Sunday, August 8, 2010

கோப்பையிலே குடியிருப்பு.

'கேணியில்' ஷாஜியின் உரையும், பின்விவாதமும் சுவாரசியமாக இருந்தது. முன்தீர்மானிக்கப் பட்ட வலுவான கருத்துக்களை நம்மில் பலர் வந்தடைந்திருக்கும் நிலையில், கருத்து மாற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட உரையை கேட்ட பின்பு நிகழ்வது என்பதற்கான சாத்தியம் மிகக்குறைவே. ஆனால் முரண்படும் கருத்துக்களை கேட்பது என்பது மாற்றத்திற்காக என்று இருக்க முடியாது. வந்தடைந்த கருத்துக்களை தனக்குள் விவாதித்து கொள்வதற்கும், புதுபித்து கொள்வதற்கும்தான். அந்த வகையில் ஷாஜி உரையாற்றிய கூட்டம் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது. அந்தவகையிலான பயன்கள் பற்றியன்றி, நிரடலாக இருக்கும் விஷயங்கள் பற்றி மட்டுமே இங்கே பதிகிறேன். இதை மனதில் வைத்து வாசிக்கவும்.

பல முறை 'உலகின் மூலையில் சின்ன ஒரு இடத்தில் இருக்கிறோம்; நமக்கு பழகிப்போன விஷயங்களை மட்டும் உலகின் உன்னதங்களாக கருதக்கூடாது; உலகின் எட்டுதிக்கிலிருந்தும் கலைத்தாகம் கொண்டு பருகவேண்டும்.' என்கிற கருத்தை வலியுறுத்தினார். அவ்வாறு பருகிக்கொண்டிருப்பவர்களுக்கு இதை திரும்ப திரும்ப கேட்க சற்று எரிச்சலாக இருந்திருக்கும் என்றாலும், தேவையான ஒரு நினைவுபடுத்தலாக இதை கொள்ளலாம். ஆனால் லோக்கல் கலைகளின் அருமையை உணரமுடியாத தன் குறைகளுக்கான சால்ஜாப்பாக இதை சொல்லிவிடகூடாது என்பதுதான் பிரச்சனை. இதற்கு ஒரு உதாரணமாக ஷாஜி பொருந்துவாரா என்கிற கேள்விக்குள் இறங்கவில்லை. ஆனால் சாருவை விட இதற்கு பொருத்தமான உதாரணம் வேறு உண்டா? அந்த வகை உதாரணங்களின் உதார்களை, உலக கலைத்தாகமாக பார்க்கும் அபத்தத்தை ஷாஜி செய்கிறாரா என்பதுதான் தெரியவில்லை.

ஷாஜியின் சில புரிதல்கள் மிகவும் மேலோட்டமானவை என்பது என் கருத்து. உதாரணமாக சலீல் சௌத்ரியின் பாணியை இளையராஜா கைகொள்வதாக சொல்வது. அதற்கு அவர் முன்வைக்கும் ஒரே வாதம், நாட்டிசையையும், மேற்கத்திய இசையையும் சலில்தா இளையராஜாவிற்கு முன்பே கலவை செய்தது. இளையராஜா திரை இசையாக செய்தது எதுவும் கலவை (fusion) அல்ல என்கிற ஆதார அறிவுதான் இளயராஜாவின் இசையை புரிந்து கொள்ள தேவையான ஆரம்ப படி என்பது என் கருத்து. அந்தவகையில் இளையராஜா அளித்த இசைக்கு-உதாரணமாக 'செந்துரபூவே' பாடலுக்கு அதற்கு முன் எந்த முன்னோடி இசையும் கிடையாது, ஷாஜியின் இந்த கூற்று மிக மேலோட்டமான புரிதலை மேதாவித்தனம் என்று நம்பும் தன்மை கொண்டது என்பது என் கருத்து.

