Wednesday, April 14, 2010

இடியட்டும் கோபி கிருஷ்ணனும்.

பைத்தியக்காரனின் பதிவில், சென்றதற்கு முந்தய ஞாயிறு திரையிடப்பட்ட 'இடியட்' திரைப்படம் குறித்த ராஜசுந்தரராஜனின் பார்வையாக பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. பதிவில் நான் சற்றும் எதிர்பாராமல், (ஒருவேளை ஆழ்மனதில் மிகவும் எதிர்நோக்கியிருந்த), கோபி கிருஷ்ணனின் பெயரை அவர் குறிப்பிட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தாஸ்தேயெவ்ஸ்கியின் நாவலை நான் படித்ததில்லை (18 வருடங்களாக கைவசம் இருந்தும்). குரோசவாவின் படத்தில் இடியட்டான கமெதா, தாயெகோ நசுவின் கண்களை தான் ஏற்கனவே எங்கோ சந்தித்தித்திருப்பதாக சொல்லி வருவான். பின் ஒரு கட்டத்தில் அதை நினைவுபடுத்துவான். எனக்கு படம் முழுவதும் அதற்கிணையான உணர்வுடன், கமெதா கதாபாத்திரத்தை எங்கோ ஏற்கனவே சந்தித்து உரையாடியிருப்பதான உள்ளுணர்வு. படம் முடிந்து அன்றிரவு தூங்கும் வரை அந்த உணர்வு தொடர்ந்தது. யாரை அந்த கதாபாத்திரம் நினைவு படுத்தியது என்று நினைவை துருவி விடை காண முடியவில்லை. சற்று முன்னர் ராஜசுந்தர்ராஜனின் பதிவில் கோபி கிருஷ்ணன் பெயரை வாசித்ததும் மின்னதிர்வு தாக்கிய உணர்வு. ஆழ்மனதில் இடியட் கதாபாத்திரம் கோபி கிருஷ்ணனை பல வருடங்கள் முன்பு சந்தித்த நினைவை தூண்டி, பழக்கமான ஒரு உணர்வால் அன்று அலைபாய வைத்ததா என்று இப்போதும் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் இந்த பதிவை சற்று முன்னர் படித்த பின்பு அதை உறுதியாக நம்ப தொடங்கியிருக்கிறேன்.

10 ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியில் நடந்த ஒரு இலக்கிய கூட்டத்தில் கோபி கிருஷ்ணனை சந்தித்தேன். சாரு தனது வழக்கமான கலக நாடகங்களில் ஒன்றை நடத்தி முடிவுக்கு வந்த கூட்டம். சாருவிற்கு (எதிர்)தூண்டுதலாக துவக்கத்திலிருந்து லஷ்மி மணிவண்ணன் கலகி கொண்டிருந்தார். மதிய இடைவேளையில் கொஞ்ச நேரத்திற்கு கோபி கிருஷ்ணனை எதிரில் வைத்து தாறுமாறான கேள்விகளை லஷ்மி கேட்டுக்கொண்டிருந்தார். தர்க்கபூர்வமாகவோ, விமர்சன பூர்வமாகவோ அல்லாமல், 'தெருவில் இப்படி ஒவ்வொரு பேப்பரா பொறுக்கி வாழ்க்கையின் பொருளை கண்டடைய முடியுமா? .. டேபிள் டென்னிஸ் எல்லாம் ஒரு புனைவா?' என்று சலம்பல் பூர்வமாக கேட்டுக்கொண்டிருந்தார். அவற்றை இடியட் பட நாயகனின் சாந்தம் கொண்ட முகத்துடன் எடுத்து பதில்களை 'அப்படி எல்லாம் இல்லை' என்பது போல் ஓரிரு வார்த்தைகளில் கோபி சொல்லிகொண்டிருந்தார். கோபப்படுத்தவே சாத்தியமில்லாத மனிதராக அவர் தெரிந்தார். மறுநாள் முகமது சஃபி சேவியர்ஸ் காலேஜ் விடுதியில் தங்கியிருந்த கோபியை பார்க்க என்னையும் அழைத்து சென்றார். விரிவாக பேசினோம் என்று சொல்லமுடியாது. லஷ்மி மணிவண்ணன் நக்கல் செய்ததில் அவர் புண்பட்டாரா, தப்பா ஒண்ணும் எடுக்கலையே என்று சஃபி கேட்டார். முகம் முழுவதும் தெளிவான அடையாளமாக பரவிய மெல்லிய சஞ்சீவ புன்னகையுடன் "நான் எதையும் தப்பா எடுக்கலை.. தப்பா எடுக்கற மாதிரி அவர் எதுவும் பேசலை.." என்று மட்டும் சொன்னார். என் போதை பழக்கத்லிருந்து வெளி வந்து, இயல்பான வாழ்கைக்கு உதவ அப்போது ஆண்டி டிப்ரசண்ட் மாத்திரைகள் சாப்பிட்டு கொண்டிருந்தேன். ஆண்டி டிப்ரசன் மாத்திரைகள் இன்றி வாழமுடியாத நிலையில் அவர் இருந்ததாக சொன்னார். அது குறித்து பேசிக்கொண்டிருந்தோம். பேசிய விஷயங்கள் எதுவும் முக்கியமானது இல்லையெனினும், தீவிர பிரச்சனைகளால் பரிசுத்தமான ஒரு மனதுடன் பேசும் உணர்வு ஏற்பட்டது. அப்போது பதிந்து விட்ட அவரின் பாவங்களையே இடியட் படத்தில் என் உள்ளுணர்வு உறுத்தி நினைவு படுத்தியதாக ராஜ சுந்தரராஜனின் பதிவை படித்த பின் கற்பித்து நம்ப விரும்புகிறேன்.

2 comments:

  1. ஆம், அவரை நம்மால் அடையாளம் காண முடியவில்லை. அவரை இழந்துவிட்டோம். நம் அகங்காரங்களுக்கும் மிடுக்குகளுக்கும் அப்பாற்பட்டவராக அவர் இருந்தார். அவரை ஓரளவுக்குச் சரியாகச் சந்தித்து இருக்கிறீர்கள் என்று அறிய மகிழ்ச்சி!

    ReplyDelete
  2. பின்னூட்டத்திற்கு நன்றி.

    ReplyDelete