Thursday, November 8, 2012

வரலாற்றாறு.

(ட்விட்டர் விவாதத்தினிடையில் எழுதியது)


ரஹ்மான் நேரடியாக இளையராஜாவிடம் என்ன கற்றார், பெற்றார் என்பது தெளிவில்லை; அது குறித்த விவரிப்பை அவர் நேர்மையாக முன்வைப்பார் என்று எனக்கு தோன்றவில்லை. ஒருவேளை ரஹ்மான் ராஜாவுடன் பணியாற்றியிருக்கவே இல்லையென்றே வைத்துகொண்டாலும்கூட, ராஜாவின் 16 வருட பயணமின்றி ரஹ்மானின் இசை தோன்ற வாய்ப்பில்லை. ராஜாவின் பாணியை ரஹ்மான் பின் பற்றினார் என்று சொல்லவரவில்லை (ஒரளவு சிலவற்றை பின்பற்றினார் எனினும், பின்பற்றுவது சாத்தியமில்லை என்பது வேறு விஷயம்). ரஹ்மான் தந்த இசையை 80கள் இசையின் நாம் முற்றிலும் விளங்கிகொள்ளகூடிய இயல்பான பரிணாம மாற்றமாகவே பார்க்கமுடியும் (வளர்ச்சி என்று நான் இங்கு வேண்டுமென்றே சொல்ல விரும்பவில்லை). ரஹ்மான் தனக்கே தனித்துவமான பல சோதனைகளையும் புதுமைகளையும் செய்தார். அவை முன்னதின் தொடர்ச்சியாகயே நிகழ்ந்தது . மாறாக ராஜா செய்தது குவாண்டம் இயற்பியலின் தோற்றம் போன்ற ஒரு புரட்சி; அது அதற்கு முன்னான தமிழ் திரையிசையின் தொடர்ச்சியயாவும், தொடர்பறுந்த பாய்ச்சலாகவும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது. இதை பற்றியெல்லாம் விரிவாக பேசலாம். இதை புரிந்துகொண்டவர்கள் ஏற்றுக்கொண்டவர்களுடன் மட்டுமே இப்போதைக்கு பேச விழைகிறேன். 

இங்கே கவனிக்க வேண்டியது ராஜா தொடர்ந்து தனக்கு முந்தய இசை முன்னோர்களை தெளிவான வார்த்தைகளில் அக்னாலெட்ஜ் செய்துள்ளது. ஜீகே வெங்கடேஷை குரு என்கிறார்; எமெஸ்வியும் ராமமூர்த்தியும் துப்பிய எச்சிலாக தன் இசையை சொல்கிறார். இது மட்டுமில்லாது தன்னுடய எல்லா உந்துதல்களையும், நம்மால் எளிதில் கண்டுபிடிக்க இயலாத பல உந்துதல்களையும் நேர்மையாக முன்வைத்திருக்கிறார். மாறாக ரஹ்மான் திரையிசையில் தான் ஏறி நிற்கும் தோள்களையும் தூண்களையும் முறையாக அக்னாலெட்ஜ் செய்து நானறியேன். ஏதோ அங்கொன்று இங்கொன்றாக சம்பிரதாயமாக சொன்னது மட்டுமே. 

ரஹ்மான் புயலாக நுழைந்து, பூகம்பமாக புகழ் பெற்ற பின், ஒரு குமுதம் பேட்டியில் தனக்கு பிடித்த தன்னை பாதித்த இசையமைப்பாளர்களாக எம்மெஸ்வியையும் டி.ராஜேந்தரையும் குறிப்பிட்டார். அதை வாசித்து அன்று கொதிப்படைந்தேன். (இந்த தகவலை அண்மையில் ராஜேந்தர் சொல்லியிருப்பார்; பலர் ராஜேந்தர் உடான்ஸ் விடுவதாக எடுத்து கிண்டலடித்திருப்பார்கள். ஆனால் ரஹ்மான் சொன்னதான செய்தி உண்மை.) இந்நிலையில் நேரடியாக ராஜாவுடன் பணியாற்றியதன் மூலம் பெற்றதை எல்லாம் ரஹ்மான் ஒருநாளும் நேர்மையாக முன்வைக்க போவதில்லை. 

