா என்னை கேட்டுகொண்டால் (அல்லது தேவையான எதிர்வினயைை வைத்தால்) மட்டும் செய்வேன்.

Tuesday, April 27, 2010

துளியுரைகள்-9.


 இந்திய-சிங்களப் படைகள் இணைந்து கண்காணிக்க, இனி வரும் மீனவர் மீதான தாக்குதலில் இந்தியாவுக்கும் பங்கு உண்டு என்று நேரடியாக எடுக்து கொள்ளலாம் ... 12:58 PM Oct 4th, 2008

(பாரா தொட்டு சென்றதை போல) கீ போர்டும் ஆர்கனும் தமிழ் சினிமா திரையிசையின் சாபம். சகித்து சகஜமாக்கிக் கொள்ளும் அளவிற்கு ரஹ்மான் பழக்கப்படுத்திவிட்டார் ... 1:37 PM Oct 6th, 2008

ஒரு மாதம் முன்னால் கூட வெறும் வாய்சவடால் என்றுதான் தோன்றியது; இப்போது உண்மையிலேயே பிரபாகரனையே கூட பிடித்துவிடுவார்கள் போல இருக்கிறது ... 1:00 PM Oct 7th, 2008

ஈழப்போர் இந்த விதத்தில் முடிவுக்கு வந்தால் இதை விட மோசமான நெருக்கடியை தமிழினம் அடையமுடியாது; ஒட்டுமொத்தமாய் விரட்டப்பட கூட நேரலாம். ... 1:02 PM Oct 7th, 2008

தமிழ்நாட்டு மீனவனை கொல்வதை கூட கேட்க வக்கில்லாத மாநிலஅரசு, உடந்தையாக இந்தியா; ஈழத்தமிழனுக்கு புலியின் இருப்பை தவிர வேறு நாதி இருப்பதாக தெரியவில்லை ... 1:10 PM Oct 7th, 2008

இன்றய நாதியற்ற சூழலை அடைய மற்ற எல்லாரையும் விட புலிகளின் பங்கே மன்னிக்க முடியாததாக இருக்கிறது என்பது வேறு விஷயம் ... 1:19 PM Oct 7th, 2008

இந்த சாரு என்ற முட்டாள் என்ன எழவிற்கு தனக்கு வராத, தெரியாத, குறைந்தபட்ச அறிவு கூட இல்லாத விஷயங்களை பற்றி எழுதுகிறார்! உதாரணமாய் அரசியல், இசை ... 10:55 PM Oct 8th, 2008

சாருவின் எழுத்திற்கு முக்கியத்துவம் உண்டு; அதற்கே படிக்க போகிறேன். ஆனால் ஏதோ அத்துமீறல், கலகம், குடி, யோனி என்று எழுதிவிட்டு போக வேண்டியதுதானே! ... 10:57 PM Oct 8th, 2008

சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம் பற்றிய பதிவின் முதல் பத்தியை படித்துவிட்டு எழுதுகிறேன்; என்ன ஒரு முட்டாள்தனம்! ... 10:58 PM Oct 8th, 2008

இந்தியாவில் தமிழ்நாட்டைபோல அரசியல் உணர்வும், அரசியல் சார்ந்த விவாதமும் உள்ள மாநிலம் வேறு கிடையாது;வங்காளம்/கேரளம் விஷயம் வேறு. இந்த அடிப்படை கூட தெரியாமல் பல முட்டாள்கள் ஆங்கிலத்தில் பத்தி எழுதலாம்; லொக்கல் முட்டாளுக்கு அந்த அவசியம் என்ன?! ... 11:01 PM Oct 8th, 2008

சாரு சிரஞ்சீவி பற்றிய அரைவேக்காடு கட்டுரையை எழுதியிருப்பது கலாகௌமுதியில்; 'காட்டிகொடுப்பதாக' ஜேமோவை திட்டிய ஆசாமிதான், மலையாள அரகன்ஸ் குறித்த பிரஞ்ஞையில்லாமல், தமிழ்நாட்டு மக்களை அரசியல் உணர்வற்றவர்களாக சொல்லி கட்டுரையை தொடங்குகிறது ... 6:44 PM Oct 17th, 2008

இன்னொரு கேஸ் இந்த தமிழவன்; வலம்புரி ஜான் எப்படி ஒரு அறிவாளி, திராவிட இயக்கம் அதை எப்படி நாசமாக்கியது என்பதற்கு ஆதரமில்லாமல் http://is.gd/4inE ... 12:21 PM Oct 18th, 2008

திராவிட இயக்கம் இன்றி ஜானை யாருக்கு தெரிந்திருக்கும்? வலம்புரி போன்ற ஆளுமைக்கான இடம் வேறு ஏது? தமிழவன் படித்தது எல்லாம் எங்கே போகிறது? ... 12:23 PM Oct 18th, 2008

அதாவது இலக்கிய சான்னித்தியம் இல்லையென தமிழவன் கருதும் ஒருவருக்கு, திராவிட இயக்கமன்றி சிறு பத்திரிகை வெளியில் எப்படி இருப்பு சாத்தியமாகியிருக்கும்? ... 12:28 PM Oct 18th, 2008

சரோஜா = மொக்கை + bizarre! யுவனின் இசை -எட்டுத்திசைலிருந்தும் இறக்கிய தேவையற்ற காரேமூரே பிண்ணணி. படம் சிலருக்கு பிடித்திருந்ததை புரிந்து கொள்ள முயல்கிறேன் ... 6:43 PM Oct 9th, 2008


'பொய் சொல்லபோறோம்' பார்த்தேன்; பிரம்மாதம்! சரோஜா என்ற மட்டசரக்கின் ஹேங் ஓவர் தீர்ந்தது. மலையாள தழுவல் இல்லை என நம்புகிறேன் ... 9:45 PM Oct 10th, 2008

என் பார்வையில் ஒரிஜினலான 'கோல்மாலை' விட தழுவலான தில்லுமுல்லு பல மடங்கு பிரமாதம்; அந்த ஒப்புமை குறித்து தெரியாவிட்டாலும், ஒரு திரைப்படம் தழுவப்பட்டாலும் மீண்டும் பிறப்பதாகவே நான் கருதுவதால், 'பொய் சொல்லப்போறோம்' அதனளவில் சிறந்த ஒரு படம் என்றே நினைக்கிறேன் ... 10:56 PM Oct 10th, 2008

சன்னில் செய்தி. *இந்திய கடலெல்லைக்குள்* மீனவர் மீது இலங்கை கடற்படை பயங்கர தாக்குதல்; இந்தியப்படை கூட ரோந்துக்கு சென்றதா என்று தெரியவில்லை ... 7:05 PM Oct 9th, 2008

கத்தியால் குத்தி காயத்தில் உப்பு வைத்து அனுப்பினார்களாம்! புலி என்று நினைத்துதான் இப்படி செய்ததாக ஷீலா தீகஷிட் பத்ரியிடம் சொல்லி அனுப்பலாம் ... 7:08 PM Oct 9th, 2008


தமிழின் ஒரேயொரு மாஎழுத்தாளரின் அடுத்த நாவல் 12பாகங்களில் மொத்தம் 12000பக்கங்களில் என்று அரசல் புரசல். உலகில் 12000பக்க நாவல் வந்துள்ளதா? ... 8:00 PM Oct 13th, 2008

@arulselvan (எழுதிய) அவரே 36000 பக்கங்களில் விமர்சனம் எழுதும் திறமையும், உழைப்பும், துணிவும், மடமையும் கொண்டவர் ... 12:08 AM Oct 15th, 2008 from web in reply to arulselvan

ஹரன் பிரசன்னாவுடன் பேசிய போது இந்த வதந்தி 'சரியான தகவல்' இல்லை என்றார்; ஆனால் எனக்கு கிடைத்து பூசாரியிடமிருந்து, ஒரு கை மாறி இரண்டாம் கை தகவலாக. ... 11:31 PM Oct 14th, 2008

