Friday, October 7, 2011

Steve Jobs!

நேற்று காலை எழுந்து காப்பியுடன் ஸஃபாரியை கிளிக்கினால், தீர்க்கமாக பார்க்கும் ஸ்டீவ் ஜாப்ஸின் உருவம்; அருகில் 1955-2011 என்றது. இந்த பெயரை இதற்கு முன் கேள்வியுற்றிருந்தும், அடையாளம் காணும் வகையில் புகைப்படத்தில் பார்த்ததில்லை என்பதை வெட்கத்தோடுதான் இப்போது சொல்லவேண்டும். காலையின் முதல் வழக்கத்தின்படி, அப்படியே ட்விட்டர் சென்று, #RIP Steeves தவிர ட்விட்ட வேறு எந்த மேட்டருமே இல்லாதது போன்ற ஒரு சூழலில், ஓரளவு செய்தியை படித்து தெரிந்து கொண்டேன். கேன்சரால் ஒருவர் இறப்பது குறித்த பச்சாதாபம் தோன்றினாலும், அப்படி ஒரு வாய்ப்பு நமக்கும் இருப்பதை நினைவுபடுத்தும் மிரள் மின்னல்தான் மனதில் அலை ஏற்படுத்தியது.

நம்மால் உணரமுடியாத ஒரு விஷயத்திற்காக, இணையமே உருகி உணர்ச்சி கொந்தளிப்பது ஒருவகை எரிச்சல் உளவியலை ஏற்படுத்தியிருக்கலாம். உண்மையை அப்படியே சொல்லவேண்டுமானால், இப்போது ஒரு நாளில் தெரிந்திருப்பதில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட நேற்று காலையில் எனக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி தெரியாது. அப்போதும் தெரிந்தது ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் CEO என்று சில வார்த்தைகள் மட்டும். பில் கேட்ஸ் போன்ற இன்னொரு முதலீட்டிய குறியீடான ஒரு நபருக்கு இத்தனை மிகைபடுத்தப்பட்ட உணர்ச்சி தேவையா என்ற கேள்வியே உள்ளபடி வந்தது. அந்த நேரத்தில் கண்ணில் பட்ட, இரு தீவிர இடதுசாரி ட்வீட்டர்களின் சில ஸ்டீவிற்கு எதிரான கீச்சுகளை மறு கீச்சு செய்தேன். வேறு சில கீச்சுகளில் இருந்த வரிகள் எனக்கு ஒப்புதல் இல்லாததால் சுட்டிகளை நேரடியாக அளித்தேன். செந்தில் நாதன் அது குறித்த தன் வருத்தத்தை தெரிவித்த போதும் எனக்கு சரியாக புரியவில்லை.

ஆனால் ஆர்வம் தூண்ட அடுத்த சில மணி நேரங்கள் இது குறித்த ஏகப்பட்ட செய்திகளையும் கட்டுரைகளையும் வாசிப்பதிலேயே கழிந்தது. ஒரு பரந்த மக்கள் கூட்டத்தின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் தேவையில் வாசித்ததில், வெட்கமும், காலை ட்விட்கள் குறித்த குற்றவுணர்வும் ஏற்பட்டது. பிற்பகலில் அதை நீக்கிய பிறகே மனம் சமநிலை அடைந்தது. இது தொடர்பான எனது பிரச்சனைகளை முன்வைப்பது சில புரிதல்களை வாசிப்பவர்களுக்கு அளிக்கலாம் என்கிற நோக்கத்திலேயே இந்த பதிவை எழுதுகிறேன்.

பள்ளி பருவத்திலிருந்து தொடர்ந்த பல ஆண்டுகளுக்கு தொழில் நுட்ப சமாச்சாரங்களில் பெரிய அளவிற்கு எனக்கு ஈடுபாடு உண்டு. மாவட்ட நூலகத்தில் சுயமான தேடலும், சுஜாதா எழுத்துக்களை வாசித்ததும் இந்த ஆர்வத்தை வளர்த்தன. வாக்கி டாக்கி, ரிமோட் கண்ட்ரோல் என்று நேரடி முயற்சிகளில் வெற்றி பெறவில்லையெனினும், அது மிக சுவாரசியமான விளையாட்டாக இருந்தது. கணினி குறித்து 80களின் மத்தியில் புதிய விஷயங்களை அறிவது ஒரு போதையாகவே இருந்தது. அப்போது பழக்கமாகியிருந்த ஆசிரியருக்காகவே, ஹயர் செகண்டரியில் 'ஃபர்ஸ்ட் குருப்'பிற்கு பதில், என் பள்ளியில் மட்டும் இருந்த 'எலெக்ட்ரானிக்ஸ் குரூப்' எடுக்கலாமா என்று ஒரு உத்வேகம் தோன்றியது. ஆனால் அது மிக குறைந்த மதிப்பெண்கள் எடுத்த 'உருப்படாத மாணவர்கள்' எடுக்கும் க்ரூப் என்று அறிந்ததும் கஷ்டமாக இருந்தது.