ராஜாவின் செல்வாக்கை ஒழிக்க பாலசந்தர் மணிரத்தினம் போன்றவர்களால் ரஹ்மான் உருவாக்கப்பட்டதான கதை இன்று நமக்கு தெரியும். அது அப்படியே உண்மையெனில் அன்று ரஹ்மானுக்கு ஒரு தொழில் சார்ந்த நிர்பந்தம் இருந்திருக்க கூடும். ஆனால் அதற்கு பின்னும் அவர் வெற்று உபசார வார்த்தைகளை தவிர பெரிதாக பேசியதாக தெரியவில்லை; தெரிந்தால் மகிழ்வேன்.

Tuesday, May 1, 2012

ஞானத்தின் மடத்தனம்.

நேர்மையற்ற குதர்க்க புத்தியை தர்க்க அடைப்படையாக கொண்டு, தனக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடிய மடத்தனத்தை, ஏதோ ரொம்ப தர்மாவேசம் போல ஞாநி முன்வைப்பது இது முதல் தடவை அல்ல. திருவாசகம் வெளிவந்த போதே கேனத்தனமான பல கேள்விகளை, அரசியல் ஆவேசமாக முன்வைத்தவர்தான். இந்திய இசைச்சூழலில் யாருக்கும் சாத்த்தியம் ஆகாத சாதனையை நிகழ்த்திய மேதையை 'அரசு பணத்தை திருடினார்' என்று எந்த லாஜிக்கும் இன்றி பிதற்றியவர்தான் இவர். இப்போது சமீபத்தில் பலரை வேறு உலகிற்கு அழைத்துச் சென்ற How to Name it நிகழ்ச்சி அவர் கையில் மாட்டியிருக்கிறது. 'How to name it' நிகழ்தியது ராஜா அல்ல; அவரே நடத்தினாலும் யார் வயலின் வாசிப்பது என்பதை தீர்மானிக்க அவருக்கும், நிகழ்வை நிகழ்த்தியவர்களுக்கும் எல்லா உரிமையும் உள்ளது. யாருக்கேனும் உரிமையுள்ளதை திருடினாலோ, பணம் தராமல் ஏமாற்றினாலோதான் குற்றம். நரசிம்மனை வயிலின் வாசிக்க வைக்கவில்லை என்பதில், என்ன எழவு மனிநேயம் குலைந்து போகிறது? உலகில் உள்ள குயுக்திகள் அத்தனையையும் சேர்த்தாலும் இதில் மனித நேயத்திற்கு ம், நேர்மைக்கும் என்ன சம்பந்தம் வந்தது என்று புரியவில்லை. நரசிம்மன் ராஜா படைத்த இசைக்கோர்வையை, எழுதிக்கொடுத்தப்படி மேற்பார்வைக்கு ஏற்ப வாசித்தவர். ஒருவேளை ஞாநி எழுதும் குப்பை நாடகங்கங்களில் எல்லாம் முதன்முறை நடித்த நடிகர்களைத்தான் எல்லாமுறையும் நடிக்கவைப்பாரா? ஒருவேளை ஞாநி அப்படி ஒரு பைத்தியக்கார நடைமுறையை பினபற்றினாலும் மற்றவர்களுக்கு என்ன தலையெழுத்து? அடுத்து கேஸட்டில் பெயர் போடாதது. ரஹ்மான் இசைக்கலைஞர்களின் பெயரை போட்டாராம்; ராஜா அன்று போடவில்லையாம். ஏன் M. S. விஸ்வநாதனும், நௌஷாத்தும், பர்மன்களும் கூட யார் தன் குழுவில் ட்ரம்ஸ் வாசித்தார்கள் என்ற செய்தியை ரெகார்டில் பதிவு செய்ததில்லை. ஜிகே வெங்கடேஷின் சில பாடல்களை இளையராஜா எழுதிக் கொடுத்ததாகவே நம்பிக்கைகள் உண்டு. எத்தனை கேசட்டில் ராஜாவின் பெயரை வெங்கடேஷ் பதிவு செய்திருக்கிறார். A.R.ரஹ்மான் செய்தது பாரட்டுக்குரியது என்றாலும், அதில் நேர்மையாக வேறு வழியில்லை என்பதுதான் உண்மை. ரஹ்மானின் இசை உருவாகும் விதத்தை அறிந்தவர்களுக்கு, அதில் மற்ற இசைக்கலைஞர்களின் கிரியேடிவான பங்கு உண்டு என்கிற விஷயம் நன்றாக தெரியும். ரஹ்மானும் மற்ற இசை கலைஞர்களும் அதை சொல்லியும் உள்ளனர். ராஜா இசையில் அவரன்றி படைப்புரீதியாக அங்கு யாருக்கும் எந்த பங்கும் இல்லை. முழுக்க அவர் தனிமையில் எழுதியது மற்றவர்களால் வாசிக்கப்படுகிறது. ஆயினும் ரஹ்மான் முன்னுதாரணம் காட்டிய நடைமுறையை பின்பற்றி இசைத்தவர்களின்பெயரை போடத் தொடங்கினார். அப்படியே போடாமல் விட்டாலும் அதில் எந்த மனிநேயத்திற்கு எதிரான செயலும், அயோக்கியத்தனமும் இல்லை. ஞாநி சொல்வதுபோல் 'தன் இசையை சிறப்பாக வெளிப்படுத்தி தனக்கு புகழ் சேர்த்துத் தரும் கலைஞர்களை எப்போதுமே அலட்சியப்படுத்தி இருட்டடிப்பு செய்து வருவ'தாக ஞாநி என்கிற சைக்கோவை தவிர இளையராஜாவிடம் பணியாற்றிய யாராவது சொல்லியுள்ளார்களா? எத்தனையோ இரக்கமற்ற சமூக நிகழ்வுகளுக்கு பயன்படுத்த வேண்டிய மனித நேயமின்மை என்கிற வார்த்தையை எந்த லாஜிக்கும் இல்லாமல் இளையராஜாவை நோக்கி இவர் பயன்படுத்தவேண்டிய காரணம் என்ன? இந்தியா முழுக்க யாருடனும் ஒப்பிட முடியாத இந்த மேதையின் மீதான இந்த வெறுப்பை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஞாநியிடம் வெளிபடுவது அரசியல் சார்ந்த மனநோயா, அல்லது சாதி சார்ந்த தலித் வெறுப்பா, வேறு ஏதாவது வெளிவராத பிரச்சனையா என்று புரியவில்லை. அது எப்படியிருந்தாலும் சமூகத்தில் ஒரு நேர்மையான கருத்தாளராக மதிக்கப்படும் இவர் ராஜா மீது காட்டும் இந்த வெறுப்பை அம்பலப்படுத்துவது முக்கியமானது. இவரின் லூஸுத்தனமான வாதங்களை முதிராத இணைய ஆவேசக்காரர்கள் தொடரப்போவதுதான் கவலைக்குரிய விஷயம். இளையராஜா போன்ற ஒருவர் பெங்காலில் பிறந்திருந்தால் தங்கள் அடையாளமாக கடவுளாக கொண்டாடியிருப்பார்கள். இங்கே இல்லாத பொல்லாத தர்க்கத்தை எல்லாம் கண்டுபிடித்து அவரை காலிபண்ணுவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். நம் அறிவு நோய்கூறுக்கு ராஜாமீதான இந்த வெறுப்பை விட சிறந்த உதாரணம் வேறு கிடையாது.