எனது இந்தியா' பதிவின் தொடர்சிகளை படித்து மனதார சொல்றேன். ஜெயமோகனின் எழுத்துக்களை போல கயமை நிறைந்தது வேறு இருக்க முடியாது. இதை சொல்லும் நான் இஸ்லாமிய அடிப்படைவாதம், ஸெகூலர் அரசியல் சார்ந்த வன்முறைகளை விமர்சிக்கிறேன்; இந்து(இந்திய) சமுதாயத்தின் பண்மைதன்மை பற்றிய சில கருத்துக்களையும் ஏற்கிறேன்; ஜெயமோகனின் புனைவுத்திறனையும், உழைப்புயும் கூட மதிக்கிறேன். இத்தனையும் சொல்லிவிட்டு, பலவிதங்களில் பலர் சொல்லி அலுத்தது என்றாலும், ஜெமோவின் எழுத்து போல விஷத்தன்மை கொண்டது வேறில்லை என்றும் சொல்கிறேன். 9:58 PM Oct 15th, 2008

ஜெயமோகனை படித்து வரும் கோபத்தை எழுத்தில் உடனடியாய் காட்டிவிடுவது நலம்; குறிப்பாக ஜேமோவை தொடர்ந்து நிதனமாய் படிக்க அது மிக உதவும் ... 10:41 PM Oct 15th, 2008


விஜயகாந்தின் அலைமோதிய கூட்டம் கடற்கரை பக்க சென்னையை இன்று ஸ்தம்பித்தது என்றால் மிகையில்லை; காசு கொடுத்து இந்த லட்சக் கூட்டத்தை நிகழ்த்தியிருக்க இயலாது ... 12:26 AM Oct 19th, 2008

பத்து வருடத்தில் விஜயகாந்த் உண்மையிலேயே ஆட்சிக்கு வருவாரோ என்று பயமாயிருக்கிறது; வேறு பயங்களிருந்தாலும் இது தமிழகம் பற்றிய முக்கிய பயம் ... 2:04 AM Oct 19th, 2008

Zக்காரியா மீதிருந்த அபிமானத்தாலும், வீட்டிற்கு பக்கத்தில் என்பதாலும் சாருவின் ஜீரோ டிகிரி வாசிப்பு கூட்டத்திற்கு சென்றேன்; நல்ல விஸ்கியும், சில நட்புகளும் கிட்டின ... 12:15 AM Oct 19th, 2008

அச்சு பிச்சு கேள்விகள்(நானும்), எதிர்வினைகள். குறிப்பிடும் நிகழ்வு-Zக்காரியாவுடன் பேசியது உட்பட-எதுவுமில்லை; Subversionஇன் பரிமாணம் இதுதான் என்பதால் 'fuck it' என்பதை தவிர சொல்ல வேறு இல்லை ... 12:59 AM Oct 19th, 2008

(சில தொடர் ட்வீட்கள் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன.)

Saturday, April 24, 2010

துளியுரைகள்-8

சன் டீவியில் 'பள்ளிக்கூடம்'. பார்ப்பதை தொடர இயலும் ஒரு 'நல்ல' மலையாளப் படம் போல போய்கொண்டிருக்கிறது. 'ரோஸ்மேரி'பாடலின் கான்செப்ட் மட்டும் புரியவில்லை ... 6:09 PM Sep 27th, 2008

'அழகி' போல இன்னொரு திரைப்படத்தை தங்கர் எப்போது தருவார் என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். பள்ளிக்கூடம் அப்படி இருக்குமோ வென்று தோன்று வகையில் போய்கொண்டிருக்கிறது ... 6:19 PM Sep 27th, 2008

என்ன எழவுக்கு இளயராஜா இந்த படங்களுக்கு இசையமைப்பதில்லை என்று தெரியவில்லை. 6:57 PM Sep 27th, 2008


கோர்ட் சீனில் ஸ்நேகா சாட்சி சொல்லும்போது பின்னால் பெரியார் படம்! இவங்க அரசியல் விசுவாசத்திற்கு அளவேயில்லையா?! அல்லது இது மீகற்பனையா? ... 8:18 PM Sep 27th, 2008

பார்த்தாகி விட்டது; 'அழகி' போன்ற ஒரு கிளாசிக்குடன் ஒப்பிட முடியாது. ஆனால் யாருடைய கவனத்தையும் இந்த படம் ஏன் ஈர்க்கவேயில்லை? ... 8:28 PM Sep 27th, 2008

String theoryஇல் ஆராய்சி செய்யும் நண்பன் ஒருவன் சொன்ன விஷயம்: TIFR conference ஒன்றில் இழை கோட்பாட்டில் தலையாய பங்களிப்பு செய்த அறிவியலாளரிடம் நிருபர் 'Stephen Hawkingஐ பார்பதற்காக இந்தியா வந்தீர்களா? ' என்று கேட்டாராம். ... 2:02 PM Sep 29th, 2008

ஹாக்கிங்காவது யதார்த்தத்தில் அறிவியலாளர்; அறிவியலில் பங்களிப்புகள் உண்டு. நம்மூரில் அப்துல் கலாமை தலை சிறந்த விஞ்ஞானியாக, விஞ்ஞானியாகும் லட்சியத்திற்கான திருவுருவாக்கியிருக்கிறார்கள் ... 2:50 PM Sep 29th, 2008

Gazaவில் செத்தவர் செய்தியை தினமும் படிப்பது போல், இப்போது தமிழ் மீனவர்களை சிங்களப்படை சுட்டு கொல்வதை சாதாரணமாக படித்துவிட்டு அலுவலை கவனிக்கும் நிலமை ... 4:32 PM Sep 29th, 2008

இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம் நடத்துக்கிறார்களாம்! மெண்டலா? போராட வேண்டியது இந்தியாவை எதிர்த்து! ... 4:35 PM Sep 29th, 2008

உலகத்தில் எந்த இனத்திற்கு இது நடந்தாலும் கிளர்ந்து எழவும், உலகின் கவனத்தை கவரும் வகையில் செயல்படவும் கூட்டம் இருக்கும் ... 4:37 PM Sep 29th, 2008

தமிழ்நாட்டில் சுரணையற்று இருப்பது அல்ல விசயம்; திசை திருப்புவதும், கொலைகாரரகளுக்கு வக்காலத்து வாங்குவதும், பேசுபவனை தேசத்துரோகி ஆக்குவதும்! ... 4:41 PM Sep 29th, 2008

புலிகள்தான் மீனவர்களை சுடுவதாக ஒரு நாடகத்தை நிகழ்வேற்றியதையும், அதை துக்ளக் துவங்கி வலைப்பதிவு வரை பிரச்சாரம் செய்ததையும் மறக்க முடியுமா? ... 4:43 PM Sep 29th, 2008

நம் மீனவர்கள் ட்ராலரில் மீன் பிடித்து, அதனால் ஈழத்தமிழ் மீனவர்கள் பாதிப்பதால்தான் இந்த கொலைகள் நடப்பதாக ஒரு மலப்புழு என் பதிவிற்கு பதிலாக தொடர்பதிவுகள் எழுதி, அதற்கு ஜால்ராவாக கூட்டமாக பின்னூட்டம் வந்ததையும் மறக்க முடியுமா? ... 4:47 PM Sep 29th, 2008

@snapjudge என் பார்வையில் 'பொலிடிகலி இன்கரெக்ட்' என்று எதுவும் (not correct உண்டு) இல்லை; அது ரவி ஶ்ரீனிவாசின் அச்சு பிச்சு கான்செப்ட் ... 9:47 PM Sep 29th, 2008 from web in reply to snapjudge

'Political correctness'இன் ஆபாசத்திற்கு அண்மைய உதாரணம் 'கற்றது தமிழ்'. இன்னொரு உதாரணம் வேலு பிரபாகரனின் ' புரட்சிக்காரன்' ... 9:49 PM Sep 29th, 2008

'பொலிடிகலி கரெக்ட்னெஸ் கொண்ட அதே நேரம் கலையாகவும் மாறிய உதாரணம் 'அன்பேசிவம்'; அண்மைய உதாரணம் 'கல்லூரி' ... 9:51 PM Sep 29th, 2008

'தமிழ் பேச்சு, எங்கள் மூச்சு' விஜய் நிகழ்ச்சியை ஐந்து முறை முயற்சித்தும் (வெள்ளாள பரப்புரையால் ஏறும் ரத்த அழுத்தத்தில்) பார்க்க இயலவில்லை. ... 10:08 PM Sep 29th, 2008

விரிவாக அறிவுபூர்வமாக எழுத தேவை உள்ள விஷயங்களை 'விரிவஞ்சி நிறுத்தி'க்கொள்ளும் ரவி ஶ்ரீனிவாஸ், மொக்கைகளை மட்டும் விரிவாக தருவதேனோ! ... 6:49 PM Oct 2nd, 2008

Monday, April 19, 2010

இறுதியாக சில.