நௌஷாத், எம்.எஸ்.வி. இருவரில் யாரையோ ஒருவரை 'லோகிளாஸ் ம்யூசிக் டைரக்டர்' என்றார். நான் அது குறித்த சந்தேகத்தை கேட்டும் எனக்கு தெளிவாகவில்லை. இருவரில் யாரை சொல்லியிருந்தாலும் அது ஒரு அதிரடி அபத்தம் என்பது மட்டுமே என் கருத்து. முகேஷ் ஸ்ருதி இல்லாமல் பாடக்கூடியவர் என்கிற 'தகவலை' வேறு ஒரு விஷயத்தை பற்றி விளக்க முற்படும் போது சொன்னார். (அந்த வேறு விஷயம் வேறு. அதை பற்றி இங்கு பேசவில்லை.) எனக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது. உதாரணம் தரமுடியுமா என்று கேட்ட போது குறிப்பாக இன்ன பாடலில் விலகியிருக்கிறது என்று சொல்லவில்லை. பொதுவாக சொன்னார். நான் மீண்டும் குறிப்பாக கேட்டபின்பும் எதையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. சுருதி என்றால் என்ன என்று அடுத்த கேள்வியை நான் கேட்க வேண்டியிருந்திருக்கும். முகேஷ் குரலின் ஒரு குறிப்பிட்ட (தனி)தன்மையை ஸ்ருதியின்மை என்று சொல்ல முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. இன்னொரு உதாரணமாக இளையராஜா பற்றி கூட சிலர் அவ்வாறு சொல்வது உண்டு. நானும் ஒருமுறை 'மெட்டி ஒலி காற்றோடு..' பாடலை ராஜா சுருதியே இல்லாமல் பாடி அருமையானதாக்கிவிட்டதாக எழுதியிருக்கிறேன். அந்த குறிப்பிட்ட பாடும்தன்மையை ஸ்ருதிவிலகல், ஸ்ருதியின்மை என்று சொல்ல முடியும் என்று எனக்கு இப்போது தோன்றவில்லை. பழகிபோன சட்டகத்தில் தொடர்ந்து சிந்திக்க கூடாது என்று தான் பலமுறை சொன்னதை ஷாஜி நடைமுறைபடுத்த வேண்டும் என்று சொல்ல தோன்றியது.

இதை விட எல்லாம் ஒரு அபத்தம் இளையராஜா நாயின் குரைப்பிலும் சங்கீதம் உண்டு என்று சொன்னது குறித்து பேசியது. இசை என்பது பண்பட்ட ஒலி மட்டுமே, எல்லா ஒலியும் சங்கீதம் என்று தன்னால் ஏற்கமுடியாது என்று சொன்னார். ஞாநியும் நாய்ஸுக்கும், சவுண்டிற்கும் வித்தியாசம் உள்ளது பற்றி விளக்கினார். எல்லா ஒலியும் சங்கீதம் என்று யாரும் எங்கும் சொன்னதாக தெரியவில்லை. எல்லா ஒலியிலும் சங்கீதம் உண்டு என்றுதான் சொன்னது உண்டு. நாயின் குரைப்பை பதிவு செய்தால் அது சங்கீதம் ஆகிவிடும் என்றோ, ஒரு வடிவேலு காமெடியில் சொன்னது போல் எல்லா இடத்திலும் இசையை காண்பதோ அல்ல. இசையின் புனிதத்தை உடைக்கும், எல்லாவற்றிலும் இசையை தேடி அடையாளம் காணும் மனநிலை குறித்தது அது. இன்று இளயராஜாவை சனாதனத்தை இசைத்ததாக சொல்வதற்கு எதிர் உதாரணமாக உள்ளது அவரது கூற்று. நாயின் குரைப்பிலும் இசையை கண்டு அறிவது ஒரு உன்னத மனநிலை. இசையின் மேதை ஏன் அவ்வாறு சொன்னார் என்று கொஞ்ச யோசித்தால் ஏதேனும் புலப்படகூடும். மேலோட்டமாக புரிதல் வந்த பின், பண்பட்ட ஒலி மட்டுமே இசை என்று ஒரு வாக்கியம் அமைத்த உடன் இசை சூட்சுமம் அகப்பட்டதாக நினைத்தால், ராஜா சொன்ன இசை ரகசியம் புலப்பட வாய்பில்லை. மனதை திறந்து வைக்க வேண்டியதை பலமுறை வலியுறுத்திய ஷாஜிதான் கோப்பையை காலியாக வைக்க வேண்டும்.

'பாப் டைலான்' குப்பை என்று ராஜா எப்போது சொன்னார் என்பதை மேற்கோள் காட்ட முடியுமா என்று கேட்கலாமா என யோசித்து, அபஸ்வரம் வேண்டாம் என்று கைவிட்டேன். தமிழில் திரையிசை பற்றிய விமர்சனம் இல்லை என்றார். ஞாநியும் அதற்கான அணுகுமுறைகளை ஷாஜி உருவாக்குவதாக குறிப்பிட்டார். எனக்கு என்ன அணுகுமுறை என்பது சரியாக விளங்கவில்லை. ஆனால், தமிழ் பத்திரிகைகளில் இல்லாவிட்டாலும், திரையிசை பற்றிய பல விமர்சனங்கள் இணையத்தில் தீவிரமான அளவில் உள்ளதாகவே எனக்கு தோன்றுகிறது. அதில் பல போதாமைகள் இருக்கலாம். ஆனால் அதே போன்ற பல பிரச்சனைகள் ஷாஜியின் விமர்சனங்களிலும் உண்டு என்பதே என் கருத்து.