எனது சிறுவயது உத்வேகத்தை இங்கே முன்வைப்பது அல்ல நோக்கம்; அடிப்படையில் தொழில் நுட்பத்திற்கு ஆதரவான மனம் இருந்தது என்பதை சொல்வதுதான். பிறகு அறிவியல் சார்ந்த ஆர்வமும், அறிதலும் தொடர்ந்து இருந்தாலும், தொழில் நுட்ப விஷயங்களை தேடி அறிவது என்கிற தேடலும் ஆர்வமும், கிட்டதட்ட மறைந்து போனாலும், அடிப்படையில் தொழில் நுட்பத்திற்கு எதிரான கருத்து நிலை பொதுவாக இருந்ததில்லை; ஆட்டோமொபைலில் இருந்து அணு உலைவரை நம்மை அழிவுக்கு தெளிவாக இட்டு செல்லும் என்று கருதும் இன்றைக்கும், எனக்கு அடிப்படையில் தொழில் நுட்ப படைப்பாக்கத்திற்கு எதிரான பார்வை கிடையாது என்றே நினைத்து வருகிறேன்.

ஆனால் கேபிடலிசம் நமக்கு அளிக்கும் தொழில் நுட்பத்தின் வழிமுறை என்ன? வீட்டில் ஒரு கடிகாரத்தை வாங்கினால் கூட, ஒருவர் கைபட சாவி கொடுக்கப்பட்டு, பல ஆண்டுகளுக்கு பத்திரப்படுத்தி பயன் பெறும் நமது பரம்பரை சமூகப் பழக்கம், இன்றய முதலீட்டிய சந்தைக்கு ஒத்துவாரது. இன்றைக்கு கிடைக்கப் பெறும் எந்த பொருளையும், அதன் பயனாக சாத்தியமுள்ள அதன் வாழ்நாளின், மிக மிக சிறுபகுதியை மட்டுமே துய்க்க வேண்டியுள்ளது. ஒருவருடத்திலேயே அது வழக்கொழிந்ததாக மாற்றப்படுகிறது. ஒரு காலத்தில் ஒரு ரேடியோவை பயன்படுத்தியது போல, ஒரு ஐபாட் 10 வருடங்கள் பயன்படுத்தப்படும் சாத்தியம் இல்லை. இன்னமும் சொல்லபோனால் உங்கள் ஐபாட் நன்றாக செயல்படும்போதே, மேலும் மேலும் புதிய அவதாரங்களை வாங்க நீங்கள் கட்டாயப்படுத்தப்படுகிறீர்கள். அதிலும் திட்டமிட்டு குறிப்பிட்ட இடைவெளியில் மேம்படுத்தல் செய்யப்படுவதும், பிரபலமும் பரவலும் ஆக்கப்படுவதை உணரலாம். ஒரு சிறிய பிரச்சனை உங்களின் எந்த பொருளில் ஏற்பட்டாலும், அதை சரி செய்ய கூடியது எல்லாவகையிலும் தொழில் நுட்பரீதியாக சாத்தியம் இருந்தும், அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு, புதிதாக ஒன்றை வாங்கவே நாம் அனைவரும் கட்டாயப்படுத்தப் படுகிறோம். இதன் விளைவுகள் தனிப்பட்டவரின் பொருளாதாரம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; குப்பைகளாக பொருள்களை மாற்றுவதும் தான். முதலீட்டியத்திற்கு தொடர்ந்து தனக்கான உபரியை உருவாக்கும் கட்டாயம் உள்ளது. அதற்கான சந்தை இயல்பாக நிலவும் நிலையில் தொய்வு நேரும்போது, செயற்கையாக உருவாக்கும் நிலை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் இந்த சந்தைக்காக எந்த வன்முறையையும் உருவாக்க முதலீட்டியம் தயங்குவதில்லை.