நடந்து முடிந்த கருத்து சுதந்திர பிரச்சனை, கண்டனம், கலாட்டா குறித்து எனக்கு மிக சிக்கலான முறையில் பலர் மீதும் பலவகையான விமர்சன கருத்துக்கள் இருந்தாலும், இதையெல்லாம் வேலை மெனக்கிட்டு பதிவு செய்யவேண்டியது முக்கியமாக தோன்றவில்லை. சில முடிச்சுகளை மட்டும் இங்கே பதிகிறேன்.

அதற்கு முன் சம்பிரதாயமாக சில. லீனாவின் கவிதை எந்த வித தகுதியும் இல்லாமல் ஒரு அதிகப்படியான முக்கியத்துவத்தையும் விளம்பரத்தையும் அடைந்துள்ளது. இப்போதாவது நேரடியாக சொல்வதென்றால் கவிதை என்ற அளவில் அதை ஒரு குப்பையாகவே கருதுகிறேன். மீண்டும் சொல்கிறேன், ஆபாசம் என்ற பார்வையில் அல்ல. பா.விஜயின் கவிதையை குப்பை என்று ஏன் சொல்வேனோ அதை ஒத்த காரணங்களால் சொல்கிறேன். அதை உலக கலக ரேஞ்சுக்கு இட்டு சென்றதில் வினவு குழுவினரின் பங்கு மறுக்கவியலாதது. அதே நேரம் வினவில் வெளிபட்ட ஆணாதிக்க எதிர்வினைகள், பெண் என்பதாலேயே அவர்கள் இன்னமும் காட்டும் பிடிவாதம், அடிக்கவும் தயாராக இருந்ததை வெளிப்படையாக ஒப்புக்கொள்வது, சமூக மதிப்பிடுகளை இந்துத்வ இயக்கங்களை போலவே இவர்களும் பயன்படுத்துவது, தர்க்கப்படுத்துவது ... இவை அனைத்தையும் எதிர்க்கிறேன். அவர்களிடம் ஏதோ ஒரு நேர்மை வெளிப்படுவதாக கருதி கூட ஆதரிக்க முடியாது. அந்த நேர்மையை நான் இன்னமும் ஆபத்தானதாக கருதுகிறேன் -போல்பாட்டிடம் வெளிபட்ட நேர்மையை போன்றது. இதைவிட நான் ஹிபாக்கரசியையே மேலானதாக கருதுவேன்.

நாகம்மையை 'தேவிடியா' என்று காங்கிரஸ் தெருவில் எழுதியதை பெரியார் எதிர்கொண்டது போல எதிர்கொள்ள வேண்டும் என்று இவர்கள் பேசுவது இருக்கும் பல அபத்த தர்க்கங்களில் ஒரு உதாரணம். சமூக மதிப்பிடுகளை ஆயுத மாக்குவதுதான் பிரச்சனையே ஒழிய, அதை எதிர்த்தாலோ எதிர்வினை செய்தாலோ, அந்த மதிப்பீடுகள் சார்ந்து செய்வதாக கொள்ள முடியாது. என்ன இருந்தாலும் பெரியாருக்கு ஆண் என்ற வசதியும் சுதந்திரமும் இருந்ததையும், அவ்வளவு எளிதில் அதை புரியாதவர்களுக்கு விளக்க முடியாது. மதிப்பிடுகள் ஆணாதிக்கமாக இருக்கும் யதார்த்தத்தில் அதை பயன்படுத்துவதும், நிராகரிப்பதுவும் இரண்டுமே ஆணுக்குதான் சாதகமானது. இன்னொரு பார்வையில் பெண்ணீயம் பேசுவதும், எதிர்ப்பதும் இரண்டுமே வேறு வேறு தளங்களில் ஆண்களுக்கு சாதகமானதே. இது பெரியாருக்கும் பொருந்தும்; எனக்கும் பொருந்தும். ஆணாதிக்க மதிப்பீடுகளை நிராகரிப்பதாலும், பெண்ணியம் பேசுவதாலும் ஆண் எதிர்கொள்ளும் தாக்குதல்கள் மிஞ்சி போனால் மனைவியை, அம்மாவை உதாரணம் காட்டுவதற்கு மேல் எதுவுமில்லை. அதை எதிர்கொள்ளும் உரம் உள்ளவர்களுக்கு அது பிரச்சனையில்லை. ஆனால் அந்த அம்மாவிற்கும், மனைவிக்கும் அது அத்தனை எளிய பிரச்சனையில்லை. இதையெல்லாம் போல்பாட்டின் பொலிடிகலி கரெக்ட்னெஸ்ஸை சுய பிரஞ்ஞையாக கொண்டவர்களிடம் விளக்க முடியாது.

இவை இப்படியிருக்க NDTV-Hindu செய்த பதிவையும், அதில் லீனாவும், அ,மாவும் அளித்த சிறு பேட்டியை மோசமான ஒன்றாக கருதுகிறேன். ஒரு ஜனநாயக அடிப்படையில் எதிர்கருத்தாக எதையும் சின்னதாக அவர்கள் பதிவு செய்யவில்லை. குறைந்த படசம் (ஹுசேன் சரஸ்வதியை நங்காவாக வரைந்தார் என்பது போல கூட அல்லாமல்) எதிர்ப்பு வந்த லீனாவின் கவிதையை பற்றி எந்த தகவலையும் தராமல் ஒருதலை பட்சமான செய்தி அது. லீனா (காரல்)மார்க்சையும், லெனினையும் metaphoricalஆக பயன்படுத்தியதாக மட்டும் விடுகிறார். மெடாஃபாரிக்கலாக பயன்படுத்தியது மார்க்ஸ் லெனினையா, யோனி, விந்து, புணர்தல் போன்றவற்றையா? தமிழ்நாட்டில் ஏதோ கலாச்சார பாசிசம் தலை விரித்தாடுவதாக சொல்வதெல்லாம் தன் கோபத்தை ஒட்டுமொத்த சமூகத்தின் மீது கொட்டும் விஷம் மட்டுமே. மற்ற இந்திய மாநிலங்களைவிட தமிழகம் இன்னமும் ஆரோக்கியமாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். NDTV தமிழ்நாட்டை ஒரு பாசிச பூமியாக காட்டும் நோக்கத்துடன் இந்த செய்திக்கு முக்கியத்துவம் தருவது லீனாவிற்கு பிரச்சனையாக இல்லாதது குறித்து நான் கவலைப்படவில்லை, அ.மார்க்ஸும் துணை போவதுதான் எனக்கு பிரச்சனை. இறுதிவரை ஈழப்போரில் zero civilian casualties நிகழ்ந்ததாக இந்து ஊடக கும்பல் சொல்லி வந்ததை விட அயோக்கியத்தனமும், பாசிசமும் வேறு கிடையாது. அ.மார்க்ஸ் கூட்டத்தில் செய்த பிரச்சனையை, ஈழப்பிரச்சனையில் தங்கள் கையாலாகாத்தனத்திற்கு அவர்கள் தேடிக்கொள்ளும் வடிகாலாக கூட கருதலாம். இப்படி சொல்லி அதை நியாயப்படுதவில்லை. ஆனால் அது பாசிசம் அல்ல. ஒரு பெரும் இனப்படுகொலையை நியாயப்படுத்துவதும், அதை மறுப்பதும்தான் பாசிசம். அதை விட மனிதநேயத்தில் அக்கறையுள்ளவர்கள் முக்கியமாக கொள்ளவேண்டிய விஷயம் வேறு கிடையாது.

