Tuesday, May 1, 2012

ஞானத்தின் மடத்தனம்.

நேர்மையற்ற குதர்க்க புத்தியை தர்க்க அடைப்படையாக கொண்டு, தனக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடிய மடத்தனத்தை, ஏதோ ரொம்ப தர்மாவேசம் போல ஞாநி முன்வைப்பது இது முதல் தடவை அல்ல. திருவாசகம் வெளிவந்த போதே கேனத்தனமான பல கேள்விகளை, அரசியல் ஆவேசமாக முன்வைத்தவர்தான். இந்திய இசைச்சூழலில் யாருக்கும் சாத்த்தியம் ஆகாத சாதனையை நிகழ்த்திய மேதையை 'அரசு பணத்தை திருடினார்' என்று எந்த லாஜிக்கும் இன்றி பிதற்றியவர்தான் இவர். இப்போது சமீபத்தில் பலரை வேறு உலகிற்கு அழைத்துச் சென்ற How to Name it நிகழ்ச்சி அவர் கையில் மாட்டியிருக்கிறது. 'How to name it' நிகழ்தியது ராஜா அல்ல; அவரே நடத்தினாலும் யார் வயலின் வாசிப்பது என்பதை தீர்மானிக்க அவருக்கும், நிகழ்வை நிகழ்த்தியவர்களுக்கும் எல்லா உரிமையும் உள்ளது. யாருக்கேனும் உரிமையுள்ளதை திருடினாலோ, பணம் தராமல் ஏமாற்றினாலோதான் குற்றம். நரசிம்மனை வயிலின் வாசிக்க வைக்கவில்லை என்பதில், என்ன எழவு மனிநேயம் குலைந்து போகிறது? உலகில் உள்ள குயுக்திகள் அத்தனையையும் சேர்த்தாலும் இதில் மனித நேயத்திற்கு ம், நேர்மைக்கும் என்ன சம்பந்தம் வந்தது என்று புரியவில்லை. நரசிம்மன் ராஜா படைத்த இசைக்கோர்வையை, எழுதிக்கொடுத்தப்படி மேற்பார்வைக்கு ஏற்ப வாசித்தவர். ஒருவேளை ஞாநி எழுதும் குப்பை நாடகங்கங்களில் எல்லாம் முதன்முறை நடித்த நடிகர்களைத்தான் எல்லாமுறையும் நடிக்கவைப்பாரா? ஒருவேளை ஞாநி அப்படி ஒரு பைத்தியக்கார நடைமுறையை பினபற்றினாலும் மற்றவர்களுக்கு என்ன தலையெழுத்து? அடுத்து கேஸட்டில் பெயர் போடாதது. ரஹ்மான் இசைக்கலைஞர்களின் பெயரை போட்டாராம்; ராஜா அன்று போடவில்லையாம். ஏன் M. S. விஸ்வநாதனும், நௌஷாத்தும், பர்மன்களும் கூட யார் தன் குழுவில் ட்ரம்ஸ் வாசித்தார்கள் என்ற செய்தியை ரெகார்டில் பதிவு செய்ததில்லை. ஜிகே வெங்கடேஷின் சில பாடல்களை இளையராஜா எழுதிக் கொடுத்ததாகவே நம்பிக்கைகள் உண்டு. எத்தனை கேசட்டில் ராஜாவின் பெயரை வெங்கடேஷ் பதிவு செய்திருக்கிறார். A.R.ரஹ்மான் செய்தது பாரட்டுக்குரியது என்றாலும், அதில் நேர்மையாக வேறு வழியில்லை என்பதுதான் உண்மை. ரஹ்மானின் இசை உருவாகும் விதத்தை அறிந்தவர்களுக்கு, அதில் மற்ற இசைக்கலைஞர்களின் கிரியேடிவான பங்கு உண்டு என்கிற விஷயம் நன்றாக தெரியும். ரஹ்மானும் மற்ற இசை கலைஞர்களும் அதை சொல்லியும் உள்ளனர். ராஜா இசையில் அவரன்றி படைப்புரீதியாக அங்கு யாருக்கும் எந்த பங்கும் இல்லை. முழுக்க அவர் தனிமையில் எழுதியது மற்றவர்களால் வாசிக்கப்படுகிறது. ஆயினும் ரஹ்மான் முன்னுதாரணம் காட்டிய நடைமுறையை பின்பற்றி இசைத்தவர்களின்பெயரை போடத் தொடங்கினார். அப்படியே போடாமல் விட்டாலும் அதில் எந்த மனிநேயத்திற்கு எதிரான செயலும், அயோக்கியத்தனமும் இல்லை. ஞாநி சொல்வதுபோல் 'தன் இசையை சிறப்பாக வெளிப்படுத்தி தனக்கு புகழ் சேர்த்துத் தரும் கலைஞர்களை எப்போதுமே அலட்சியப்படுத்தி இருட்டடிப்பு செய்து வருவ'தாக ஞாநி என்கிற சைக்கோவை தவிர இளையராஜாவிடம் பணியாற்றிய யாராவது சொல்லியுள்ளார்களா? எத்தனையோ இரக்கமற்ற சமூக நிகழ்வுகளுக்கு பயன்படுத்த வேண்டிய மனித நேயமின்மை என்கிற வார்த்தையை எந்த லாஜிக்கும் இல்லாமல் இளையராஜாவை நோக்கி இவர் பயன்படுத்தவேண்டிய காரணம் என்ன? இந்தியா முழுக்க யாருடனும் ஒப்பிட முடியாத இந்த மேதையின் மீதான இந்த வெறுப்பை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஞாநியிடம் வெளிபடுவது அரசியல் சார்ந்த மனநோயா, அல்லது சாதி சார்ந்த தலித் வெறுப்பா, வேறு ஏதாவது வெளிவராத பிரச்சனையா என்று புரியவில்லை. அது எப்படியிருந்தாலும் சமூகத்தில் ஒரு நேர்மையான கருத்தாளராக மதிக்கப்படும் இவர் ராஜா மீது காட்டும் இந்த வெறுப்பை அம்பலப்படுத்துவது முக்கியமானது. இவரின் லூஸுத்தனமான வாதங்களை முதிராத இணைய ஆவேசக்காரர்கள் தொடரப்போவதுதான் கவலைக்குரிய விஷயம். இளையராஜா போன்ற ஒருவர் பெங்காலில் பிறந்திருந்தால் தங்கள் அடையாளமாக கடவுளாக கொண்டாடியிருப்பார்கள். இங்கே இல்லாத பொல்லாத தர்க்கத்தை எல்லாம் கண்டுபிடித்து அவரை காலிபண்ணுவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். நம் அறிவு நோய்கூறுக்கு ராஜாமீதான இந்த வெறுப்பை விட சிறந்த உதாரணம் வேறு கிடையாது.