Monday, March 15, 2010

நாஞ்சில்-ஜெயமோகன்-மாடுகள்-ஜீன்கள்.

நேற்றய 'கேணி' கூட்டத்தில், நாஞ்சில் நாடன் மொழியின் ஆளுகைகளை விரித்து பேசிய போது, குறிப்பிட்ட மொழியை தாய் மொழியாய் கொண்டவருக்கு குறிப்பிட்ட முக அமைப்பு ஏற்பட்டு விடுவதாக குறிப்பிட்டார். முக அமைப்பை பார்த்தே அவர் பெங்காலியா, மராட்டியா, தமிழா தெலுங்கா என்று சொல்ல கூடியதை பற்றி சொன்னார். ஆய்வாளர் ஒருவர், குறிப்பிட்ட மொழியை காலம் காலமாக பரம்பரையாக ஒலிப்பதால், அதற்கேற்ப முக அமைப்பு ஏற்பட்டு விடுவதாக அறிவியல் பூர்வமான கட்டுரை ஒன்றை எழுதியிருந்ததாக சொன்னார். எனக்கு இந்த அறிவியல் பூர்வமான விஷயம் உண்மையாக இருக்க வாய்ப்பிருப்பதாகவும், அதே நேரம் முழு உண்மையாக இருக்க முடியாது என்ற நம்பிக்கையும் உள்ளது.


நாஞ்சில் சொன்ன தகவல் எனக்கு Mark Kac எழுதிய (ஹெர்மான் வெய்ல் தொடங்கிய) "Can we hear the shape of a drum?" கேள்வியை நினைவுக்கு கொண்டு வந்தது. (நான் அறிவியல் சம்பந்தமாக எழுத நினைக்கும் விஷயத்தில் இதுவும் ஒன்று. ஆர்வமுள்ளவர்கள் இணையத்தில் தேடினால் முழு தகவல்களும் கிடைக்கும்.) இந்த கேள்விக்கான பதில் 'முடியும், ஆனால் முழுவதும் முடியாது' என்பதாக வே இருக்கிறது. நாஞ்சில் குண்ட்ஸான விஞ்ஞானம் கலந்து சொல்வதற்கு பின்னும் பதில் இப்படியே இருக்கும் என்று பட்சி சொல்கிறது.

இதை தொடர்ந்து நாஞ்சில், ஜெயமோகன் 'கோயம்புத்தூரிலிருந்து கேரளாவிற்கு கசாப்பு செய்ய மாடுகள் கூட்டமாக கொண்டு செல்லப்படுவதை' முன்வைத்து எழுதிய புனைகதை ஒன்றை குறிப்பிட்டார். நான் கதையை படித்ததில்லை. நாஞ்சில் நாடன் கதை சொன்னபடி, ஜெயமோகனின் கதையில், கசாப்பு செய்யும் பழக்கம் நின்று போய் பல ஆண்டுகள் ஆகிய பின்னும், இந்த கசாப்பு செய்யும் விஷயம் மாடுகளின் ஜீன்களில் கலந்து, மாடுகள் பால் வற்றி உழைக்கவியலாமல் (மனிதனுக்கு) பயனற்று போன பருவத்தில், தாங்களே கசாப்புக்கு தங்களை ஒப்புவிக்கும் பழக்கமாக, கசாப்பு செய்யும் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதாக கதை செல்வதாக குறிப்பிட்டார். இந்த கதை விவரிப்பை உருவகமாக கொண்டு, தனிப்பட்ட வாசிப்பை நிகழ்த்தி, கட்டுடைக்கும் நோக்கம் எனக்கு இல்லை. குறிப்பாக கதையை படிக்காமல் அதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறேன். ஆனால் என் கேள்வி வேறு.

மாடுகளின் ஜீன்களில் கசாப்புக்கு தானே ஒப்புவிக்கும் பண்பு கலந்திருக்குமா, அல்லது கசாப்புக்கு இழுத்து செல்லப்படுவதன் எச்சரிக்கை அதிர்வு கலந்திருக்குமா என்பது. கசாப்புக்கு ஓட்டி செல்லப்படும் மாடு அதை உணரும் தருணத்தில் (அது ஒரு தொடர்ந்த process ஆயினும்) முன்வந்து ஒப்புவிக்குமா, அல்லது ஏதாவது வகையில் எதிர்ப்பு தெரிவிக்குமா? அப்படியெனில் ஜீனில் எந்த செய்தி, எந்த குணமாக கலந்திருக்கும்?