அ.மார்க்ஸ் லயோலாவில் நடந்ததையும், கண்டன ஒன்று கூடலில் நடந்ததையும் தமிழ் சேனல் ஒன்றிலோ, அல்லது தமிழ் சூழலில் வேறு எங்கிலோ பகிர்ந்தால் நான் பிரச்சனையாக பார்க்க மாட்டேன். தமிழ்நாட்டில் யாரோ ஒரு புருசன் பொண்டாட்டியை அடிப்பதை கூட தமிழ்பாசிசமாக மாற்றும் கூட்டத்தின் பிரச்சரத்திற்கு ஒத்து ஊதியிருக்க வேண்டாம். ஒருவேளை அதுதான் அ.மார்க்சின் நோக்கம் என்றால் வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை.

Sunday, April 18, 2010

கடித்து எலி சாதல்.

சிறுவயதின் ஒரு மழைக்கால ஈரத்தில் மிதித்ததில், தேள் ஒன்று மிகையழுத்தம் கொண்ட மின்னதிர்ச்சி தாக்குதலாக கொட்டி, நடக்க இயலாமல், அழுகையும் வலியுமாக, மருத்துவ சிகிச்சையுடன் இரண்டு நாட்கள் தொடர்ந்தது. பாம்பு கடித்தால் சாகக்கூடிய வாய்ப்பு உண்டு என்றாலும், வலியனுபவத்தில் பாம்புக்கடி தேள்கடி போல கொடூரமாக இருக்காதாம். அவ்வளவு தீவிரமான தேள்கடி அனுபவத்தை சிறுவயதில் பெற்றும், அதில் சுவாரசியமாக சொல்ல எதுவும் இல்லை என்பது கொஞ்சம் வருத்தமானதுதான். பின், துவக்க தொண்ணூறுகளில், பெங்களூரில் நான் இருந்த கல்வி நிலையம் ஒன்றில் நட்டுவாக்களி என்ற பெரிய சைஸ் தேள்கள் மானாங்கன்னியாய் அலைந்தும் ஒரு முறை கூட கடி வாங்க நேர்ந்ததில்லை. (கடி வாங்கியிருந்தால் அந்த தீவிர அனுபவத்தையும் இங்கே பகிர்ந்து கொண்டிருக்க கூடிய சாத்தியம் மிக குறைவு. ஏனெனில் நான் அறிந்தவரை நட்டுவாக்களி கடித்தால், அந்த வனாந்திரத்தில் போய் சேருவதற்குதான் வாய்ப்பு அதிகம். ஆனால் நட்டுவாக்களி தேள்களை போல் பொதுவாக போட்டுதள்ளுவதில்லை. அதன் பிடிமானம் சரியாக இருக்காத காரணத்தால், பிடித்து வாலால் அடித்து கொட்டுவதில் அதற்கு சிக்கல்கள் உண்டு.)

தூத்துக்குடியில் வாழ்ந்த இறுதி எண்பதுகளில் கஞ்சா பழக்கம் எனக்கு அறிமுகமாகி, பின் 13 வருடங்களுக்கு தொற்றிக் கொண்டிருந்தது. கடவுள் நம்பிக்கையிலிருந்து வெளிவந்திருந்த அந்த கட்டத்தில், சிவமூலிகை என்றழைக்கப்படும் கஞ்சாவை புகைப்பதற்காகவே சிவன் கோவிலுக்கு செல்வதுண்டு. பிரதட்சணமாக வந்து கொண்டிருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும், குறிப்பிட்ட இடத்தை ஆக்கிரமித்திருக்கும் பலமான கஞ்சா மணம் தினப்படி சுவாசத்தில் கலந்து பழக்கமாகியிருக்க வேண்டும். குறைந்த பட்சம் பீடி புகைப்பதாகவாவது தோற்றமளிக்கும் அந்த கஞ்சா புகைக்கும் காட்சியை கண்டு கொள்ளமாட்டார்கள். நாங்களும் யாராவது கடக்கும்போது கைகளுக்கிடையில் மறைக்கும் மரியாதையை செய்வதுண்டு. பிரச்சனை யாரும் செய்ததில்லை. கோவில் பணியாளர்கள், கோவில் வாசலை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்று பலரும் புகைக்கும் குழுவில் அடக்கம். ஒரு இளைய பட்டரும் சில சந்தர்ப்பங்களில் ஓரிரு இழுப்பு இழுத்துவிட்டு செல்வதுண்டு. சிவன் கோவில் பிரகாரம் கஞ்சா புகைப்பதனால் மட்டும் வித்தியாசப்படவில்லை. இன்னமும் சமூக வெளியில் அங்கீகாரம் பெற்றிராததனால், காதலை கள்ளத்தனமாக வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால், காதலர்கள் கூடுவதற்கு தேவையான மாலை இருட்டையும் அது அளித்தது. நகரில் பல இடங்களில் நெருக்கடி ஏற்படும் சில சீசன்களில் கள்ளசாராயமும் கிடைக்கும்; வாங்கி சிவன் கோவில் மூலை சுவரில் ஒண்ணுக்கு அடிப்பது போன்று நடித்தபடி, அந்த சில நிமிடங்களில் குடித்துவிட்டு சுவருக்கு பின்னால் எரிந்துவிட வேண்டும்.

ஒரு முன்பகல் வேளையில், கிடைத்த ஒரு நயம் சரக்கின் போதையுடன், மூடியிருந்த சன்னதிகளின் படிகளில் சாய்ந்து பேசிக்கொண்டிருந்தோம். சின்னதாக இடுப்பில் அரிப்பு, சிறிது நேரத்தில் மெல்லிய கடுப்பாக மாறியது. எறும்பு என்று நினைத்து பார்காமலேயே தட்டிவிட்டு பேச்சை தொடர்ந்தேன். ஒரு கால இடைவெளியில் கடுப்பு கவனத்தை கட்டாயமாக ஈர்க்கும் வலுவை அடைந்ததால் எழுந்துவிட்டு பார்த்தேன். ஒரு குட்டி தேள். ஒருமுறைக்கு மேல் கடித்திருக்க கூடும். தேள் என்று அறிந்தவுடன் கடுப்பின் காட்டம் உணரத் தொடங்கியது; ஆனாலும் வலி பெருசாக இல்லை. என்ன செய்வது என்று ஐடியா இல்லை. தேள் குட்டிக்கு என்னை கடித்ததில் போதையேறிவிட்டது போலும், அசையாமல் கிட்டதட்ட மயங்கிய நிலையிலிருந்தது. "அது செத்துரும்" என்றான் கஞ்சா தோழன் உறுதியாக. செத்ததா என்று பொறுத்திருந்து ஆராயாமல், தேளை வேறு எதுவும் செய்யாமல் நகர்ந்தோம். கடித்த இடத்தில் சுண்ணாம்பு வாங்கி தடவலாமா என்ற யோசனையையும் செயல்படுத்தாமல், வேறு இடத்தில் உட்கார்ந்து இன்னொரு பீடி போட தொடங்கினோம். கடுப்பு சற்று தொடர்ந்தாலும், அரைமணி நேரம் சற்று வியர்த்து விஷம் உடலோடு செமித்துவிட்டது. கஞ்சா சித்தனாக இருந்தபோது இப்படி தேள்களிடம் கூட கலங்கியிராதவனை, நடுத்தர குடும்ப வாழ்க்கையில் செட்டிலான பின் அல்ப எலிக்கடி அலைக்கழித்தது.