Monday, March 5, 2012

இரு குறிப்புகள்

குறிப்பு 1: கூடங்குளம் போராட்டத்தில் களத்தில் நிற்பவர்கள் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறார்கள்; போரடுவதன் அணுகுமுறையும், முன்னெடுப்புகளும், அவர்கள் அளவிற்கு நமக்கு தெளிவிருக்காது. என் கரிசனம் அவர்கள் ஏதோ ஒரு நெருக்குதலில் வன்முறைக்கு மாறக்கூடாது என்பதே; இதுவரை வன்முறையற்று இருக்கும் போராட்டம் வன்முறையாவதை அரசாங்கம் மிக விரும்பும்; வன்முறையை சமாளிப்பதும், ஒடுக்குவதும், அந்த ஒடுக்குதலை நியாயப்படுத்துவதும் அரசுக்கு இலகுவானது. மேலும் இப்போதிருக்கும் சூழலில் வலிமை கொண்ட அரசு அதிகாரத்தை வன்முறை மூலம் பணிய வைக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக தெரியவில்லை. வன்முறையில் இறங்குவதற்கான நெருக்குதல் எல்லவகையிலும் இருக்கிறது. ஆனால் இந்த இறுதி சந்தர்பத்திலும், இருக்கும் ஜனநாயக முறைகளில் தொடர்ந்து அரசை இழுத்தடிக்கும் வாய்ப்பு நிச்சயம் உள்ளது. அதற்கான உறுதியும் தளராமையும் போராடுபவர்களுக்கு இருப்பதையும் காணமுடிகிறது. என்ன நடக்கப்போகிறது என்று பார்போம்.


