Tuesday, January 24, 2012

காலாமின் யோசனையும், அரசியலும், தீர்வும்.

அப்துல் கலாமின் இலங்கை பயணத்திற்காக அவர் பலவாறு திட்டபட்டார். அந்த கோபத்தில் நியாயம் இருந்தது. இப்போது அவர் மீனவர் பிரச்சனைக்கு தீர்வாக ஒன்றை சொல்கிறார். அப்படி ஒன்றும் சிக்கலாக யோசித்து, நுண்ணறிவு கொண்டு வந்தடைந்த யோசனை அல்ல; சாதாரண பொது அறிவுக்கு தோன்றும் ஒரு யோசனைதான். ஆனால் அதில் தவறான உள்நோக்கமோ, சதித் திட்டமோ எதுவும் இருப்பதாக தெரியவில்லை. தமிழ்நாடு மற்றும் ஈழத்து மீனவர்களிடையே இருக்கும் தீவீரமான பிரச்சனையில் தீர்வை நோக்கி நகர்வதற்கு இந்த யோசனை உதவும்.

காலாமின் யோசனை சிங்களப்படை தமிழ் மீனவர்கள் மீது நடத்தும் இனவெறி கலந்த தாக்குதலுக்கு எந்த தீர்வையும் தரப்போவதில்லை. அந்த பிரச்சனைக்கு இந்தியா மனது வைத்து தீவிர கறாரான நடவடிக்கைகள் எடுத்தால்தான் உண்டு. ஆனால் மீனவர் பிரச்சனையின் இன்னொரு பரிமாணமாக இருப்பது தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் ஈழத்து மீனவர்களுக்கும் இடையிலான மீன்பிடி பிரச்சனை. இந்த பிரச்சனையின் ஆதாரமே தமிழ் நாட்டு மீனவர்களின் மீன்பிடி முறையால் கடல் வளம் நாசமாவதுடன், ஈழத்து மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் இழப்பதுதான். இந்த பிரச்சனைக்கான தீர்வை இருதரப்பும் பேசித்தான் நெருங்க முடியும். ஆனால் பேசத்தயாராக இல்லாத தமிழ்நாட்டு தரப்பு, பேசுவது -குறைந்த பட்சமாக பிரச்சனையை எழுப்புவது கூட- ஏதோ துரோகம் என்பது போல் பேசும் தமிழ் தேசிய தரப்பு இதற்கான சாத்தியங்களை உருவாக்கப் போவதில்லை.

கலாம் முன்வைப்பது போல், மூன்று நாட்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதும், மூன்று நாட்கள் ஈழத்து மீனவர்கள் மீன்பிடிப்பதும் இப்போதைக்கு சமரச தீர்வாக ஒப்புகொண்டு தொடங்கலாம் என்று தோன்றுகிறது. இந்த யோசனையும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சாதகமானதே. தமிழக மீனவர்களின் கடல்சொத்தை மொத்தமாக அறுவடை செய்யும் மீன்பிடி முறையால், இது தங்களுக்கு சாதகமானது அல்ல என்றே ஈழத்து மீனவர்களின் தரப்பு நினைக்கிறது. ஆனால் இப்போதைக்கு இதைவிட மேலான தீர்வுக்கான யோசனை இருப்பதாக தெரியவில்லை. தமிழ்நாட்டு மீனவர்களின் எண்ணிக்கையையும், ஈழத்து மீனவர்களின் எண்ணிக்கையையும் மனதில் கொண்டு இந்த யோசனையை ஈழத்தவர்கள் ஏற்க வேண்டும். உரையாடல், பிரச்சனைக்கான தீர்வு நோக்கி நகர்தல் ஒருதரப்பை மற்றவர்கள் புரிந்து கொள்ளுதல் என்பதற்கு எந்த அறிகுறிகளும் இல்லாத இன்றய நிலையில் இங்கே தொடங்குவது சரியாக இருக்கும். கலாம் போன்ற அதிகாரத்துடன் தொடர்புடையவர் இதை முன்வைப்பது இந்த யோசனையை நடைமுறையில் சாத்தியப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்த கவலையுடன் தீர்வுகளை பற்றி கவலைப்படாதவர்கள், இந்த முறையும் வழக்கம் போல கலாமை திட்டி அரசியல் சார்ந்து மனநிறைவடையலாம். அதனால் மீனவர்களுக்கு எந்த லாபமும் இல்லை. இந்த அரசியல் ஆவேசப் பிடிவாதத்தை மீறி, மீனவர்கள் நலன் பற்றி கவலைப்படுபவர்கள் யோசிக்க வேண்டும்.

கலாமின் யோசனையை ஏற்பதால் சிங்களப்படை தமிழ்நாட்டு மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதலை நிறுத்த முடியாது. அதற்கான போராட்டங்களும், எதிர்ப்பும், அரசியலும் தொடரத்தான் வேண்டும். ஆனால் தமிழ்நாட்டு மீன்பிடி முறையால் ஈழத்தவர்கள் பாதிப்பதால்தான் அவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுகிறார்கள் என்கிற பொய்பிரச்சரத்தை, இந்த இருதரப்பிற் கிடையிலான மீன்பிடிப் பிரச்சனையை தீர்ப்பதன் மூலம் முறியடிக்க முடியும். எப்படி இருந்தாலும் இது காலப்போக்கில் இரு தரப்பின் நியாயத்தையும் கணக்கில் கொண்டு ஏற்று தீர்க்கப்படவேண்டிய ஒரு பிரச்சனைதானே.