6 comments:

  1. எனக்கு சரியாக பதில் தெரியாததால்தான் கேள்வியாகவே பதிவை முடித்திருக்கிற்ஏன்.

    ReplyDelete
  2. மரம் எப்படி தன காய் கனிகளை மக்களுக்கு கொடுக்கிறதோ, அதை போலவே, சாப்பிடுவதற்காக தயார் செய்யபடும் உயிர்கள் ( மனிதர்கள் தான் கோழி, ஆடு, மாடு, பன்றிகளை வளர்க்கிறார்கள் ) தங்களை மக்களுக்காக அற்பனிக்கின்றன என்றார் எனக்கு தெரிந்த ஒரு முஸ்லிம் பெரியவர். அந்த குணம் தான் ஜெனிடிக்கல் ஜெனோம் எனலாம். ஜெனோம் என்றால்? பொறந்த பாப்பா எப்படி பால் குடிக்குது? ஹலால் முறை இது தான். வெட்டுபவர் துவா ஓதி, அந்த உயிருக்கு நன்றி சொல்லுவார்.

    Everything born in this world has a purpose of life.

    ReplyDelete
  3. நான் பார்த்தவரையில் ஹலால் செய்ய வேண்டிய ஆடுகளை தர தரவென இழுத்துத்தான் செல்ல வேண்டியிருந்தது. ஹலால் செய்ய இழுத்து செல்லப்படும்போது அவை கத்தி, வர மறுத்து, ஹலாலை ஒப்புக்கொண்டு தன்னை அர்பணிக்க மறுத்ததாகவே கண்டிருக்கிறேன். அமைதியாக ஹலால் செய்ய மரம் போல தன்னை ஒப்புவிக்கும் ஆடு ஒன்று இருக்கும் என்று தோன்றவில்லை.

    ReplyDelete
  4. //மாடுகளின் ஜீன்களில் கசாப்புக்கு தானே ஒப்புவிக்கும் பண்பு கலந்திருக்குமா, அல்லது கசாப்புக்கு இழுத்து செல்லப்படுவதன் எச்சரிக்கை அதிர்வு கலந்திருக்குமா //

    இந்த கேள்வியே தவறானது. சூழலில் இருந்து வரும் பதிவு ஜீன்களில் கலக்காது. ஏற்கனவே ஜீன்களில் இருக்கும் குணங்கள் சூழலுக்கு உகந்தவையாக இருந்தால் அந்த ஜீன்களை கொண்ட விலங்குகள் அந்த சூழலில் அதிக இனப்பெருக்கம் செய்யும். ஆபத்து சூழலுக்குள் செல்ல முரண்டு பிடிக்கும் குணமும் அமைதியாக செல்லும் குணமும் மரபணு ஜோடிகள் என வைத்துக் கொள்வோம். இவை கசாப்பு கடைக்கு தொடர்பே இல்லாமல் இருந்தவை. ஆனால் கசாப்பு கடைக்கு என்பதற்காக கால்நடைகளை வளர்ப்பவர் இந்த குணங்கள் மரபுரீதியாக வருபவை என தெரிந்து கசாப்பு கடைக்கு அமைதியாக வரும் கால்நடைகளையே selective breeding செய்தால் கசாப்புக்கு அமைதியாக வரும் கால்நடைகளே அதிகரிக்கும்.