குறிப்பு 2: இன்று சென்னையில் நடக்கவிருக்கும் என்கவுண்டருக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு தமிழ் தேசியம் பேசுபவர்கள் கலந்து கொள்கின்றனர்; இது வேறு எங்கும் பார்க்காத மிக ஆரோக்கியமான நிகழ்வு. ஒரு சபால்டர்ன் மக்கள் கூட்டத்தின் மீதான வன்முறையை, இடதுசாரிகளும் மற்ற மனித உரிமையாளர்களும் எதிர்ப்பது இயல்பாக நாம் காணக்கூடியது. ஆனால் இன்னொரு தேசிய அடையாளத்தின் மீது நிகழ்ந்த வன்முறைக்கு எதிராக, அதற்கு எதிரான தேசியம் பேசுவோர் திரள்வது என்பது (குறைந்த பட்சம் இந்திய அளவில்) நான் பார்த்ததில்லை. தேசியத்தின் பாசிசம் என்பது, அது குறிவைத்து எதிர்க்கும் தேசிய அடையாளத்தைக் கொண்ட எளிய மக்களின் மீதான வன்முறையாகத்தான் முதலில் இருக்கும். மும்பை மற்றும் கர்நாடகாவில் தாக்கப்பட்ட தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் சேரிகளின் வசித்தவர்கள். இப்போது முல்லை பெரியார் விவகாரத்திலும் கூலிக்கு சென்ற மக்களும், ஐயப்பன் கோவிலுக்கு போகும் எளிய மக்களும்தான் கேரளாவில் தாக்கப்பட்டு உள்ளனர். இயல்பாக பேசவேண்டிய மனித உரிமையாளர்களின் குரலும், இடதுசாரி செயல்பாடும் இந்த வன்முறைக்கு எதிராக நிகழ்ந்து நான் அறியவில்லை. இந்த யதார்த்தத்தில் வட இந்தியர்கள் மேலான இந்த வன்முறையை தமிழ்தேசியர்கள் எதிர்ப்பது தமிழக அரசியல் சூழல் குறித்து நாம் பெருமிதம் கொள்ளவேண்டிய விஷயம். இது திடீரென நிகழ்ந்து விடவில்லை. ஏராளமான அரசியல் விவாதங்களின் விளைவாகவே இப்படி ஒரு அரசியல் சூழல் இங்கே முகிழ்ந்திருக்கிறது.

இன்று சென்னையில் இருக்கக்கூடிய (அல்லது இருப்பதாக சொல்லக்கூடிய) வட இந்தியர்களுக்கு எதிரான மனோபாவம் என்பது, போலிஸ் வழிமுறைக்கு ஆதரவான பொதுப்புத்தியும், அரசியலற்ற அரசு வன்முறையுமே தவிர, எந்த அரசியல் சார்ந்தும் நிகழ்வில்லை. இந்த நிலையில் தமிழ் தேசியம் உட்பட எல்லா எதிர்ப்பு அரசியல் பேசும் அனைவரும் இந்த மனோபாவத்திற்கு எதிராக இருப்பது மிக ஆரோக்கியமானது. இந்த ஆரோக்கிய சூழல் குறித்த பிரஞ்ஞை கூட இல்லாமல் தமிழகத்தை பாசிச பூமியாக சிலர் சித்தரிக்க முயலும் போது, இதை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. மற்றபடி தமிழ்தேசியம் மீது எப்போதும் இருக்கும் விமர்சனங்கள் இப்போதும் உள்ளது.

Tuesday, January 24, 2012

காலாமின் யோசனையும், அரசியலும், தீர்வும்.

அப்துல் கலாமின் இலங்கை பயணத்திற்காக அவர் பலவாறு திட்டபட்டார். அந்த கோபத்தில் நியாயம் இருந்தது. இப்போது அவர் மீனவர் பிரச்சனைக்கு தீர்வாக ஒன்றை சொல்கிறார். அப்படி ஒன்றும் சிக்கலாக யோசித்து, நுண்ணறிவு கொண்டு வந்தடைந்த யோசனை அல்ல; சாதாரண பொது அறிவுக்கு தோன்றும் ஒரு யோசனைதான். ஆனால் அதில் தவறான உள்நோக்கமோ, சதித் திட்டமோ எதுவும் இருப்பதாக தெரியவில்லை. தமிழ்நாடு மற்றும் ஈழத்து மீனவர்களிடையே இருக்கும் தீவீரமான பிரச்சனையில் தீர்வை நோக்கி நகர்வதற்கு இந்த யோசனை உதவும்.