இன்றுவரைக்கும் இன்றய முதலீட்டிய தொழில் நுட்பம் உருவாக்கும் குப்பைகளை, பொய் சொல்லாமல், யாருக்கும் எதிர்கால தீங்கின்றி யோக்கியமாக சமாளிக்கும் முறை எதுவும் இல்லை. இந்த நிலையில் அணுக்கழிவுகளையும் நாம் சமாளித்துவிடமுடியும் என்றெல்லாம் நம்பும் 'அறிவியல் மனம்' மத நம்பிக்கைகளை விட விபரீதமானது. (அது உண்மையான பொருளில் அறிவியல் மனம் அல்ல என்பது வேறு விஷயம்). முதலீட்டியத்தின் இன்னொரு கபளீகரம் அது தனி மனித அறிவு பாய்சல்களை முற்றாக தனக்குள் விழுங்கிக் கொள்வது. (ஸ்டீவ் விஷயம் வேறு.)

அடுத்து முதலீட்டியத்தின் சுரண்டல் என்பது நேரடியாக சைனாவிலோ, ஆப்பிரிக்காவிலோ, லத்தீன் அமேரிக்காவிலோ மலைவு விலைக்கு உழைப்பை பெற்று, பெரும் லாபம் பெறுவது என்பது மட்டுமல்ல. காலம் காலமாக நம் உள்ளூர் வியாபாரிகள் கூட ஒருவகையில் அத்தகைய சுரண்டலை செய்து வந்தார்கள். புதிய பொருளாதார விதிகளையும், பொருளாதார நெருக்கடிகளையும், தேவைகளையும், தட்டுபாடுகளையும் எல்லோருக்கும் ஏற்படுத்துவதன் மூலமும், வளங்களை கொள்ளையடிப்பதன் மூலமும், அழிப்பதன் மூலமும், சாக்கடையாக்குவதன் மூலம் இந்த சுரண்டலின் பரிமாணம் விரிகிறது. முதலீட்டியம் மனித இனம் வந்தடைந்த அமைப்புகளிலேயே மிக மோசமான சுரண்டல் அமைப்பாக நான் பார்க்கிறேன். ஏனெனில் முதலீட்டியம் தன் அமைப்பின் இயங்குதலை தெளிவாக புரிந்து கொண்டிருப்பதும், அதை துல்லியமாக திட்டமிட்டு ஈவு இரக்கம் சார்ந்த மதிப்பிடுகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுத்துவதுமே காரணம்.

ஆனால் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தொழில் நுட்ப வளர்ச்சி, நுகர்வு கலச்சாரத்துடன் சேர்ந்து ஏற்படுத்தும் கட்டாயங்களுக்கு ஏற்ப நம்மை மேம்படுத்திக் கொள்ளவே வேண்டியுள்ளது. இது காலம் ஏற்படுத்தும் சுமை அல்ல, நமது சுதந்திரத்தை விரிவு படுத்தும் செயல் ஆகும். ஆனால் இந்த வளர்ச்சியில் முதலீட்டிய நுகர்வு அழுத்தங்களை எவ்வளவு இயலுமோ அவ்வளவு தவிர்ப்பதே, நுகர்வு கலாச்சாரத்திற்கு தனி மனித அளவிலான எதிரான நடவடிக்கையாக இருக்க முடியும். நான் என்னளவில், என் பொருளாதார வசதி வாய்ப்பளித்தாலும், தொழில் நுட்பரீதியாக என்னை எல்லாவிதத்திலும் அப்டேட் செய்துகொள்வது கிடையாது. அந்தவகையில் 2000த்தில் நடந்த ஐ-மாற்றங்களை நான் அறியாமலே இருந்திருக்கிறேன். பல மாற்றங்களை முதலீட்டியம் அளிக்கும் நிர்பந்தங்களாகவும், ஹைபர் வசதிகளாகவும், ஹைபர் விடுதலையாகவும் மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. ஆனால் அவை பயன்பாடு என்பதன் அர்த்தத்தையும், அது குறித்த புரிதலையும் காலாகாலத்துக்கும் மாற்றிய சமாச்சாரமாக நேற்றுதான் வாசித்து புரிந்து கொண்டேன்.

