Monday, June 14, 2010

எதிர் பொதுப்புத்தி

விழுப்புரம் பேரணி அருகில், தண்டவாளத்தை வெடிவைத்து தகர்த்து திட்டமிடப்பட்ட விபத்து, பலரது காலத்தினாலான இடையீடுகளால், 10 அடிகளில் தவிர்க்கப்பட்டது என்பது நாம் அறியும் செய்தி. செய்தியை உண்மையாக எடுத்துக் கொண்டால் ஒரு மிகப் பெரிய மனித அவலம் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ராஜபக்ஷே வருகையையும், இந்தியா வரவேற்றதையும் கண்டிப்பதற்காக இதை திட்டமிட்டதாக, விபத்து நடந்த இடத்தில் துண்டறிக்கைகள் மூலம் 'பிரபாகரனின் தம்பிகள்' என்ற அமைப்பு உரிமை கோருவதாக துணைசெய்தி. 'தமிழ் ஷாவினிஸம்' என்கிற ஒற்றை வார்த்தை மூலம் தமிழ் சார்ந்த எல்லா பிரச்சனைகளையும் மொத்தமாக அணுகுவதை குலதர்மம் போல கடைபிடிக்கும் ஆங்கில/வட இந்திய ஊடகங்கள், இந்த முறையும் அப்படியே இந்த பிரச்சனையையும் கடந்து போவது, அவர்கள் சாத்தானாக்கும் 'தமிழ் ஷோவினிஸத்திற்கு' மேலும் சில நியாயங்களை சேர்ப்பதை தவிர வேறு எதையும் செய்யப்போவதில்லை. அவர்களை பற்றி எதுவும் இங்கே பேசப்போவதில்லை. மற்றபடி செய்தி குறித்து பொதுமக்களின் பொதுபுத்தியில் வழக்கம் போல கேள்விகள் எதுவும் இல்லை.

பொதுபுத்தியையும், அரசு விதைக்கும் தகவல்களையும் எதிர்கொள்பவர்கள் எழுப்பும் கேள்விகள்தான் வழக்கத்திற்கு மாறாக எனக்கு பீதி கலந்த நெருடல்களாக உள்ளன. ஒரு தரப்பில் இந்த மொத்த விவகாரமும் இந்திய உளவுத்துறையின் சதியாக இருக்கலாம் என்கிறார்கள். (அப்படி இல்லை என்று சொல்லும் துணிவு இல்லாத அதே நேரத்தில் இப்படி ஒரு சந்தேகம் கொள்ள வைக்கும் ஆதாரமும் எதுவும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.) அடுத்ததாக இலங்கை உளவு துறையின் சதியாக இருக்கலாம் என்கிறது இன்னொரு தரப்பு. (இது ரொம்ப தமாஷ். இலங்கை உளவுதுறை இப்படி செய்வது சாத்தியமா என்ற கடினமான கேள்வியைவிட எளிதான பதில், செய்ய வேண்டிய தேவையே இல்லை என்பது. இந்திய உளவுத்துறையிடம் தொடர்பு கொண்டாலே போதுமானது.) இன்னொரு தரப்பு மாவோயிஸ்டுகள் போன்ற வேறு யாராவது செய்துவிட்டு 'பிரபாகரனின் தம்பி'கள் மீது பழியை திருப்பிவிட நினைத்திருக்கலாம் என்கிறார்கள். (இந்த தரப்புதான் இருப்பதிலேயே விசித்திரமானது.)

