Tuesday, August 30, 2011

இனி.

சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத்தடை பலருக்கு மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளது. இது ஒரு இடைக்காலத் தடைதான் என்றாலும், இது தரும் நம்பிக்கையும், கால அவகாசமுமே, திகிலுடன் நடப்பதை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இன்று காலையில், இளம் வழக்கறிஞர் ஒருவர் ஓடி வந்து செய்தியை அறிவித்தவுடனே, நீதிமன்ற‌ வளாகம் முழுக்க பரவிய பெரியதொரு சந்தோஷ ஆர்ப்பாட்டத்தில் கைதட்டி முழுமையாக‌ என்னை அடையாளம் கண்டேன்.

நீதிமன்ற உதவியுடன், மேலும் சில தடைகள் வாங்கி இழுத்த பின்னாவது, இந்த தண்டனையை ரத்து செய்துவிட முடியும் என்று பலர் நம்புகின்றனர்; அப்படியே நடக்க வேண்டும். மத்திய காங்கிரஸ் அரசு தன் இறுக்கமான நிலைபாட்டிலிருந்து இறங்கி வர தயாராக இல்லை என்பதை தெளிவாக, தமிழக சட்டமன்ற தீர்மானத்திற்கான பதிலறிக்கை மூலம் காட்டிக் கொண்டிருக்கிறது. ஆகையால் நீதிமன்றம் மூலம் ரத்தாவது, சாத்தியம் என்றால், இன்னமும் நீண்டகாலத்திற்கு முடிவு குறித்த தெளிவில்லாது இழுத்தடித்த‌ பின்னர் நடக்கலாம்.

ஜெயலலிதா நிகழ்த்திய பேரவை தீர்மானம் பல விதங்களில் முக்கியமானது. குறிப்பாக அது ஜெயலலிதாவின் இந்த தண்டனைக்கு எதிரான நிலைபாட்டை வெளிப்படையாக்குகிறது. அவரது விருப்பமும், உண்மை நிலைபாடும் என்னவாக இருந்தாலும், இதுதான் அறிவிக்கப்பட்டுள்ள நிலைபாடு. இதிலிருந்து அவர் பின்வாங்குவது கடினம் என்ற வகையில் முக்கியமானது. இந்த தண்டனையை ரத்து செய்ய அவருக்கு அதிகாரம் இருக்குமானால், அதை அவருக்கு தர்க்க பூர்வமாக நிறுவ முடியுமானால், முடிவு எடுக்க அவரை அவரது நிலைபாட்டை வைத்தே நிர்பந்தப்படுத்தக் கூடியது என்கிற வகையில் இத்தீர்மானம் முக்கியமானது. கிருஷ்ணய்யர் போன்றவர்கள் கூட சொல்கிறார்கள் என்றால், சட்ட வாதங்கள் மூலம் அதிகாரத்தை சாத்தியப்படுத்த முடியும் என்றுதான் எடுத்துக் கொள்ள வேன்டியுள்ளது.

எந்தவகையிலும் இது நமக்கு-அதாவது மரண தண்டனையை எதிர்ப்பவர்களுக்கு- நிம்மதியையும், ஆசுவாத்தையும், நம்பிக்கையையும் தருவது. ஆனால் குரல் ஒலிப்பதையும், போராட்டம் தொடர்வதையும் இன்னும் தீவிரமாக செய்ய வேண்டியுள்ளது. அதே நேரம், நாம் நம்பியுள்ளது நீதிமன்றமும், ஜெயலலிதாவும் என்பதால் மிகுந்த பொறுப்புணர்வும் தேவைப்படுகிறது. இதுவரையான தமிழுணர்வாளர்களின் போராட்டம்தான் ஜெயலலிதாவிற்கு நிர்பந்தத்தை ஏற்படுத்தியது என்றாலும், போராட்ட முறைகளில் பல முதிர்ச்சியற்றவையாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. எல்லாவற்றையும் பட்டியலிடும் நோக்கம் எனக்கு இல்லை. ஆனால் இன்று காலையில் நீதிமன்ற வளாகத்தில் எழுப்பப்பட்ட பல கோஷங்கள், இந்த நோக்கத்திற்கு உதவப்போவது இல்லை. அதுவும் இடைக்காலத் தடை வந்த பிறகு எழுப்பபட்ட கோஷங்களை பதிவு செய்து, தமிழ் எதிர்ப்பை அணுகுமுறையாக கொண்டுள்ள ஊடகங்கள் சில‌ பரப்பினால் அது நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தப் போவதில்லை.

