Monday, November 14, 2011

நிலைபாடும், அரசியலும், அதன் தீவிரமும்.

ஒரு பெண்ணை வன்புணர்ந்து கொன்ற குற்றத்திற்காக, கோவிந்தசாமி என்பவருக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப் பட்டிருக்கிறது. எல்லாவித மரண தண்டனைகளையும் எதிர்ப்பவன் என்கிற முறையில், கோவிந்தசாமிக்கான மரணதண்டனையையும் எதிர்க்கிறேன். ஆனால் எதிர்க்கும் எல்லாவற்றிற்கும் எதிராக முனைந்து போராடுவதில்லை; அதற்கான செயல்பாட்டை முன் எடுப்பதில்லை. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் என் குட்டி பூர்ஷ்வா வாழ்க்கையினுள் அமைந்தால் நிச்சயம் அதில் என்னை இணைத்துக் கொள்வேன்.

ஆனால் கோவிந்த சாமிக்கான தண்டனையை விட, பேரறிவாளனுக்கான தண்டனையையே இன்னமும் தீவிரமாக எதிர்க்கிறேன். பேரறிவாளன் குற்றமற்றவர் என்று நினைப்பது மட்டும் இதற்கு காரணமல்ல. ஒரு குறிப்பிட்ட அரசியலில் நம்பிக்கை வைத்ததற்காகவும், அதற்கு தன்னை அர்பணித்ததற்காகவும் பேரறிவாளன் தண்டிக்கபடுகிறார். ராஜீவ் கொலை என்கிற குற்றத்துடனான, இன்னமும் நிருபிக்கப் படாத அவரது பங்கு என்பதைவிட, இளம் வயதில் அவர் கொண்ட, அவருக்கு பெற்றோர் மூலமாகவும், தொடர்புகள் அறிதல்கள் மூலமாகவும் பெறப்பட்ட அரசியலுக்காக, அநியாயமாக பேரறிவாளனுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. அதனால் அதை தீவிரமாக எதிர்க்கிறேன். நேரடி சுயநலம் சாராத ஒரு அரசியலில் நம்பிக்கை வைத்து, அதற்கு வாழ்வில் ஏதோ ஒரு விலை கொடுக்க நேர்ந்த அனைவரும், பேரறிவாளன் தன் அரசியலுக்காக தண்டிக்கப் படும் அநியாயத்திற்கு எதிராக நிற்க வேண்டும்.

அப்சலுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையையும் எதிர்க்கிறேன். அப்சலின் தண்டனையும் அரசியல் காரணங்களால் அளிக்கப்பட்டிருக்கிறது; குற்றத்துடனான தொடர்பின் தீவிரம் தெளிவாக உறுதிப்படுத்தப் படாத நிலையிலேயே அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அப்சலுக்கு தண்டனை அளிக்கப்படுவதால் சிலரது தேசிய அரசியல் நியாயங்கள் மனதளவில் நிறைவு கொள்ளுமே தவிர, அது காஷ்மீர் பிரச்சனையை மேலும் கொந்தளிப்பான நிலைக்கு கொண்டுபோய், இன்னும் சிக்கலாக்கவே செய்யும். இந்த காரணங்களால் அப்சலின் தண்டனையையும் எதிர்க்கிறேன். அதை தீவிரமான கருத்து பிரயோகத்தில் என் பதிவுகளில் பின்னூட்டங்களில் எதிர்கொண்டிருக்கிறேன்.

ஆனால் ஊடகம் மட்டுமில்லாது, இடதுசாரி அரசியல் மனித உரிமை பேசும் அறிவுத்தளத்திலும் தமிழ்சார் அரசியலுக்கு பரவாலாக நிரம்பியுள்ள ஒரு பாரபட்சத்தினால், நான் அப்சலுக்கான தண்டனையை விட, பேரறிவாளனுக்கான தண்டனையில் கவனம் குவிப்பதே நியாமான அரசியலாக நினைக்கிறேன். இன்னமும் கூட காஷ்மீரிலிருந்து, சிறிய அளவில், ஒரு அரசியல் அணுகுமுறையாக கூட, மூன்று பேரின் தண்டனையை எதிர்த்து குரல் எழும்பவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் பேரறிவாளனின் தண்டனையையே என் இருப்புக்கான சவாலாக பார்க்கிறேன்.

ஆகையால் நிலவும் அரசியல் லயத்தின் மீதான மனக்குறையினாலும், நாம் மட்டுமே பேச நிர்பந்தப்படுத்தப் பட்டுள்ள கட்டாயத்தினாலும், தெளிவான அரசியல் காரணங்களினாலும், பேரறிவாளனின் தண்டனையை எதிர்ப்பதையே முதன்மை அரசியல் என்று நினைக்கிறேன். இதை சொல்லிவிட்டு கோவிந்தசாமியானாலும், தர்மபுரி குற்றவாளிகளானாலும் அதற்கான எதிர்ப்பு சத்தம் எழும்போது என் குரலையும் சேர்த்து ஒலிக்கவே செய்வேன்.

இதே போலவே ஒவ்வொருவருக்கும் முதன்மை கரிசனத்திற்கான அரசியல் என்று இருக்கும். குறிப்பிட்ட அரசியலுக்கான ஆதரவின் காரணமாக மூன்று பேருக்கான தண்டணயை எதிர்ப்பவர்கள், கோவிந்தசாமி விஷயத்தில் போராட்டத்தை முன்னெடுக்காததை, ஏதோ மாபெரும் ஹிபாக்ரசிபோல் பேசுவது எல்லாம், துக்ளக் தலையங்கவாதமாக இருக்குமே ஒழிய அதில் சத்து எதுவும் கிடையாது.

ஒரு அரசியல் நிலைபாட்டின் காரணமாக, வேறு (கொலைகள், விசாரணைகள், உரிமை மறுப்புகள் போன்ற) அநியாயங்களை நியாயப்படுத்துவது என்று வந்தால், அதை நிச்சயம் கேள்வி கேட்பதில் அர்த்தம் உண்டு. 'இதற்கு போராடும் நீ அதற்கு ஏன் போராடவில்லை' என்று கேட்பவர்கள், தங்களுக்கு கரிசனமானதை தங்களுக்கான முதன்மை அரசியலாக கொள்ள வேண்டியதுதான்.

(இந்த பதிவை நிச்சயம் ரவி ஶ்ரீனிவாசை மட்டும் மனதில் வைத்து எழுதவில்லை.)

No comments:

Post a Comment