இந்திய உளவுத்துறை எந்த நாடகத்தையும் நிகழ்த்திக் காட்டக்கூடியதுதான். ஆனால் அப்படித்தான் என்று உறுதியாக கருத, இதுவரை பல ரத்த ஆறுகள் ஓடிய போதெல்லாம் ஏதாவது ஒரு அரசு எதிர்ப்பு வாதத்தை சொல்லி சொல்லி அதையெல்லாம் நியாயப்படுத்தியவர்களை தவிர மற்றவர்களால் முடியாது. நிச்சயமாக சில விடலை பையன்கள் இந்த வகையில் தங்கள் கோபத்தை காட்டியிருக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஒரு பெரு விபத்து நடக்கும் இடத்தில் காற்றில் பறந்துவிடும் துண்டறிக்கைகளை போடுவார்களா என்று கேட்பது புத்திசாலித்தனமான கேள்வியாக தெரியும் அளவிற்கு, பழைய வரலாறுகளை அறிந்தவர்களுக்கு விவேகமான கேள்வியாக தெரியாது. ஒரு விபத்தை நடத்தி ஆயிரக்கணக்கில் மக்களை கொன்று அதன் மூலம் ஒரு அரசுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்த முடியும் என்று முட்டாள்தனமாக நம்புபவர்கள், அதைவிட முட்டாள்தனமாக எந்த விதத்தில் வேண்டுமானால் நடந்து கொள்வார்கள் என்றுதான் தோன்றுகிறது. இதுவரையான போராளி வரலாறுகளில், குறிப்பாக தமிழ்நாட்டு தமிழ்தேசிய வன்முறையாளர்கள் இதைவிட மகா முட்டாள்தனங்களை செய்திருக்கிறார்கள். தமிழ் நாட்டில் அடக்குமுறையை அவிழ்த்து விடுவதற்காக உளவுத்துறை இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கும் என்பது எதிர்தரப்பு உருவாக்கும் வெறும் வார்த்தைகள் மட்டுமே கொண்ட தர்க்கம்தானே தவிர, அதற்கு ஆதாரம் எதுவுமில்லை. பாராளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதலே ரா செய்த வேலைதான் என்று, எந்த ஆதாரமும் இன்றி, தீவிரமாக நம்பும் அறிவுஜீவிகளையே சந்தித்துள்ளேன். அதற்கு இணையான இன்னொரு கேன்சர் வளர்ச்சிதான் இது. ஒரு அமைப்பு நாசவேலை செய்வதன் நோக்கம் அந்த வேலையால் விளைவிறும் நாசம் அல்ல; அதன் மூலம் பொறுப்பேற்று ஒரு செய்தியை சொல்ல விரும்புவதே. இதில் ஒரு அமைப்பு செய்துவிட்டு பெயரை மற்ற அமைப்புக்கு தரும் லாஜிக்கும் புரியவில்லை. சீமான் போன்றவர்கள் புளுகி தர்கிப்பதை எல்லாம் நாம் குப்பையில்தான் போடவேண்டும். எந்த கதையாடலினாலும் விவரித்துவிட முடியாத துன்பங்களை அனுபவித்து தப்பியோடிய தமிழ் மக்களையே போரின் இறுதியில் புலிகள் சுட தயங்கவில்லை. 'சிங்கள அப்பாவி மக்ககளைகூட கொல்லாதவரின் தம்பிகள் இப்படி செய்வார்களா?' என்று லாஜிக் போடுகிறார் சீமான். (புலிகள் மக்களை சுட்டதை நான் எந்த விதத்திலும் சிங்கள அரசின் தாக்குதலுடன் ஒப்பிடவில்லை. அதை ஒரு காரணமாக சொல்லி வேறு எதையும் நியாயப்படுத்தவில்லை. சீமானின் புளுகு தர்க்கத்தை மட்டுமே உடைக்கிறேன். )

துண்டறிக்கைகள் என்பதை முன்வைத்து, ஊடகங்கள் சொல்வதை அப்படியே கேள்விகேட்காமல், பொது புத்தியுடன் இசைந்து நாமும் ஒப்புகொள்ள வேண்டும் என்று நான் சொல்லவரவில்லை. இங்கே சந்தேகங்கள் ஒரு எதிர்பிரச்சாரமாக மட்டுமே உள்ளது. பொதுபுத்தியின் நேரெதிரான தன்மை கொண்ட இன்னொரு பொதுபுத்தியாகவே இந்த சந்தேகங்கள் நம்பிக்கைகளாக மாற்றப்படுகின்றன. அரசின் அடக்குமுறை என்பதை எதிர்க்க வேண்டும். ஆனால் இந்த எதிர்பிரச்சாரத்தால் நல்லது எதுவும் நடக்க வாய்பில்லை. இப்படி ஒரு தாக்குதலை 'பிரபாகரனின் தம்பிகளே' நடத்தியுள்ளதற்கே மிகுந்த வாய்ப்புகள் உள்ளன. அப்படி உண்மை இருந்தால் இதனால் ஈழத்தமிழர்களுக்கும் பத்து பைசா பிரயோஜனம் இல்லை; தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் இது பெருந்துன்பத்தை தவிர வேறு எதையும் கொண்டுவராது. இந்த நிலையில் இந்த செயலை அங்கீகரிக்கும் தன்மை கொண்ட எல்லா வாதங்களும் தமிழகத நலனிற்கு ஆபத்தானவை மட்டுமே.