ஒன்றரை வருடம் முன்பு சாந்தோமில் வாழ்ந்த வீட்டின் தரையில் தூங்கி கொண்டிருந்த ஒரு இரவில், இடது கை நடுவிரலை தேர்ந்தெடுத்து எலி ஒன்று கடித்தது. முந்தய நாள் இரவிலேயே அது காது பக்கம் கத்திரி போட முயன்றதை பிறகே ஊகித்து அறிந்துணர்ந்தேன். விழித்து பார்த்ததில் கடித்த இடத்தில் துளி ரத்தம். எழுந்து சோப் போட்டு கழுவி விட்டு தூங்கிவிட்டேன். மறுநாள் டாக்டரிடம் போயே ஆகவேண்டும் என்று துணைவி வற்புறுத்தியதில், அருகில் இருந்த குழந்தைகளுக்கான டாக்டரிடம் சென்று, டெடனஸ் ஊசி, கையில் கட்டு, ஆண்டிபயாடிக் மாத்திரைகளும் எடுத்துக் கொண்டேன். ஒரு எலிக்கடிக்கு தேவைக்கு அதிகமாக பாதுகாப்பு சிகிச்சை செய்துகொண்டுவிட்டதாக எனக்கு தோன்றியது. ஆனால் மறுநாள் வேலையிடத்தில் பெங்காலி நண்பன் தீர்த்தோ 'இது இப்படி எளிதாக எடுத்துக் கொள்ள கூடிய சாதாரணம் விஷயம் அல்ல' என்றான். 'ஆண்டிபயாடிக் போதாது, எலியிடம் ராபீஸ் இருக்கலாம்' என்றான். இதை சொல்லிவிட்டு கல்கத்தாவில் தான் சந்தித்த, முதலிலேயே கவனிக்கப்படாமல் பிரச்சனை முற்றிய ராபீஸ் நோயாளிகளை பற்றி சொல்லத்தொடங்கினான். அவை எல்லாம் நாய்கடி உதாரணங்கள் என்றாலும், வாய் உள்ள எல்லா மிருகத்திற்கும் பொருந்தும் என்றான். எனக்கு நான் எலி போல ஒடி, கத்தி சாக நேரிடுமே என்று பயம் வரும் அளவில் விரிவாக பல கேஸ்களை பேசினான். ஜெமினி படத்தில் கலாபவன் மணி ஜெயிலில் விக்ரமுடன் சண்டையிடும் கட்டத்தில் எலியாக மிமிக்ரி உருவெடுத்து நடித்த காட்சிகள் மனதில் வந்து போனது.

அவனே சென்னையில் ரேபீஸ்க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளை இணையத்தில் தேடி, தொலைபேசி விசாரித்தான். வாக்சின் பெயர்களை அவனே சொல்லி விசாரித்தது மருத்துவமனை பணியாளர்களுக்கு விளங்கவில்லை. நாய் கடிக்கு உள்ள அதே வாக்சின்தான் எலிக்கடிக்குமா என்ற என் சந்தேகத்தை அவன் பொருட்படுத்தவில்லை. இப்போழுதெல்லாம் மருத்துவம் முன்னேறிவிட்டது, ஒரே ஒரு ஷாட் போதும் என்றான். எலிக்கடி, அதற்கான ரேபிஸ் வாக்சின் தங்களிடம் இருக்கிறதா என்று தொலைபேசி எதிர்முனையில் தெளிவான பதில் இல்லை.

தொடர்ந்த செமினாரில் மற்ற கலிக்களிடம் விஷயம் சென்றது. செமினாரில் பேசவேண்டிய விஷயத்தை தொடங்காமல் எல்லோரும் என் எலிக்கடி குறித்து தெளிவில்லாமல் கொஞ்ச நேரம் பேசினார்கள். ஒரு விஞ்ஞானி நண்பர் சுண்டெலி என்கிற வகையாக இருந்தால் ஆபத்து எதுவும் இருக்க வாய்பில்லை, மற்ற எலிகள் மட்டுமே ரேபிஸ் இருக்க வாய்புள்ளது என்றார். அவர் அந்த தகவலை எங்கிருந்து பெற்றர் என்பதை குறிப்பிடவில்லை. ரேபிஸ் கிருமி கலந்த ரத்தமே என் உடலில் ஒடுவதான உணர்வு என்னையறியாமல் தொற்றியிருந்தது. என் எச்சிலை முழுங்கவே தயக்கமாக இருந்தது. அந்த எலி எங்காவது இறந்து கிடக்கிறதா என்று கவனிக்க வேண்டும் என்றான் தீர்த்தோ. எனக்கு சுஜாதா எழுதிய 'குதிரை கிச்சாமி' என்ற கதை நினைவுக்கு வந்தது. ஒருவழியாக செமினார் தொடங்கி முடிந்தபின் மீண்டும் இதை பற்றி அவர்களே பேசினார்கள். நான் உடனே கடிபட்ட இடத்தை கழுவிவிட்டதை சொன்னேன்; அது போதாது என்றார்கள். ஏற்கனவே டாக்டரிடம் போய் வந்ததை சொன்னேன்; ஒரு பீடியாட்ரிக்ஸ் டாக்டருக்கு எலிக்கடி குறித்து தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்றார் நண்பர். டாக்டர் என்பவர் ஏற்கனவே தன் அனுபவத்தில் இருக்கும் உதாரணங்களை கொண்டு இயங்குபவர், ஏற்கனவே ஒரு எலிக்கடி கேஸை அவர் எதிர்கொண்டிருந்தால் ஒழிய அவரை நம்ப தகுந்த காரணம் இல்லை என்றார். நான் இன்னொரு டாக்டரை பார்க்க வேண்டிய அவசியத்தை சொன்னார்கள். அந்த இன்னொரு டாக்டருக்கு எலிக்கடி சிகிச்சை செய்த அனுபவம் இருக்கிறதா என்று எப்படி அறிவது என்ற கேள்வியை நான் கேட்கவில்லை.

என்னுடன் மருத்துவமனைக்கு வந்தே தீருவதாக இருந்த தீர்த்தோவை ஒருவழியாக தவிர்த்து, வீட்டிற்கு வந்து துணைவியிடம் எல்லாவற்றையும் சொன்னவுடன் கலவரம் வீட்டிலும் பற்றிகொண்டுவிட்டது. இஸபெல் மருத்துமனையில் மீண்டும் எலிக்கடி குறித்து (எந்த வார்ட் என்று) ஏற்படகூடிய எல்லா குழப்பங்களையும் குழம்பி, ஒருவழியாக அங்கிருந்த ட்யூட்டி டாக்டரிடமே அனுப்பினார்கள். அவர் ரேபிஸ் நாய்மூலம் மட்டுமே பரவும், எலி பூனை போன்ற விலங்குகளால் ஆபத்து எதுவும் இல்லை. நான் அடுத்த நாளே எடுத்து கொண்ட சிகிச்சை போதுமானது என்றார். ஆனால் எலி வீட்டில் எங்காவது சிறுநீர் கழித்திருந்தால் அதன் மூலம் லெப்டோஸ்பைரசிஸ் வர வாய்புள்ளது, அதுவும் எலி கடிப்பதன் மூலம் வராது என்று சொன்னார். மழைக்காலத்தில், பழமையான அந்த வீடு பல இடங்களில் ஈரமாகியிருந்த அந்த பருவத்தில், எலி மூத்திரத்தை நான் எப்படி அடையாளம் காண்பது?