இந்த விஷயங்களை முதிர்ச்சியுடன் பேச, அணுக ஆள் இல்லை என்றே தோன்றுகிறது. வைகோ பொறுப்புடன் தொடர்ந்து பேசுபவர், திடீரென நேர் எதிராக அவரே பேசுகிறார். இருக்கும் நிலமைகளையும் கட்டாயங்களையும் உணர்ந்து, பொறுப்புடன் இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தலைமை இல்லை என்றே நினைக்கிறேன். தன்னிச்சையாய் நிகழ்ந்ததற்கே பலன் உள்ள நிலையில், பொறுப்பும் சாதூர்யமும் கொண்ட தலைமை நிச்சயம் வெற்றிக்கு எடுத்து செல்லும். யார் என்பதுதான் கேள்வி.

அடுத்து இன்னமும் தமிழுணர்வை தாண்டி மற்ற தளங்களில் இந்த மரண தண்டனைக்கான எதிர்ப்பு விரிவடையவில்லை. இறுதி வெற்றி அடைய அது மிக அவசியம். அதற்கு முயற்சிக்கும் கடமை, அடையாளங்களை தாண்டி மனிதாபிமானமாக சிந்திப்பதாக சொல்லும் தரப்பினரிடம்தான் உள்ளது; அவர்களின் எதிர்ப்பு தனியாக உருவெடுக்காவிட்டால், அதற்கான பழி அவர்களையே சாரும். கால அவகாசம் இருக்கிறது; பார்போம்

Saturday, August 27, 2011

மரணதண்டனைக்கு எதிராக‌.

இன்று பகலில் கோயம்பேட்டில் அங்கையற்கண்ணி, வடிவாம்பாள், சுஜாதா உண்ணாநோன்பில் இருந்த இடத்தில் சுமார் 4-5 மணி நேரம் கழித்தேன்; மாலையிலிருந்து இரவு 10 மணிவரை Save Tamils இயக்கம் நடத்திய 'ஈழ இனப்படுகொலையும், மரண தண்டனையும்' கூட்டத்தில் இருந்தேன்.

கோயம்பேட்டில் கூட்டம் பெரிதாக இருந்தது என்று சொல்லமுடியாது. அதாவது இப்போதிருக்கும் இக்கட்டான சூழலில் திரளவேண்டியது என்று நான் நினைக்கும் எண்ணிக்கையில் இல்லை. நூற்றுக்கு மேல் இருக்கும், ஆனால் நிச்சயமாக 250ஐ தாண்டாது என்றே கணிக்கிறேன். வைகோ காலையில் இருந்தார். இதுவரை பல பொறுப்பற்ற பேச்சுக்களை அவர் பேசியதாக கருதியிருந்த நான், இன்று அவர் மிகுந்த பொறுப்புடன் பேசியதாக கருதினேன். குறிப்பாக 'கோபத்தாலோ, வேதனையாலோ கடினமான வார்த்தைகளை நாம் பேசக்கூடாது; அவைகள் மேலும் திரிக்கப்பட்டு நம் நோக்கத்துக்கு எதிராக திரும்பக்கூடாது' என்று சொன்னது முக்கியமானது. ஆனால் அங்கிருந்த தோழர்கள் அதை கண்டு கொண்டார்களா என்று தெரியவில்லை.

இன்று நாம் போராடக்கூடிய நிலையில் இல்லை; அதிகாரத்திடம் இறைஞ்ச வேண்டிய நிலையில் உள்ளோம். குறிப்பாக தமிழ்தேசியவாதிகள் கொண்டிருக்கும் எல்லா கொள்கைகளுக்கும் எதிராகவும், இடையூராகவுமே இருந்த ஜெயலலிதா என்ற முதல்வரிடம் கெஞ்சும் நிலையில் உள்ளோம். இப்போது நாம் செய்ய வேண்டியது சட்டபபூர்வமான நடவடிக்கைகளும், லாபி செய்வதும், வெகுஜன உணர்வை இந்த மரண தண்டனைக்கு எதிராக கிளப்புவதும்; இதில் வீராவேச பேச்சுக்களும், மற்ற இந்திய எதிர்ப்பு சொல்லாடல்களும், வெளிப்படையான புலி ஆதரவும் எதிரான விளைவுகளையே ஏற்படுத்தும். உதாரணமாக 'கொலையாளி வழக்கில் நிரபாரதிக்கு தூக்கு' என்று கோஷம் எழுப்பியபடி சென்றனர். இதன் அர்த்தத்தை விளக்க வேண்டியது இல்லை.