இந்திய தேசிய கட்டமைப்பிற்குள், அந்த அமைப்பை பயன்படுத்திக் கொள்ளும் அணுகுமுறைகளும், இயக்கங்களும், செயல்பாடுகளுமே நமக்கு இன்றய தேவை. இலங்கையை போல் அல்லமால் அதற்கான ஒரு இடமும் சாத்தியங்களும் இங்கே இருக்கிறது. இது நியாயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில்லை; சாத்தியங்கள், அழிவுகள், கொடுக்கப்போகும் விலைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனை. ஒரு இணை அரசு, இணை ராணுவம் கொண்டு ஈழத்திலேயே சாதிக்க முடியாத நிலையில், அப்பாவி தமிழ்நாட்டு தமிழ்மக்களுக்கான நாசத்தையும், அதன் பின் தொடரும் அரச வன்முறையையும் தவிர வேறு எதையும் இது போன்ற செயல்கள் தமிழகத்திற்கு கொண்டுவரப்போவதில்லை. இந்நிலையில் நடக்கும் இந்த எதிர்பொதுப்புத்தி சார்ந்த பிரசாரங்கள் எதிர்கால விபரீதங்களை அறியாத மிக ஆபத்தானது.

Friday, June 11, 2010

வைதீகபாப்பானும், லௌகீக பாப்பானும்..

உடனடியாகவும் சுருக்கமாகவும் கருத்தை பதிவு மட்டும் செய்ய ட்விட்டரை 2 வருடங்களுக்கு மேல் பயன்படுத்தி வருகிறேன். ஆனால் ட்விட்டரில் 140 எழுத்துக்களில் கருத்து சொல்வதும், எதிர்வினை வந்து விவாதிப்பதும் பல தவறான அர்த்தங்களை தருவதுடன், விவாதம் திசை திரும்பவும் வழிவகுக்கிறது. விரிவாக கருத்துக்களை பதியும்போது மட்டும் விவாதம் ஆரோக்கியமான திசையில்தான் செல்லும் என்பதல்ல; வடிவ பிரச்சனையால் திசை திரும்ப வேண்டாமே என்பதுதான். ராஜன்குறை லும்பினியில் எழுதியுள்ள கட்டுரையை முன்வைத்தும், ஷோபாசக்தி பயன்படுத்திய வைதிக/லௌகிக பாப்பான் பிரயோகம் பற்றியும் எனது கருத்தை (எழுத்து எண்ணிக்கையின் கட்டுபாடு இல்லாமல்) சுருக்கமாக இங்கே தெளிவுபடுத்த விழைகிறேன். சற்று நீளமாக செல்வதால் ராஜன் கட்டுரையை முன்வைத்த கருத்துக்களை அடுத்த இரண்டு நாட்களில் பதிகிறேன். சோபாசக்தியின் கருத்துக்கள் பற்றி மட்டும் இங்கே. இனி பின்னணி கதை.

மேற்கோள்களாக சோபாசக்தியின் பழைய ட்விட்கள் கீழே.

/அழைப்பிதழ் இல்லாமல் உள்ளே விடமாட்டார்களாம். 'லேட்'டாப் போனால் கதவு திறக்கமாட்டார்களாம்./

/பஞ்சகச்சம், மடிசார், பூணூல் போன்ற 'டிரெஸ் கோட்' உள்ளதா எனத் தெரியவில்லை./

/வைதீகப் பார்ப்பானைவிட லெளகீகப் பார்ப்பானே டேஞ்சர் என்பார் பெரியார். கார்ப்பரேட் முதலாளிகளிடம் சிக்கிச் சீரழிகிறாயடி என் இலக்கியத் தாயே!/

மேலே உள்ள ஷோபாவின் துளியுரைகள், அண்மையில் 'கிழக்கு பதிப்பகம்' நடத்திய இந்திரா பார்த்தசாரதியின் புத்தக வெளியீட்டு விழாவின் கட்டுப்பாடுகளை பற்றியது என்று, பிறகு ஷோபாசக்தி தகவல் சொன்னபின் அறிந்தேன். ஷோபாவின் ட்வீட்களை முன்வைத்த என் கருத்துக்களை, பார்பனியம் குறித்து உத்தேசித்திருக்கும் ஒரு பதிவில் எழுத நினைத்திருந்தேன். அதற்கு முன் கிண்டலாக ஒரு ட்விட்டிலும், ராஜன்குறையின் கட்டுரையை முன்வைத்த ட்வீட்களில் ஒருமுறையும் எழுதியிருந்தேன். நேற்று நான் எழுதிய ட்விட் கீழே.