ஆனால் மறூநாள் மீண்டும் தீர்த்தோ புதிய சந்தேகங்களையும் கிலிகளையும் கிளப்பினான். எனக்கு வேறு ஒரு நண்பனின் நினைவு வந்தது. (எல்லாவற்றையும் எதிர்மறையாகவே பேசும் மிகுந்த அவநம்பிக்கையாளன் அவன்; அவனிடம், அனில் கும்ளே 10 விக்கட்டையும் எடுத்த வரலாற்று நிகழ்வை சொன்னபோது , உடனடியாக 'He can't do it again' என்றான்.) ஒருவழியாக ஒரு மூத்த பேராசிரியர் கிண்டியிலிருக்கும் கிங்க்ஸ் இன்ஸ்டிடியூட்டிற்கு போன் செய்து அதன் தலைமை பொறுப்பாளரிடம் பேசி, ஏற்கனவே இஸபெல் மருத்துவமனை டாக்டர் சொன்னதையே அவரும் சொல்வதை உறுதி செய்து சொன்னார். ஆனால் மனமூலையில் சந்தேகம் மிதமிருக்கும் வகையில் தீர்த்தோ கிலியாக்கியிருந்தான். அதற்கு பிறகு நான்கு மாதங்கள் கழித்தும் எனக்கு ஒன்றுமே நிகழாததால் அந்த எலியிடம் ரேபிஸ் கிருமி இருந்திருக்க வாய்ப்பு இல்லை என்று அதிநிச்சயமாக முடிவு செய்துகொண்டேன்.

கஞ்சா பழக்கம் எனக்கு தொடர்ந்திருந்து, தேளும் பாம்பும் கஞ்சா கிராக்கியை கடித்தால் செத்து போகும் என்கிற மரபான நம்பிக்கையின் படி எலி செத்துபோவதாக புனைந்தால், இந்த பதிவு எப்படி உருமாறியிருக்கும் என்று என் யோசனைக்கும் உங்கள் வாசிப்புக்கும் விடுகிறேன்.

Friday, April 16, 2010

துளியுரைகள்-7

Congrats Mamta-இப்போதைக்கு! CPI(M)ஐ கவிழ்த்து ஆட்சியை பிடிக்கும் லட்சியத்தை அடையாவிட்டாலும், மார்சிஸ்டுகள் சாதிக்கவெ இயலாததை சாதித்ததற்காக! 1:41 AM Sep 25th, 2008

டாடாவின் வெளியேற்றம், எந்த வித வெற்றியுமாக கருத இயலாவிட்டாலும், நிச்சயமாக தோற்கப்போகும் போராட்டத்தில் ஒரு வறலாற்று நிகழ்வு ... 1:48 AM Sep 25th, 2008

தமிழ்நாட்டு கோர்ட்டுகள் தமிழிலும் புழங்கவேண்டுமென்றதை தமிழ்வெறியாக ஆங்கில ஊடகங்களில் சித்தரித்தார்கள். இனி உச்ச நீதி மன்றத்தில் ஹிந்தியில்தான் தீர்பளிக்கவே விருக்கிறார்களாம் ... 10:14 AM Sep 25th, 2008

பிகாரில் வெள்ள நிவாரண முகாம்களில் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளை 200ரூபாய்க்கு விற்கிறார்களாம்-இன்றய DC
முதல் பக்க செய்தி. 10:17 AM Sep 25th, 2008

மீண்டும் கவனிக்கணும், ராஜ்தாக்கரேக்கு தொடரும் கண்டனங்களில் 1 விழுக்காடாவது கன்னட வெறி அரசியலின் அத்துமீறல்களுக்கு எப்போதாவது வந்திருக்கிறதா? ... 10:31 AM Sep 25th, 2008

புகைப்பழக்கம்முள்ளவனுக்கு புகைப்பதென்பது பல நேரங்களில் உந்துதலும், தேவையும், தாகமும் இல்லாத போதும், இயல்புக்கு எதிராகவும் நிகழ்கிறது; ... 2:27 AM Sep 27th, 2008

புகை பழக்கத்திலிருந்து விடுதலையடைய அன்றய எல்லா சிகெரெட்டையும் தொலைக்க வேண்டும்; மிக கடினமான அந்த சாகசத்திற்கு பின் 0க்கு திரும்ப ஒரு இழுப்பு போதும் ... 2:32 AM Sep 27th, 2008

பல வருடங்கள் புகை பழக்கத்தில் கழித்து, விட்டு விடுதலயாகி, பின் புகைக்காதன் உண்மை சுகத்தை உணர ஆண்டுகள் ஆகும்; பின் திரும்ப பழைய நிலைக்கு வர வாழ்வில் எல்லாம் தோற்றவனுக்கு கூட மனசு வராதென நினைக்கிறேன் ... 2:36 AM Sep 27th, 2008

நான் புகைப்பதை தொலைத்து 5வருடங்களாகிறது; இப்போதும் சிகெரட் மணம் கவர்ந்திழுக்கிறது; passive smoking மிகவும் பிடிக்கிறது ... 2:56 AM Sep 27th, 2008

மாதங்களுக்கு இடையில் ஒரு தம் யாரிடமாவது வாங்கி இழுப்பதுமுண்டு. ஆனால் புகைக்காததன் அமைதியை இழக்காமலிருப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன் ... 2:57 AM Sep 27th, 2008

@anathai புகைப்பதை முன்வைத்து எழுதிய குறிப்புகள் புகைத்தலை மட்டும் குறிப்பவை அல்ல! ... 8:45 AM Sep 28th, 2008 from web in reply to anathai

Wednesday, April 14, 2010

இடியட்டும் கோபி கிருஷ்ணனும்.

பைத்தியக்காரனின் பதிவில், சென்றதற்கு முந்தய ஞாயிறு திரையிடப்பட்ட 'இடியட்' திரைப்படம் குறித்த ராஜசுந்தரராஜனின் பார்வையாக பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. பதிவில் நான் சற்றும் எதிர்பாராமல், (ஒருவேளை ஆழ்மனதில் மிகவும் எதிர்நோக்கியிருந்த), கோபி கிருஷ்ணனின் பெயரை அவர் குறிப்பிட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தாஸ்தேயெவ்ஸ்கியின் நாவலை நான் படித்ததில்லை (18 வருடங்களாக கைவசம் இருந்தும்). குரோசவாவின் படத்தில் இடியட்டான கமெதா, தாயெகோ நசுவின் கண்களை தான் ஏற்கனவே எங்கோ சந்தித்தித்திருப்பதாக சொல்லி வருவான். பின் ஒரு கட்டத்தில் அதை நினைவுபடுத்துவான். எனக்கு படம் முழுவதும் அதற்கிணையான உணர்வுடன், கமெதா கதாபாத்திரத்தை எங்கோ ஏற்கனவே சந்தித்து உரையாடியிருப்பதான உள்ளுணர்வு. படம் முடிந்து அன்றிரவு தூங்கும் வரை அந்த உணர்வு தொடர்ந்தது. யாரை அந்த கதாபாத்திரம் நினைவு படுத்தியது என்று நினைவை துருவி விடை காண முடியவில்லை. சற்று முன்னர் ராஜசுந்தர்ராஜனின் பதிவில் கோபி கிருஷ்ணன் பெயரை வாசித்ததும் மின்னதிர்வு தாக்கிய உணர்வு. ஆழ்மனதில் இடியட் கதாபாத்திரம் கோபி கிருஷ்ணனை பல வருடங்கள் முன்பு சந்தித்த நினைவை தூண்டி, பழக்கமான ஒரு உணர்வால் அன்று அலைபாய வைத்ததா என்று இப்போதும் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் இந்த பதிவை சற்று முன்னர் படித்த பின்பு அதை உறுதியாக நம்ப தொடங்கியிருக்கிறேன்.