    ReplyDelete
  5. /மாடுகளின் ஜீன்களில் கலந்து, மாடுகள் பால் வற்றி உழைக்கவியலாமல் (மனிதனுக்கு) பயனற்று போன பருவத்தில், தாங்களே கசாப்புக்கு தங்களை ஒப்புவிக்கும் பழக்கமாக/ ஜெயமோகன் புனைவில் வருவதாக நாஞ்சில் நாடன் குறிப்பிட்டதை முன்வைத்து, ஜீன்களில் கலக்க கூடியது என்ன பண்பாக இருக்கும் என்பதாக என் வினா. இதில் என் அறிவு மிக மேலோட்டமானது. தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  6. ரோசா இதில் சில சுவாரசியமான விஷயங்கள் இருக்கிறது. நம் சூழலில் உள்ள இயல்புகள் ஜீன்களில் கலக்கும் என்பது லமார்க்கிய கோட்பாடு. கிரிகார் மெண்டல் என்கிற பாதிரியார் ஆதாரமான மரபணுவியல் விதிகளை கண்டுபிடித்தார். வெய்ஸ்மான் என்பவர் நமது (அனைத்து பலசெல் உயிரினங்களையும் சேர்த்து) செல்களை இரண்டாக பிரித்தார்: உடல்செல்கள் உயிர்-உற்பத்தி செல்கள். உடல்செல்களில் மட்டும் ஏற்படும் தாக்கங்கள் உயிர் உற்பத்தி செல்களுக்குள் செல்வதில்லை. அதாவது காலம் காலமாக காது குத்தி வந்தாலும் பிறக்கும் பெண்கள் காது குத்திய ஓட்டையுடன் பிறப்பதில்லை. உயிர்-உற்பத்தி செல்கள் ஆனமட்டும் சூழ்நிலை பாதிப்புக்களால் பாதிக்கப்படுவதில்லை. நாஸி வதை முகாமில் நீங்கள் கட்டாயமாக ரேடியேஷனுக்கு உட்படுத்தப்பட்டு அது அந்த உயிர்-உற்பத்தி செல்களை பாதித்தால் அந்த பாதிப்பு / அணுகுண்டு பாதிப்புக்கள் மிக மோசமான ரசாயன பாதிப்புக்கள் இந்த உயிர்-உற்பத்தி செல்களை பாதிக்கலாம். நீங்கள் படித்த படிப்போ அல்லது ஒருவர் பரம்பரையாக செய்யும் செயலோ நிச்சயமாக ஜீன்களில் ஏறாது. இது மனிதனுக்கும் பொருந்தும் மாட்டுக்கும் பொருந்தும். ஆனால் இந்த மரபணுவியல் அறிவு ஏற்படுவதற்கு முன்னால் இருந்த கோட்பாடு என்னவென்றால் விந்து ரத்தத்திலிருந்து வருகிறது என்பதே. இத்தனை சொட்டு ரத்தத்துக்கு ஒரு விந்து சமம் என்கிற மாதிரியெல்லாம் சொல்லி சுய இன்பம் செய்யாதே என்று மாரல் பயமுறுத்துவதெல்லாம் இந்த லமார்க்கிய சிந்தனைதான். இதனை லமார்க் கோட்பாடாக வடிவமைத்தாலும் இது அனைத்து சமுதாயங்களிலும் நிலவி வந்த ஒரு கோட்பாடுதான். இந்த லமார்க்கிய கோட்பாட்டின் எச்சசொச்சத்தை நம் மொழியில் இன்றும் காணலாம். "என் ரத்த நாளங்களில் என் மூதாதைகளின் ரத்தம் ஓடிக்கொண்டிருப்பது உண்மையானால்" என்று வசனம் பேசும் போது இந்த லமார்க்கிய மொழியைத்தான் பேசுகிறோம். சாதியத்தை (சாதி புத்தி, சாதி மேன்மை சாதி இழிவு போன்ற கற்பிதங்களை) அறிவியல் அடிப்படை அற்றதென முழுமையாக மறுக்க இந்த விஷயத்தை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இதில் ரத்த சுத்தம் என்கிற கோட்பாட்டை மிகவும் தீவிரமாக கடைபிடித்தது ஐரோப்பிய பண்பாடுதான். நியோ-டார்வினிய கோட்பாடுகளுக்கான மேற்கத்திய எதிர்ப்பின் பின்னால் இந்த இரத்த சுத்தம் குறித்த அவர்களது obsession காரணமாக இருக்கலாம். ஒரு நானூறு ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய இலக்கியங்களில் இந்த ரத்த சுத்தம் என்கிற கருத்தியல் காணப்படுகிறதா என்பதையும் பார்க்கவேண்டும். நான் பார்த்த வரை அப்படி காணப்படவில்லை. எங்களூர் அய்யாவழி அகிலத்திரட்டில் "ஒரு விந்துக்கொடி மக்கள்" என சொல்கிற பதம் வருகிறது. ரத்த உறவைக் காட்டிலும் விந்துக்கொடி உறவு என்பது அறிவியலுக்கு நெருக்கமாக வரும் உருவகம்.

    ReplyDelete