Thursday, July 25, 2013

அரசியல் கருதுகோளும் அறிவு நிஜமும்

ஐஐடியில் நிலவும் பார்பனிய அரசியல் பற்றியும், அதே நேரம் அதற்கான எதிர்பரசியலை வசந்த கந்தசாமியை முன்வைத்து முன்னெடுக்க முடியாது என்கிற வாதத்தையும் கடந்த 10 வருடங்களாக வேறு வேறு இடங்களில் இணையத்தில் நான் முன்வைத்து இருக்கிறேன். 

வசந்தா கந்தசாமி இந்தியாவில் வேறு யாருடனும் ஒப்பிடமுடியாத மாபெரும் கணிதமேதை என்று அவரை சார்ந்தவர்கள் பொய்யாகவும், அவரை சாரத கணிதத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள் தவறாகவும் செய்தி பரப்பிக்கொன்டிருக்கிறனர். அவரது ஆரய்ச்சி கட்டுரைகளின் எண்ணிக்கைக்காக ஒருவேளை நீதிமன்றம் கூட அந்த பொய்யை உண்மையாக ஏற்று அவருக்கு ஆதரவாக தீர்ப்பு தரகூடும். அப்படி நடந்தால் கூட அவரது ஆய்வு கட்டுரைகள் குப்பை என்ற உண்மையை எந்த தயக்கமும் இல்லாமல் நான் சொல்லுவேன். குப்பைகள் எவ்வளவு எழுதி குவித்தாலும் ஒரே ஒரு உண்மையான இரண்டு பக்க பேப்பரின் அருகில் வரமுடியாது. ஆகையால் ஒரு மாபெரும் கணித மேதைக்கு பதவி உயர்வே தராமல் வஞ்சிக்கபடுவதாக சொல்லப்படும் செய்தி பொய்யானது. பதிவி நியமனத்தில் அவருக்கு ஏதேனும் தனிப்பட்ட அநீதி நிகழ்ந்திருக்கலாம். அது என்ன வகை அநீதி என்று கேள்விப்பட்டவைகளை மட்டும் வைத்து என்னால் முடிவுக்கு வரமுடியவில்லை; அவர் தரப்பு வாதத்தை மட்டும் வைத்தும் முடிவுக்கு வரமுடியாது; எதிர்தரப்பின் வாதத்தை நான் முழுமையாக அறியவுமில்லை. ஆனால் அது பார்பனரல்லாத ஒரே காரணத்திற்காக நடந்தது என்பதற்கு ஆதாரம் இருப்பதாக தோன்றவில்லை. அதே கணிதத்துறையில் இருக்கும் மற்ற பார்ப்பனரல்லாதவர்கள் எல்லாம் பார்பனியத்துக்கு கூஜா தூக்கியவர்கள் அல்ல. எந்த விஷயத்தையும் சிக்கல்கள் இல்லாமல் புரிய முனைவது வசதியாக இருக்குமே ஒழிய அரசியல் பாதுகாப்பானது அல்ல. 

இது தவிர ஐஐடி மீது குறிப்பாக இட ஒதுக்கீடு அரசியல் சார்ந்து விமர்சனமும் எதிர்ப்பும் கொண்ட அரசியல் நியாயமானது என்பதுதான் என் நிலைபாடு; அதற்காக தவறான உதாரணத்தை கொண்டாடுவது அந்த அரசியலுக்கு நண்மை பயக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. அவர் பெரியார் குறித்து ("Fuzzy and Neutrosophic analysis ofPeriyar's views on untouchability") எழுதியுள்ள நூல் எந்த பயனும், அறிவு உள்ளடக்கமும் அற்ற குப்பை மட்டுமல்ல, முழுக்க ஒரு ஏமாற்று வேலை. இதை என்னால் விரிவாக எழுதமுடியும்; ஆனால் என் அரசியல் முன்னுரிமை இதை எழுதுவதற்கு இல்லை. சமஸ்கிருதம் கணிணிக்கு ஏற்ற மொழி என்று வரும் ஒரு ஆர்.எஸ்.எஸ்.தனமான கட்டுரைக்கு எதிர்வாதம் வைப்பதே எனக்கான முன்னுரிமையாக இருக்கும். ஆனால் provoke செய்யப்படும் சவால் வந்து அவசியம் என்று தோன்றினால் இதற்காக வீணாகும் நேரத்தை ஒதுக்கி இந்த செயலில் ஈடுபட நேரலாம்.