10 ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியில் நடந்த ஒரு இலக்கிய கூட்டத்தில் கோபி கிருஷ்ணனை சந்தித்தேன். சாரு தனது வழக்கமான கலக நாடகங்களில் ஒன்றை நடத்தி முடிவுக்கு வந்த கூட்டம். சாருவிற்கு (எதிர்)தூண்டுதலாக துவக்கத்திலிருந்து லஷ்மி மணிவண்ணன் கலகி கொண்டிருந்தார். மதிய இடைவேளையில் கொஞ்ச நேரத்திற்கு கோபி கிருஷ்ணனை எதிரில் வைத்து தாறுமாறான கேள்விகளை லஷ்மி கேட்டுக்கொண்டிருந்தார். தர்க்கபூர்வமாகவோ, விமர்சன பூர்வமாகவோ அல்லாமல், 'தெருவில் இப்படி ஒவ்வொரு பேப்பரா பொறுக்கி வாழ்க்கையின் பொருளை கண்டடைய முடியுமா? .. டேபிள் டென்னிஸ் எல்லாம் ஒரு புனைவா?' என்று சலம்பல் பூர்வமாக கேட்டுக்கொண்டிருந்தார். அவற்றை இடியட் பட நாயகனின் சாந்தம் கொண்ட முகத்துடன் எடுத்து பதில்களை 'அப்படி எல்லாம் இல்லை' என்பது போல் ஓரிரு வார்த்தைகளில் கோபி சொல்லிகொண்டிருந்தார். கோபப்படுத்தவே சாத்தியமில்லாத மனிதராக அவர் தெரிந்தார். மறுநாள் முகமது சஃபி சேவியர்ஸ் காலேஜ் விடுதியில் தங்கியிருந்த கோபியை பார்க்க என்னையும் அழைத்து சென்றார். விரிவாக பேசினோம் என்று சொல்லமுடியாது. லஷ்மி மணிவண்ணன் நக்கல் செய்ததில் அவர் புண்பட்டாரா, தப்பா ஒண்ணும் எடுக்கலையே என்று சஃபி கேட்டார். முகம் முழுவதும் தெளிவான அடையாளமாக பரவிய மெல்லிய சஞ்சீவ புன்னகையுடன் "நான் எதையும் தப்பா எடுக்கலை.. தப்பா எடுக்கற மாதிரி அவர் எதுவும் பேசலை.." என்று மட்டும் சொன்னார். என் போதை பழக்கத்லிருந்து வெளி வந்து, இயல்பான வாழ்கைக்கு உதவ அப்போது ஆண்டி டிப்ரசண்ட் மாத்திரைகள் சாப்பிட்டு கொண்டிருந்தேன். ஆண்டி டிப்ரசன் மாத்திரைகள் இன்றி வாழமுடியாத நிலையில் அவர் இருந்ததாக சொன்னார். அது குறித்து பேசிக்கொண்டிருந்தோம். பேசிய விஷயங்கள் எதுவும் முக்கியமானது இல்லையெனினும், தீவிர பிரச்சனைகளால் பரிசுத்தமான ஒரு மனதுடன் பேசும் உணர்வு ஏற்பட்டது. அப்போது பதிந்து விட்ட அவரின் பாவங்களையே இடியட் படத்தில் என் உள்ளுணர்வு உறுத்தி நினைவு படுத்தியதாக ராஜ சுந்தரராஜனின் பதிவை படித்த பின் கற்பித்து நம்ப விரும்புகிறேன்.

Monday, April 5, 2010

தெளிவு.

அ. தேவதாசனின் பேட்டியை ஷோபாசக்தியின் வலைப்பதிவில் வாசித்தேன். சாதியொழிப்பை முன்வைத்து பேசும் விஷயங்களில் பிரச்சனைகொள்ள எனக்கு எதுவும் இல்லை. கீழே உள்ள மேற்கோள்கள் - இவை வெளிப்படுவதன் சூழல், அதற்கான நியாயங்கள், பின்னணியிலுள்ள சிந்தனை குழப்பங்கள், அரசியல் பழக்க வழக்கங்கள் - இவற்றை புரிந்து கொள்ளும் சவாலில் என் சிந்தனையை தூண்டி விட்டுள்ளது என்பதை பதிவு செய்வதற்காக இந்த பதிவு. என் வாசிப்பை சவாலாக்கும் மேற்கோள்களை கீழே 1,2 .. என்று வரிசை படுத்தியுள்ளேன். வரிசையினுள் மேற்கோள்கள் ஒன்றை ஒன்றை ஒப்பிட்டு கொள்ள அதற்குள் (i), (ii) .. என்று உள்வரிசை படுத்தியுள்ளேன்.


1. அய்க்கிய தேசியக் கட்சி பச்சையான முதலாளியக் கட்சி என்பது நீங்கள் அறிந்ததே. அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இடதுசாரியம் பேசும் முதலாளியக் கட்சிகளின் கூட்டுத்தான். எனினும் அய்க்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவது நாட்டுக்கு மிகப்பெரும் தீமையையும் ராஜபக்சவின் வெற்றி மிதமான தீமையையும் கொண்டுவரும் என்ற நிலைப்பாட்டிலிருந்தே நாங்கள் ராஜபக்சவிற்கு வாக்களிக்கச் சொன்னோம்.


2.(i) நாங்கள் ஒருபோதும் யுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்ததில்லை. நாங்கள் யுத்த நிறுத்தத்தையும் போரைப் பேச்சுவார்த்தைகளின் முலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதையுமே வலியுறுத்தினோம். மகிந்த அரசின் படுகொலைகளையும் மனிதவுரிமை மீறல்களையும் நாங்கள் நியாயப்படுத்தவுமில்லை.

(ii) ஒரு இலங்கைக் குடிமகனாக இலங்கையின் இறையாண்மையில் அக்கறையுள்ளவனாக மகிந்தவின் அரசை விமர்சிப்பது என்பது வேறு. ஆனால் மனிதவுரிமை என்ற பெயரிலும் அரசு சாரா நிறுவனங்கள் என்ற பெயரிலும் மேற்கு ஏகா திபத்தியங்களின் விருப்புகளிற்காகச் செயற்படுவது வேறு என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

(iii) மேற்கு நாடுகளின் எதிர்ப்பாளனாக இருக்கும் மகிந்த ராஜபக்ச மீது மனிதவுரிமை மீறல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவரை மேற்கு நாடுகளிற்குப் பணிய வைக்கும் முயற்சியையே இந்த அமைப்புகள் செய்து வருகின்றன.



3. (i) நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள்? இந்த உலகமயமாக்கல் சூழலில் ஒரு சே குவேராவிற்காக நீங்கள் வேண்டுமானால் காத்திருக்கலாம், ஆனால் நான் நடப்பு நிலவரங்களிலிருந்துதான் பேசுவேன்.

(ii) இப்போது இலங்கை மேற்கு ஏகாதிபத்திய நாடுகளை எதிர்க்கும் மூன்றாமுலக நாடுகளின் அணியிலிருக்கிறது. சீனா, இந்தியா, வியட்நாம், லிபியா, ரஷ்யா, கியூபா, வெனிசுலா, பாலஸ்தீனம் இருக்கும் அணியில் இலங்கை இருக்கிறது.

(iii) ஆனால் இந்த அதிகாரப் பகிர்வு என்பது சிங்கள முதலாளிகளிடமிருந்து தமிழ் முதலாளிகளுக்கு மாற்றிக்கொடுக்கப்படும் அதிகாரக் கையளிப்பாக இருக்கக் கூடாது. ....... தீவின் ஒடுக்கப்படும் மக்கள் அனைவருக்கும் அதிகாரம் பரவலாக்கம் செய்யப்படும் வகையில் ஒரு அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும்.

(iv) ஆனால் நான் நடப்பு நிலவரங்களிலிருந்துதான் பேசுவேன்.


(4) கிழக்கு வெறுமனே தமிழ் மக்களின் பூமி மட்டுமல்ல. மூவின மக்களும் வாழ்ந்துவரும் பூமி. அவர்கள் தனித்திருப்பதா அல்லது வடக்கோடு சேர்வதா மேற்கோடு சேர்வதா என்பதெல்லாம் அந்த மக்கள் தீர்மானிக்க வேண்டியது.

Saturday, March 20, 2010

துளியுரைகள்-6 (டாடாவின் ஈடு இணையற்ற கொள்ளை).

(இந்திய முதாலாளித்துவ வரலாற்றில் டாடாவின் கொள்ள பற்றிய குறிப்புகளாக நான் இட்ட ட்விட்கள் கீழே.)

4:51 PM Sep 20th, 2008
சென்ற நூற்றண்டின் ஈடு இணையற்ற மிக பெரிய கொள்ளையாக இஸ்ரேலின் நிலத்திருட்டை தகவல்களுடன் படம் காட்டி இணையத்தில் யாரோ விளக்கியிருந்தார்கள்.