நான் சொல்வது ஜெயமோகன் சொல்வது போல தோன்றுவதற்கு நான் எதுவும் செய்யமுடியாது. ஆனால் அடிப்படை வித்தியாசம் உண்டு. அவர் இந்திய அரசும், நீதித்துறையும் செய்த அநியாயங்களை நியாயப்படுத்திவிட்டு சொல்கிறார். நான் அந்த அநியாயங்களையும், தமிழரல்லாத அறிவுஜீவிகளை அலட்சியத்தையும் கண்டித்து விட்டு நடைமுறை சார்ந்து எனக்கு தோன்றுவதை சொல்கிறேன்.

தமிழ் தேசிய உணர்வாளர்கள், ம.க.இ.க போன்ற புரட்சிகர தோழர்கள் போராட்டம் நடத்துகின்றனர். அவை முக்கியமானது. ஆனால் இன்றய அரசியல் அதிகார சூழலில் இது போதாது. ஒரு வெகுஜன உணர்வை எழுப்பவேண்டிய தேவையுள்ளது; தமிழ் தேசியம் உதிர்க்கும் தீவிர சொல்லடல்கள் பல பல காரணங்களால் நைந்து இன்று வெகுஜன உணர்விற்கு நெருக்கமாக இல்லை. ஆனால் இன்றைக்கும் 'தமிழர்க்கு இழைக்கக்கூடிய அநீதி' என்கிற உணர்விற்கு வெகுஜன வெளியில் இடம் உண்டு. அதை பரவலாக செய்வதற்கு மைய அரசியல் கட்சிகளும், நம் எல்லா ஊடகங்களும், (கொச்சையானாலும் சினிமாத்துறையும்) கலந்து, ' நிராபராதிக்கு அநியாயமான மரண தண்டனை'' என்கிற வாதத்தை பரப்பினால்தான் உண்டு. இவை தவிர அறிவு ஜீவிகள், பிரமுகர்கள் என்று அறியபட்ட கூட்டமும் எதிராக பேச வேண்டிய உள்ளது. அதற்கான முயற்சிகளும் எடுக்க வேண்டும். அத்தகைய உணர்வுகள் ஜெயலலிதாவை கட்டாயப்படுத்தக் கூடும். அவ்வாறு நடப்பதற்கான சாத்தியங்கள் கண்ணில் தெரியாத நிலையில், எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த அவ‌நம்பிக்கையே உள்ளது.

மாலை நடந்த கூட்டம் மிக சிறப்பானது. முன்னாள் மும்பை நீதிபதி சுரேஷும், இரு தலித் குற்றவாளைகளின் மரணதண்டனையை நிறுத்திய ஹைதராபாத்தை சேர்ந்த சந்திரசேகரும் பேசியது மிக அருமை; மிக முக்கியமானது. ஆனால் இது நாம் பொதுவாக மரணதண்டனைக்கும் (ஈழ இன அழிப்புக்கும்) எதிராக நடத்தகூடிய ஒரு அறிவு சார்ந்த கூட்டம் மட்டுமே. போராட்டங்கள் என்கிற வகையில் சேராது.

இந்த வகையில் நம்பிக்கை தரும் நடவடிக்கைகளாக எதை செய்வது என்று தெரியவில்லை; எந்த சரியான தொடர்புகளும் இல்லாத என்னால் ஆலோசனைகளை கூட உரிய இடத்தில் தருவது சாத்தியமில்லை. என்னளவில் அடுத்த இரு வாரங்களில் இந்த மரண தண்டனைக்கு எதிரான எல்லா பிரயத்தனக்களுக்கும் ஆதரவை தருவதை மட்டும் என் கடமையாக செய்யமுடியும்.

Wednesday, August 24, 2011

ஊழலும், சுரண்டலும்.

ஜெமோ அருந்ததியின் கட்டுரை முன்னிலைப்படுத்தும் கேள்விகளை கண்டுகொள்ளவில்லை, அல்லது உள்வாங்கவில்லை என்பது மட்டுமல்ல; அதை திரித்து, அவதூறு மூலம் வெறுப்பை மட்டும் வெளிப்படுத்தி எதிர்கொண்டார். 'எதுவுமே உருப்படியான கேள்வி இல்லை' என்று ஜெமோ சொல்வது, அவரது வசதியும், அணிந்திருக்கும் கண்ணாடியையும் சார்ந்து அமைகிறது. 'பதில் சொல்லிவிட்டார்கள்' என்று ஜெமோ சுட்டி அளிக்கும் கட்டுரை, ஜெமோ வெறுக்கும் போலமிக்ஸ் பற்றி பேசுகிறதே ஒழிய, அருந்ததி முன்வைக்கும் முக்கிய கேள்வி பற்றி அல்ல.

