Saturday, August 13, 2011

மரணதண்டனை குறித்து சில துளிகள்.

(ட்விட்டரில் எழுதியது; எதிர்கால வசதி கருதி இங்கேயும்.)

யாருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டிருந்தாலும் அதை நான் எதிர்க்கிறேன்; ஏற்கனவே ஒருமுறை என்பதிவில் சொன்னதுபோல், வீரப்பனுக்கானாலும், சிறுமியை பலாத்காரம் செய்து கொன்னவனாலும், ஒரே இரவில் 20 பேரை கொன்றவனுக்கும் இதே நிலைபாடுதான். ஏனெனில் மரண தண்டனை என்பது அந்த செய்த குற்றங்களை விட கொடுமையானது. நாகரீக சமூகத்தில் ஏற்க இயலாதது. இது குறித்த என் கருத்தை விரிவாக என் வலைப்பதிவில் எழுதியிருக்கிறேன். ஆகையால் கொள்கையளவில் எல்லாவித மரணதண்டனைக்கும் எதிராகவும்தான் குரல் கொடுக்க வேண்டும்.

ஆனால் நடைமுறை அரசியல் என்பதன் எல்லைகள் வேறு. மரணதண்டனை என்பதையே ஒழிக்கும் அளவிற்கு நம் சமூகமும், அதை ஆதரிக்கும் அளவிற்கு நம் பொதுபுத்தியும் நாகரீகம் அடைவதை எதிர்ப்பார்த்திருப்பதை விட, இன்றய சூழலில் செய்யக்கூடியதை நாம் யோசித்தும் பேச வேண்டும். ஒரு பக்கம் கொள்கையளவில் எல்லா மரண தண்டனைகளையும் எதிர்த்தாலும், நடைமுறையில் குற்றத்துடனான தொடர்பையும், தீவிரத்தையும் முன்வைத்தும் பேசவேண்டும். அஃபசல் பற்றிய என் பதிவில் இந்த கருத்தை பதிவு செய்துள்ளேன். நடைமுறையில் ஒன்றை முன் எடுப்பதால் கொள்கையளவில் அதையே எல்லையாக ஏற்பதாகாது. எதிர்கால லட்சியமாகவோ, அடுத்த கட்ட நோக்கமாகவோ அதை கொள்வதாக மட்டுமே ஆகும்.

அந்த வகையில் கஸாப் நேரடியாக ஒரு பெரும் பயங்கராவத குற்றத்துடன் தொடர்புடையவாராகிறார். அஃப்சல் நாம் அறிந்தவரையில் சில சந்தர்ப்ப சாட்சியங்களால் மட்டும் குற்றத்துடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளார். பேரறிவாளன் மிக மிக அல்ப காரணத்திற்காக, பேட்டரி விற்றதாக சொல்லப்படும் காரணத்திற்காக, எல்லாவகையிலும் அவர் முழுக்க முழுக்க நிரபராதியாக இருக்கக் கூடிய சாத்தியத்துடன், (பயங்கரவாதத்தை ஒழிக்க வந்ததாக சொல்லப்படும்) ஒரு பயங்கரவாத சட்டத்தால் அநியாயமாக தொடர்பு படுத்தப்பட்டவர். அவருக்கான மரண தண்டனையையே நாம் அதிகமாக எதிர்க்க வேண்டும். பொதுப்புத்தியும் அதற்கு உதவக்கூடும் எனில் அதை பயன்படுத்தவும் முயலவேண்டும்; இதற்கான வெகுஜனக் கருத்தை உருவாக்குவது எளிது என்றால், அதில் கவனம் செலுத்தி முன்னெடுப்பதே சரியான நடைமுறை அரசியலாக இருக்கும்.

நிராபராதிக்கு மரண தண்டனை அளிப்பதை தடுப்பது என்பது, சந்தர்ப்பவாத சாட்சியங்களால் குற்றம் சாட்டபட்டவரிலிருந்து, பெருங்குற்றம் செய்தவர் வரை, எல்லாவற்றிற்குமான மரணதண்டனையை ஒழிப்பதற்கான முதல் படியாக இருக்கும்.

இந்த நீள் ட்வீட்டை எழுத உந்துதாலாய் இருந்தவர் சோபாசக்தி. அவருக்கு அதற்கு நன்றி.

No comments:

Post a Comment