காலாமின் யோசனை சிங்களப்படை தமிழ் மீனவர்கள் மீது நடத்தும் இனவெறி கலந்த தாக்குதலுக்கு எந்த தீர்வையும் தரப்போவதில்லை. அந்த பிரச்சனைக்கு இந்தியா மனது வைத்து தீவிர கறாரான நடவடிக்கைகள் எடுத்தால்தான் உண்டு. ஆனால் மீனவர் பிரச்சனையின் இன்னொரு பரிமாணமாக இருப்பது தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் ஈழத்து மீனவர்களுக்கும் இடையிலான மீன்பிடி பிரச்சனை. இந்த பிரச்சனையின் ஆதாரமே தமிழ் நாட்டு மீனவர்களின் மீன்பிடி முறையால் கடல் வளம் நாசமாவதுடன், ஈழத்து மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் இழப்பதுதான். இந்த பிரச்சனைக்கான தீர்வை இருதரப்பும் பேசித்தான் நெருங்க முடியும். ஆனால் பேசத்தயாராக இல்லாத தமிழ்நாட்டு தரப்பு, பேசுவது -குறைந்த பட்சமாக பிரச்சனையை எழுப்புவது கூட- ஏதோ துரோகம் என்பது போல் பேசும் தமிழ் தேசிய தரப்பு இதற்கான சாத்தியங்களை உருவாக்கப் போவதில்லை.

கலாம் முன்வைப்பது போல், மூன்று நாட்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதும், மூன்று நாட்கள் ஈழத்து மீனவர்கள் மீன்பிடிப்பதும் இப்போதைக்கு சமரச தீர்வாக ஒப்புகொண்டு தொடங்கலாம் என்று தோன்றுகிறது. இந்த யோசனையும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சாதகமானதே. தமிழக மீனவர்களின் கடல்சொத்தை மொத்தமாக அறுவடை செய்யும் மீன்பிடி முறையால், இது தங்களுக்கு சாதகமானது அல்ல என்றே ஈழத்து மீனவர்களின் தரப்பு நினைக்கிறது. ஆனால் இப்போதைக்கு இதைவிட மேலான தீர்வுக்கான யோசனை இருப்பதாக தெரியவில்லை. தமிழ்நாட்டு மீனவர்களின் எண்ணிக்கையையும், ஈழத்து மீனவர்களின் எண்ணிக்கையையும் மனதில் கொண்டு இந்த யோசனையை ஈழத்தவர்கள் ஏற்க வேண்டும். உரையாடல், பிரச்சனைக்கான தீர்வு நோக்கி நகர்தல் ஒருதரப்பை மற்றவர்கள் புரிந்து கொள்ளுதல் என்பதற்கு எந்த அறிகுறிகளும் இல்லாத இன்றய நிலையில் இங்கே தொடங்குவது சரியாக இருக்கும். கலாம் போன்ற அதிகாரத்துடன் தொடர்புடையவர் இதை முன்வைப்பது இந்த யோசனையை நடைமுறையில் சாத்தியப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்த கவலையுடன் தீர்வுகளை பற்றி கவலைப்படாதவர்கள், இந்த முறையும் வழக்கம் போல கலாமை திட்டி அரசியல் சார்ந்து மனநிறைவடையலாம். அதனால் மீனவர்களுக்கு எந்த லாபமும் இல்லை. இந்த அரசியல் ஆவேசப் பிடிவாதத்தை மீறி, மீனவர்கள் நலன் பற்றி கவலைப்படுபவர்கள் யோசிக்க வேண்டும்.

கலாமின் யோசனையை ஏற்பதால் சிங்களப்படை தமிழ்நாட்டு மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதலை நிறுத்த முடியாது. அதற்கான போராட்டங்களும், எதிர்ப்பும், அரசியலும் தொடரத்தான் வேண்டும். ஆனால் தமிழ்நாட்டு மீன்பிடி முறையால் ஈழத்தவர்கள் பாதிப்பதால்தான் அவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுகிறார்கள் என்கிற பொய்பிரச்சரத்தை, இந்த இருதரப்பிற் கிடையிலான மீன்பிடிப் பிரச்சனையை தீர்ப்பதன் மூலம் முறியடிக்க முடியும். எப்படி இருந்தாலும் இது காலப்போக்கில் இரு தரப்பின் நியாயத்தையும் கணக்கில் கொண்டு ஏற்று தீர்க்கப்படவேண்டிய ஒரு பிரச்சனைதானே.