4:54 PM Sep 20th, 2008
இந்தியாவில் சென்ற நூற்றாண்டின் ஈடு இணையற்ற மிக பெரிய கொள்ளையாக டாடா கும்பல் இது வரை நடத்தி வருவது எனக்கு தெரிகிறது - ஆனால் இது வெளிப்படையானது அல்ல
.
6:36 PM Sep 20th, 2008
டாடா தொடர்ந்த அரசுகள் மூலம் அடித்ததையும், அதற்கு கையாண்ட முறைகள், பெற்ற சலுகைகளை கேபிடலிஸ பொருளாதார நிபுணர் கூட நியாயப்படுத்த மாட்டார்

6:40 PM Sep 20th, 2008
விவசாயிகளிடம் நேரடியாக பேரம் பேசி, சந்தை விலைக்கு அதிகம், உரியவர்க்கு லஞ்சம் கொடுத்து, தொழில் மூலம் கொள்ளை லாபம் ஈட்டுவது கேபிடலிஸம்

6:44 PM Sep 20th, 2008
அரசாங்கமே அடிமாட்டு விலைக்கு பிடுங்கி தருவதில், தொழில் செய்து கொழித்து, அதே நேரம் நேர்மையாக தொழில் செய்வதாய் பேரும் புகழும் பெறுவது டாடாயிஸம்

9:19 PM Sep 20th, 2008
இந்திய முதலாளித்துவத்தில் அதிகமாய் கலச்சாரங்களை அழித்தவர்கள், அயோக்கியத்தனங்கள் செய்தவர்கள், அரசு வன்முறையை பயன்படுத்தியவர்கள் டாடாதான் என்று தோன்றியது

9:21 PM Sep 20th, 2008
கேபிடலிசத்தை மனித இனம் வந்தடைந்த சமூக வடிவங்களிலேயே மீக்கொடுரமானது (extremely ruthless) என்று நினைக்கிறேன். டாடா முதலாளித்துவ இயல்புகளையும் மிஞ்சி, மீதமிருக்கும் நியாயங்களையும் விழுங்கி விட்டதாக தோன்றுகிறது.

11:39 PM Sep 20th, 2008
விளக்கம்: கலாச்சாரத்தை அழிப்பது என்று நான் சொன்னது டீ எஸ்டேட்டை வைத்து அல்ல; ஒரிசாவிலும், ஜார்கண்டிலும் நடப்பதை.

11:41 PM Sep 20th, 2008
ஒரு உதாரணமாய் migrating labourஆக அங்கிருந்த பெரும் மக்கள் கூட்டம் மாற்றப்பட்டிருப்பதை; அதற்கு பின் டாடாவும், டாடாவின் கையாளாக செயல்படும் அரசாங்கமும் இருப்பதை அறியலாம்.

11:47 PM Sep 20th, 2008
Nottingham என்ற இங்கிலாந்து நகரத்தின் கீழே இருந்த நிலக்கறி , அந்த நகரவாழ்க்கையழகுக்கு எந்த பங்கமும் இல்லாமல் தோண்டி எடுக்கப்பட்டிருக்கிறது

11:48 PM Sep 20th, 2008
இந்தியாவிலும் பிரிடீஷ் இந்தகைய miningஇல் (உண்மையான பொருளில்) ஈடுபட்டிருக்கிறார்கள். கீழே தோண்டிஎடுத்து அதை மணலால் நிரப்பி, மேலே விவசாயத்தை தொடர்வது என்று.

11:50 PM Sep 20th, 2008
எனக்கு கிடைத்த தகவலின் படி டாடாதான் முழுமையாய் அந்த பகுதியையே நாசப்படுத்தும் open mining என்பதை துவங்கினார்கள்; டெல்லி மாஃபியா அனுமதித்தது.

Friday, March 19, 2010

துளியுரைகள்-5.

5:06 PM Sep 12th, 2008
LHC சோதனை பற்றி DC யின் வந்த கருத்துக்களில், 'உலகம் அழியுமென ஒரிசா கோவிலில் சரணடைந்தவர்களினுடையதை விட, ஐஐடி மாணவர்களினுடையது முட்டாள்தனமாக பட்டது

11:06 AM Sep 13th, 2008
நேற்று 'அட்டகுறிக்கி' என்ற கிராமத்தில் IAF `சும்மா' பாம் போட்டிருக்கிறது. இது விபத்துதானா என்று செய்திகளில் உறுதிப்படுத்த IAFஇடம் தகவல் இன்னும் இல்லை

11:09 AM Sep 13th, 2008
8.45க்கு பதில் 8.00 மணிக்கு பாம் போட்டிருந்தால் பல பள்ளி சிறார்கள் உயிரிழந்திருப்பார்கள் என்கிறார்கள்

(இதற்கு பிறகு இந்த நிகழ்வு குறித்து செய்திகள் எதுவும் இல்லை.)

11:12 AM Sep 13th, 2008
விபரீதமாக நிகழ்ந்து மீண்டும் மீண்டும் இப்படி நடந்தால் சாலை மறியல், கண்டனங்கள், பிரதமருக்கு கலைஞரின் கடிதம் என்று பரபரப்பாகி பின் அடங்கும்.

11:15 AM Sep 13th, 2008
பின் நம் மீனவர்களை இந்தியா சிங்களப்படையை அமர்த்தி போட்டுத் தள்ளும் (மௌனம் சம்மதம்!) யதார்த்தம் போல இதையும் ஏற்றுகொண்டு அலுவலை கவனிக்கலாம்.

1:46 PM Sep 14th, 2008
அறிவியல் இயற்கையை புரிந்து கொள்ளும் (புரிதலை வெளிப்படுத்தும்) சட்டகம் அனுமானங்கள் கொண்டது; நடைமுறையில் முழுமையான (பொருளில்) கறார்தனம் கொண்டது அல்ல

1:46 PM Sep 14th, 2008
சில சந்தர்ப்பங்களில் அறிவியலை முன்வைத்த அதிகாரம் கலந்த ஆணவமான 'தெளிவை'விட, மூடநம்பிக்கை ஆபத்து இல்லாதது என்பது என் கருத்து

1:49 PM Sep 14th, 2008
தங்கள் சட்டகத்தில் தெளிவின் பாற்பட்டு முழுமையாய் சிலரின் அறிவிற்கு சரியாக இருந்தும், 90% மக்கள் (முட்டாள்தனமாக கூட) பயப்பட்டால் இந்த சோதனைக்கு அறம் சார்ந்து உரிமை இல்லை என்று நினைக்கிறேன்.

1:50 PM Sep 14th, 2008
' இந்த பாழும் உலகம் போனால் போய் தொலையட்டுமே' என்று எனக்கும் பலமுறை தோன்றுவதுதான்; எல்லோருக்கும் சேர்ந்து முடிவெடுக்க முடியுமா எனபது வேறு விஷயம்

7:25 PM Sep 14th, 2008
http://tinyurl.com/5tse7e கவர்ந்த உருவகம் "நெகிழ்ச்சியான ஒரு சமூக அமைப்பில் உள்ளுறை முரண்பாடுகள் சமூகச் சக்கரத்தை முன்னிழுக்கும் உராய்தல் சக்தியாகின்றன."

11:13 PM Sep 17th, 2008
'ஊத்திகினு கடிச்சுக்கலாம்..' ப்ிறகு 'வாழைமீனுக்கும்.." என்றொரு வரிசையில் 'நாக்க மூக்க' வரலாற்று முக்கியத்துவமாக எனக்கு தெரிகிறது

9:54 PM Sep 19th, 2008
ஒருவகையில் 'ராஜபார்வை'தான் 'மொழி'யாக உருமாறியிருக்கிறது. ராஜபார்வை ஒடாததன்/இன்று மொழி ஹிட்டானதன் பின்னணிகள் + விளைவுகள் +காலமாற்றம் பேசவேண்டியவைகளாக இருக்கிறது.