/அ.மா, ஞாநியை 'சோ'வாக சாராம்ச படுத்தியது, ஷோபாவின் லௌகீக பாப்பான், வைதிக பாப்பான் சூத்திரம் பற்றி ராஜன் கருத்துரைப்பார் என்று தோன்றவில்லை./

இதற்கு எதிர்வினையாக ஷோபாசக்தி எழுதியவை கீழே.

/"வெள்ளாடு வாய்வைத்த செடியும் வெள்ளாளன் கால் வைத்த படியும் உருப்படாது" என்ற சொல்லாடல் தன்னை வெள்ளாளனாய் உணருபவனை மட்டுமே தொந்தரவு செய்யும்./

/ஆதிக்க சாதியொன்றில் பிறந்தவனுக்கு சொந்தச் சாதித் துரோகமே முதலாவது சமூகக் கடமை./

/'வைதிக/ லெளகீக பார்ப்பான்' என்ற பெரியாரின் சொல்லாடலும் தன்னைப் பார்ப்பானாக உணருபவனையே தொந்தரவு செய்யும்./

/இந்தச் சொல்லாடல்களில் 'அரசியல் நேர்' பார்ப்பதா இல்லை சொல்பவனின் தரப்பைப் புரிந்து கொள்வதா முக்கியம்?/

இனி வருவது என் பதில்.

முதலில் கோப உந்துதலில் முத்திரை குத்துவது போன்றவை ஒரு தரப்பின் வாதங்களாக உருமாறிவிட முடியாது என்பதை, இந்த முத்திரை குத்தல்களால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஷோபாசக்தி ஏதோ ஒருவகையில் புரிந்துகொண்டால்தான் மேலே பேசமுடியும். ஷோபாசக்தியுடன் பல மாறுபாடுகள் இருந்தாலும் அவரது அரசியல் நேர்மை மற்றும் கடப்பாடு குறித்து எனக்கு சந்தேகங்கள் கிடையாது. அதே போன்ற நியாயத்துடன் என் தரப்பை புரிந்து கொள்பவர்களுடன் மட்டுமே உரையாட முடியும். மற்றபடி விவாதிப்பது சண்டைகள் போடுவதன் தேவைகளை அந்தந்த சந்தர்ப்பங்களில்தான் தீர்மானிக்க முடியும். இன்னதை விமர்சித்தால் இந்த மாதிரி உணர்வதாக அர்த்தம், இப்படி உணர்வதாக அர்த்தம் கொண்டால் இன்ன முத்திரை என்கிற தொனி மட்டுமே ஷோபாசக்தியின் ட்விட்களில் உள்ளது. நான் உணர்ந்தவரை பொருட்படுத்தக்கூடிய வாதம் எதுவுமில்லை.

அது எப்படி இருப்பினும் வைதீக பார்பான்/லௌகீக பார்பான் என்கிற சொல்லாடல்கள் என்னை தொந்தரவு செய்யாது என்று ஷோபாசக்திக்கு மிக நன்றாக தெரியும். ஷோபாசக்தியிடம் தனிப்பட்டு பேசும் பொழுது மட்டுமின்றி, என் எழுத்தில் இந்த வார்த்தைகளை இணையத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். அது குறித்த நினைவாற்றல் இங்கே பயன்படாது என்று மட்டுமே ஷோபாசக்தி அதை மறந்திருக்கிறார். குறிப்பாக பெரியாரின் சொல்லாடல் எனக்கு எந்த தொந்தரவையும் தரவில்லை. அது முழுக்க நான் ஏற்கும்/புரிந்து கொள்ளும்/ விரிவாக விளக்கக் கூடிய ஒரு கருத்து. இங்கே என் விமர்சனம் ஷோபா அதை எடுத்தாள்வது குறித்து மட்டும். விமரசிப்பதன் காரணமும் அரசியல் நேராக இருக்கவேண்டும் என்பதோ, பார்பனராக இருந்தாலும் முத்திரைகள் நியாயமாக பொருந்த வேண்டும் என்பதோ அல்ல. நான் வைதிக/லௌகீக பார்பனியம் என்கிற கருத்தாக்கங்களை, சமூகத்தில் அது நிலவுவதை ஏற்கிறேன்; எதிர்கிறேன். சும்மா தான் கடுப்பான ஒரு தருணத்தில் அதை பயன்படுத்துவதின் பிரச்சனைகள் புரிந்து மட்டுமே இங்கே விமர்சிக்கிறேன். (இது தவிர 'வெள்ளாளன் மேஞ்ச இடம் வெட்ட வெளி' போன்று 'பாம்பையும் பாப்பானையும்..' போன்ற வழக்குகளோ கூட எனக்கு பிரச்சனையில்லை. சமூகத்தில் இத்தகைய வழக்குகளின் பின்னுள்ள நியாயங்களை என் பழைய பதிவின் பின்னூட்டங்களில் எழுதியிருக்கிறேன்.)