ஒரு முதலீட்டிய நிறுவனத்தின் ஒரு நிறுவனருக்கு, வந்த மிகையுணர்சி அஞ்சலிகள், மேலே சொன்ன காரணங்களால் அதீதமாக பட்டு எதிர்வினையாக ஏதாவது செய்ய என்னை தூண்டியது. பில் கேட்ஸை போல முதலீட்டியத்தின் அநியாய விதிகளை சாதமாக்கிகொண்ட ஒருவராக மட்டுமே ஸ்டீவை பற்றி என்னளவில் இருந்த பிம்பமே இதற்கு காரணம். ஆனால் அவர் அவரளவில் சிறந்த தொழில் நுட்பவாதி மட்டுமின்றி, காலத்தில் மனித இனததை முன்னெடுத்து சென்ற கலைஞன் என்பதான அறிதல் நேற்றய வாசிப்பிற்கு பிறகே ஏற்பட்டது. இது ஒரளவு வெட்கமாக இருந்தாலும், அதை வெளிப்படையாக சொல்வதுதான் இதை தாண்டி வரும் வழியாக எனக்கு தெரிகிறது. நமக்கான அரசியல் பார்வை, சில சந்தர்ப்பங்களில் மூர்க்க எதிர்வினை செய்ய தூண்டுவதை விளங்கிக் கொள்ளவும், அது குறித்த சுயவிமர்சனத்தை முன்வைக்கவும் இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக எனக்கு இருந்தது. இந்த தெளிவில், இப்போதும் நேரடியாக அறிதலாக எனக்கு அவரது மேதமை புரியாவிட்டாலும், வாசித்து அறிந்தவரையில் நானும் ஸ்டீவுக்கு அஞ்சலி செலுத்த விரும்புகிறேன்.

நுகர்வு கலாச்சாரம் ஏற்படுத்தும் போலி தொழில்நுட்ப நெருக்குதல்களையும், தேவைகளையும் எதிர்க்கும் காரணத்தால் தொழில் நுட்ப பாய்ச்சல்களை புறக்கணிக்க முடியாது. தொழில் நுட்பம் சமூகத்தில் மேலாண்மை செய்பவர்களுக்கு மட்டுமின்றி, அடித்தளத்தில் உள்ளவர்களுக்கும் பெரியதொரு வாழ்வியல் விடுதலையை எல்லா தளங்களிலும் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது. எல்லா தொழில் நுட்பப் புரட்ச்சியும் ஒட்டுமொத்த சமுதாய வாழ்க்கையை புரட்டி போட்டியிருக்கிறது. ஆனால் தேவைக்கும், பேராசை இட்டுச் செல்லும் பெருந்தேவைக்குமான வித்தியாசத்தை உணராத வரையில், அது நம்மை இட்டுச் செல்லும் அழிவு தவிர்க்க முடியாது.

பின் குறிப்பு: எம்டிஎம் ஸ்டீவை 'எதிர்கலாச்சாரத்தின் தொழில் நுட்ப முகமாக' பார்க்க விரும்பி ஒரு பதிவு போட்டிருந்தார். (அதை உந்துதலாக கொண்டு, 'தொழில் நுட்பத்தின் எதிர்கலாச்சார முகமாக' அவரை அடுத்த கட்டத்திற்கு நண்பர்கள் எடுத்து செல்வது சுவாரசியமானது.) இது எனக்கு கொஞ்சமும் தெளிவாக இல்லை. முதலில் ஸ்டீவின் மற்ற முகங்கள் என்பது நோபல் பரிசு வாங்கிய விஞ்ஞானி எழுதிய கவிதையும் கவனம் பெறுவது போலத்தான் இருக்கிறதே தவிர, அதற்கான தனித்துவமான முக்கியத்துவம் கேள்விக்குரியது.