பெரியார் ஆழ்ந்த பொருளுடனேயே 'வைதீக பாப்பானை நம்பினாலும், லௌகீக பாப்பானை நம்பாதே' என்றதாக நான் கருதுகிறேன். (இதை பழைமைவாத பார்பனியத்தைவிட நவபார்ப்பனியம் மிகுந்த ஆபத்தானது என்று நான் குறிக்க விரும்புகிறேன்.) பெரியார் சொன்ன பல விஷயங்கள் அவர் இயங்கிய போக்கில் உதிர்ந்தவை. அவற்றில் பல முரண்படுகளும் உள்ளன. இந்த முரண்பாடுகளே அவைகளை அந்தந்த சந்தர்பங்களுடன் பொருத்தி அர்த்தம் கொள்ள நம்மை நிரபந்திக்கின்றன; பெரியாரிசம் என்று கருத்தியல் எதையும் சாராம்சபடுத்த முடியாத ஆரோக்கியமான நிலையையும் கொண்டுள்ளது. இந்த நிலையில் தனக்கு ஒத்துவராத சந்தர்பங்களில் எல்லாம் இந்த லௌகீக பாப்பான்/ வைதிக பாப்பானை ஒரு சூத்திரமாக பயன்படுத்துவதையே விமர்சிக்கிறேன். கண்ணகி சிலை விஷயத்தில் தொடங்கி கருணாநிதி எதிர்ப்புவரை ஞாநியை இந்த சூத்திரம் கொண்டு தாக்கியதை ஒரு உதாரணமாக சொல்லலாம். (என் பார்வையில் பழைமைவாத பார்பனியத்திற்கு நயம் உதாரணம் வேண்டுமெனில் வேளுக்குடி கிருஷ்ணனை சொல்லிகொள்ளலாம். லோக் பரித்திரன் போன்ற முயற்சிகள். இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வாதங்களை முன்வைக்கும், பரப்பும் அனைவரும், தமிழ் இணையத்தின் ஒரு குறிப்பிட்ட மக்களை நவபார்பனியத்தின் உதாரணமாக சொல்லலாம். 'சோ'வை பழைமைவாதமா நவபார்பனியமா என்று பிரிப்பது கஷ்டம். ஆனால் நவபார்பனிய கருத்துக்களின் மிக பரந்த அளவில் பரப்பிய காரணத்தினாலேயே அவருக்கு முக்கியத்துவம்.)

ஷோபாசக்தியின் ட்விட்கள் அதை விட வீக். அழைப்பிதழ் இல்லாமல் அனுமதிக்காமை, லேட்டாக வந்தால் கதவு திறக்காமை போன்ற நடைமுறைகள் எனக்கு ஏற்புடையது அல்ல. ஏற்காததால் அப்படி கட்டுபாடுகள் கொண்ட ஒரு விழாவிற்கு நான் ஒருநாளும் போக மாட்டேன். அவ்வளவுதான். ஒருபடி மேலே போய் அதை விமர்சித்து கூட எழுதலாம், எதிர்ப்பை கூட தெரிவிக்கலாம். (அதுவே நேர்முக தேர்விற்கு என்றால் போய்தான் ஆகவேண்டும் என்றாலும் எனக்கு அந்த சத்திய சோதனை வரவில்லை.) ஆனால் இதில் என்ன லௌகீக பார்பனியம் உள்ளது என்று ஷோபாசக்திதான் விளக்க வேண்டும். இதனால் சமூகத்திற்கு என்ன டேஞ்சர், இது எந்த விதத்தில் சாதிய அமைப்பை நியாயப்படுத்துகிறது என்றும் ஜல்லியில்லாமல் விளக்க வேண்டும். அவர் விளக்கிய பின்பு இதை பற்றி நான் பேசுவேன். ஆனால் ஷோபா மூன்று ட்விட்களில் தனக்கு தானே அதீதமாக முரண்படுகிறார். பஞ்சகச்சம், மடிசார் டிர்ஸ் கோட் உண்டா என்று வினவுகிறார். பஞ்சகச்சமும், மடிசாரும் லௌகீக பார்பனியத்தின் அடையாளமா? லௌகீக பார்பனியம் குறித்த ஷோபாவின் புரிதல் என்ன? சென்னையில் ஒரு எலீட் பாரில் இருக்கும் (உண்மையில் நம் தன்மானத்தையும் அரசியலையும் சோதிக்கும்) கட்டுப்பாடுகளையும் ஷோபா லௌகீக பார்பனியம் என்பாரா?