ஹிப்பி கலாசாரம், பௌத்தம், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோவில் உண்டக்கட்டி என்று ஒரு கடந்த கால வாழ்க்கை இருந்ததால், அவரது தொழில் நுட்பத்தை அதன் நீட்சியாக பார்ப்பது சரியாகப் படவில்லை. எதிர்கலாச்சாரத்தின் தொழில் நுட்ப முகமாக அவரை நிறுவுவதற்கு, குறைந்தபட்சம் தெளிவு படுத்தி அமோதிக்க வைக்க, இன்னும் மெனக்கிட வேண்டும். எம்டிஎம் கடிக்கப்பட்ட ஆப்பிள் கடவுளின் ஆணையை மீறிய அறிவின் பாதையை தேர்ந்தெடுப்பதன் குறியீடாக கொள்வது சரியாக படவில்லை. ஆதாமின் ஆப்பிளை சிற்றின்பத்தின் குறியிடாக கொள்ள முடியுமா, அறிவின் குறியீடாக கொள்ள முடியுமா? பௌத்தத்திற்கும் சிற்றின்ப ஆப்பிளுக்குமான தொடர்பு என்ன? ஆதாமின் ஆப்பிள் மதச்சட்டகத்தில் எதிர்கலாச்சார குறியீடுதான்; ஆனால் முதலீட்டிய சட்டகத்தில் ஆதாமின் ஆப்பிள் எதிர்கலாச்சாரத்தன்மையை பெற்றிருப்பதாக கொள்ளமுடியவில்லை; முதலீட்டிய நுகர்வுக்கு சாதகாமானதன்மையையே கொண்டிருக்கிறது. 'மனித பரிணாம வளர்ச்சி என்பது கூட்டாகவே சாத்தியம் என்ற எதிர் கலாச்சார விழுமியமே கணிணிகள் எல்லோரையும் சென்றடையவேண்டும் எல்லோரும் பயனர்களாக வேண்டும் என்ற பாதையை ஜாப்ஸிற்குக் காட்டக்கூடியதாக இருந்திருக்கிறது' என்று சொல்வது வலிந்து தரப்படும் அர்த்தமாக எனக்கு தெரிகிறது. அது என் பார்வையின் பிரச்சனையாகவும் இருக்கலாம்.

பேராசைகளினால் தோற்றுவிக்கப்படும் தேவைகளை கொண்டு, புதிது புதிதாக நெருக்கும் முதலீட்டிய நுகர்வு கலச்சாரத்திற்கு ஏதாவது ஒருவகையில், அந்த சட்டகத்தினுள் இருந்து கொண்டே எதிர்வினை புரிவதுதான், ஸ்டீவ் செய்திருக்கக் கூடிய எதிர்கலாச்சார செயல்பாடாக என் பார்வையில் நினைக்கிறேன். வலிந்து ஒரு இடதுசாரி முகமாக சிலர் கட்டமைப்பதை தவிர, அப்படி எதையும் உருப்படியாக நான் கேள்விப்படவில்லை.

ஆனால் ஒருவரின் மேதமையை போற்ற, அவர் நமக்கு உவப்பான சட்டகத்தில் இருக்க வேண்டிய அவசியம் அல்ல; வலிந்து அவரை நம் சட்டகத்தில் கற்பிதம் செய்ய வேண்டிய தேவையும் இல்லை என்று தோன்றுகிறது.

Monday, October 3, 2011

கணிதத்தின் பரிமளம்.

எஸ்ராவின் 'யாமம்' வாசித்துக் கொண்டிருக்கிறேன்; பிரமாதமாக போய்கொண்டிருக்கிறது. ஆங்காங்கே 'வெயில் அவரை பின் தொடர்ந்தது' 'இருள் லண்டனிலும் கமிழ்ந்தது' 'நதி தீர்க்கமாக உற்றுப் பார்த்தது' போன்ற எஸ்ராவின் பழக்கப்பட்டுவிட்ட அலுப்பூட்டும் விவரிப்புகளை தவிர, நாவலின் விஸ்தாரமும், பயணிப்பும் பிரமிப்பூட்டுகிறது. நாவல் குறித்த என் மதிப்பீட்டை இப்பொழுது எழுதும் நோக்கம் இல்லை.

நடுக்கதையில் திருசிற்றம்பலம் என்று ஒரு கணிதவியாலாளன் 'உயர் கணிதம்' படிக்க லண்டன் போகும்போது, கப்பலில் சற்குணத்திடம் சொல்கிறான்.