இதெல்லாம் விளக்க வேண்டிய அவசியமில்லை, சொல்பவனின் தரப்பை ஆராயக்கூடாது அனுபவித்து புரிந்து கொள்வதுதான் இது போன்ற சந்தர்ப்பங்களில் முக்கியம் என்று சொல்லிவிட்டால் போதும் என்று நினைக்கிறார். அப்படியே எடுத்து கொண்டாலும், அது என்ன தரப்பு என்பதை பொறுத்தே முக்கியத்துவம் அமையும் என்று நான் நினைக்கிறேன். உதாரணமாக மதிவண்ணன் 'உள்ஒதுக்கீட்டை குலைக்க நினைக்கும் பார்பன பாம்புகள்' என்று ஒரு குறு நூலை வெளியிட்டிருக்கிறார். அதில் ரொம்ப கறாராக விவாதம் செய்வதை விட அவர் தரப்பு வாதத்தை புரிவதுதான் முக்கியம் என்று நினைக்கிறேன். எதிர் உதாரணமாக, ஈழப்பிரச்சனை சார்ந்து தான் விமர்சிக்கப்பட்டதை/தாக்கப்பட்டதை எதிர்கொள்ள, சம்பந்தமில்லாமல் தன் சாதி அடையாளத்தை ஆதவன் தீட்சண்யா ஆயுதமாக்குகிறார். இந்த அழுகுணி ஆட்டம் எதிர்க்கப்பட வேண்டியது என்று நினைக்கிறேன். ஷோபாசக்தி போகிற போக்கில் தான் கடுப்பான ஒரு விஷத்திற்காக ஒரு முக்கிய கருத்தாக்கத்தை தவறாக பயன்படுத்துகிறார். அது விமர்சிக்க வேண்டியது என்று நினைக்கிறேன். இந்த உதாரணங்கள் என் நிலைபட்டை விளக்கக் கூடும்.

மீண்டும் சொல்வதானால் நானும் பயன்படுத்தும் (எல்லாவித) 'பாப்பான்' என்கிற வார்த்தை என்னை தொந்தரவு செய்ய சிறிய சாத்தியக்கூறு கூட இல்லை. ஆனால் இன்றய சூழலில் என் போன்றவனிடம் உரையாடுவது to சண்டைபோடுவது மட்டுமில்லாது, விஜய் டீவி 'நீயா நானா' போன்ற பொதுக்களத்தில் கூட வாதங்களை முன்வைக்க வேண்டிய காலம். (விஜய் டீவின்னா விஜய் டீவி மட்டுமில்லை.) போராளிக்கு ஆள் எடுக்கும் சோதனை போன்று, இன்ன வார்த்தை இன்ன மாதிரி டிஸ்டர்ப் செய்கிறதா என்கிற டெஸ்ட் செய்தபின் தீர்மானிப்பது போன்றவை யதார்த்தம் சார்ந்த அரசியலுக்கு உதவாது. சாத்தியமற்ற அரசியலையே, தேர்ந்தெடுத்து நடைமுறை படுத்திகொள்ள ஷோபாசக்தி தீவிரமாக விரும்புவதாக பதில் சொல்ல நினைத்தால் நான் பரிந்துரைக்க எதுவுமில்லை. இறுதியாக, 'சொந்த சாதிக்கு துரோகம் செய்வது' என்கிற கருத்தக்கத்தை முன்வைத்து, ஒரு அறிவு விவாதத்தில் அடிப்படை கேள்விகளை கூட எழுப்பக்கூடாது என்று நிபந்தனை விதிப்பது, நம்மை அரசியல் வன்முறைக்கு இட்டு செல்லும் அணுகுமுறையின் ஒரு பரிமாணத்தின் நடைமுறை உதாரரணம். ஷோபாசக்தி மேலே பேசினால் நானும் மேல் விளக்கங்கள் தருவேன்.