"பூஜ்யம் என்பது அறுதியான உண்மை, முடிவின்மையது. அது ஒரு தீர்க்கப்படாத ரகசியம். நான் பூஜ்யத்திற்குள் என்னவிருக்கிறது என்றுதான் தேடிக்கொண்டிருக்கிறேன். உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். எண்களுக்கு தனியான குணநலன்கள் இருக்கின்றன. அவை உயிரோடுதானிருக்கின்றன"

இவையெல்லாம் தத்துவமா கவிதையா என்று தீர்மானிப்பதில் எனக்கு குழப்பம் இருந்தாலும், கணிதத்துடன் தொடர்புடையது அல்ல என்பதில் எனக்கு எந்த சந்தேகமில்லை. பூஜ்யம் என்கிற கருத்தாக்கம் உருவான காலத்தில் புதிரானது. ஆனால் பிறகும், இப்போதும் அதை சார்ந்து இப்படி ஒரு தேடல் கணிதத்தின் தளத்தில் இருந்ததில்லை. கணிதவியலாளன் கவிஞனாகவும், தத்துவவியலாளனாகவும் இருக்க முடியாது என்று நானே சொல்ல முடியாது. அதனால் திருசிற்றம்பலம் கவிஞன் என்ற நிலையில் இருந்து, தன் தொழில் குறித்து கவித்துவமாக விவரித்திருக்கலாம் என்று எடுத்துக் கொள்கிறேன்.

ஆனால் அடுத்து விளையாடும் சீட்டாட்டத்தில், சற்குணம் தன் சீட்டை இறக்கியதும் கண்ணிமைக்கும் நேரத்தில் திருசிற்றம்பலம் ஜெயித்துவிடுகிறான். (ஆமாம், கண்ணிமைக்கும் நேரம்தான்.) எட்டு முறை தோற்ற பிறகு எப்படி அவன் இவ்வளவு வேகமாக ஜெயித்து விடுகிறான் என்று சற்குணம் கேட்டதும், " எண்கள் சிதறிக்கிடந்தாலும் அதற்குள் ஒரு ஒழுங்கை கொண்டிருக்கிறது. அது உனக்கு புரியாது" என்றதோடு "அடுத்த முறை நீ சீட்டை கலைத்து போட்டதுமே உன் கைகளில் என்னென்ன சீட்டுகள் இருக்கின்றன என்று சொல்லிவிடவா" என்று கேட்டான்.

நம்பமுடியாத சந்தேகத்துடன் சற்குணம் சீட்டை கலைத்துப் போட்டுவிட்டு தனக்குரிய சீட்டுகளைக் கைகளில் எடுத்து அடுக்கியதும் திருசிற்றம்பலம் அவன் கைகளில் என்னென்ன சீட்டுகள் இருக்கின்றன என்பதையும் சொல்லிவிட்டான். சற்குணம் ஆச்சரியத்துடன் "உனக்கு எப்ப கணிதத்தில் ஆர்வம் உண்டானது?" என்று கேட்டான்.

இப்போது வாசகனான எனக்கு, திருசிற்றம்பலம் இப்படி சீட்டுகளை கண்டுபிடிக்கும் சீன் நாவலில் வரக்கூடாது என்று ஆட்சேபணை எதுவும் இல்லை; அந்த அளவிற்கு யதார்த்தவாத இலக்கிய அடிபடைவாதி அல்ல நான். ஆனால் எந்த கதை, எந்தவகை யதார்த்தங்களை தாண்டினாலும், கதைக்கான ஒரு உள்தர்க்கம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த வகையில் எந்த எண்கணித கொம்பனாலும், எதிராளியின் சீட்டுக்களை பார்க்கவே பார்க்காமல், கணிதத்தை வைத்து கண்டுபிடிக்க முடியாது. எண் கணிதத்தில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மேதை ராமனுஜத்தால் கூட அது சாத்தியமல்ல. ஒரு வேளை அப்படி கண்டுபிடிக்க முடிந்தால், மாந்த்ரீகம் எதையாவது வைத்து அது சாத்தியமாகலாமே ஒழிய கணிதத்தினால் அல்ல. யதார்த்த கணிதத்தை மீறி அப்படி சாத்தியமாகக்கூடிய மாந்திரீக கணிதத்திற்கான கதையின் உள்சட்டகத்தையும் எஸ்ரா சமைக்காததால், இதை ஒரு மகாசொதப்பல் என்றுதான் என்னால் எடுத்துக் கொள்ள முடிகிறது.