அருந்ததி அன்னாவை அவதூறு செய்யவில்லை; மாறாக ஜெயமோகன்தான் ஊகங்கள், கற்பனைகள், வசைகள் அடிப்படையில் அருந்ததியை அவதூறு செய்கிறார். அருந்ததி அன்னாவை பற்றிய எழுதியவைகள் அவரது அரசியல் நிலைபாடு, அதிகாரம்/ஊழல் குறித்த புரிதலை முன்வைத்தது மட்டுமே

ஒரு உதாரணமாக 'Who is this Anna?' என்று அருந்ததி கேட்ட கேள்வியை ஜெமோ பெரிதுபடுத்துகிறார். அருந்ததியின் கேள்வி அன்னாவின் அதற்கு முந்தய வாழ்க்கை, தகுதி அனுபவம் பற்றிய கேள்வி அல்ல என்பதை தொடரும் வரிகளை வைத்து ஒருவர் புரியமுடியும். ஜெமோ அவ்வாறு அதை வசதியாக எடுத்து ' நீ யார்' என்று திருப்பி கோபமாக கேள்வி கேட்டு அடிக்கிறார். அருந்ததியின் 'அன்னா யார்?' என்ற கேள்வி, அன்னாவின் அரசியல் நிலைபாடு, அதுவரை அன்னா வெளிப்படுத்திய கருத்துக்கள் பற்றிய‌ கேள்வி; நாட்டின் தலைபோகும் பிரச்சனைகள் குறித்த அன்னாவின் நிலைபாடு பற்றியது.

ஒரு உதாரணம் எடுக்கலாம். மோடியின் அரசை முன்னுதாரணமாக சொல்பவர் காந்தியவாதியாக எப்படி இருக்க முடியும்? எந்த மாதிரி முன்மாதிரியை அவர் தன் சட்டகத்தில் கொண்டுள்ளார்? 2001இல் இஸ்லாமியர் மீது நடந்த தாக்குதலில் மோடியின் பங்கு குறித்து பேசவே வேண்டாம்; அதை பொதுபுத்தியில் பதிலீடு செய்யும் விதமாக, மோடியை குறியீடாக காட்டும் டெவலப்மெண்ட் அரசிலுக்கும் காந்தியத்திற்கும் என்ன தொடர்பு? நர்மதா பிரச்சனை குறித்து அன்னாவின் நிலைபாடு என்ன? அணு ஆயுதம், 'வல்லரசு இந்தியா' இதை பற்றிய கருத்து என்ன? ஊழலை எதிர்க்க காந்திய வழியில் மென்முறை போராட்டம் ஒன்றை கையிலெடுத்ததால் மட்டும் அன்னா காந்தியவாதியா என்பதுதான் கேள்வி. அருந்ததி எழுப்பிய கேள்விகள் (ராஜன்குறை சொல்வதுபோல) அதிகாரம் மையம் கொள்வது, முதலீட்டிய சுரண்டல், மற்றும் இந்துத்வ எதிர்ப்பு, இட‌ஒதுக்கீட்டிற்கு ஆதரவான அரசியல் இவற்றுடன் தொடர்பு கொண்டது.

ஜெயமோகன் புரிந்து கொள்ளாவிட்டாலும் மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நடுத்தர வர்க்கத்தின் போராட்டமாக இது இருப்பது அல்ல பிரச்சனை. பொதுவான நடுத்தர வர்க்க அரசியலை -உதாரண‌மாக இட ஒதுகீட்டிற்கு எதிரான அரசியலை கொண்டிருக்கும் ஒரு பெரும்பான்மை மக்கள், திடீரென சமுக பிரஞ்ஞை கொண்டு குதித்துள்ள போராட்டத்தை, எதிர் அரசியல் என்பதாக பேசிக்கொண்டிருக்கும் யாரும் விமர்சனமின்றி ஆதரிக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு விவாதம் வளர்வதற்காவது பல தரப்பட்ட விமர்சனங்களும், கருத்துரீதியான எதிர்தாக்குதல்களும் தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எவ்வளவு கச்சாவாக இருந்தாலும், வினவு போன்ற‌வர்கள் கேட்கும் கேள்விகளும் அபத்தமானது இல்லை; ஆதிவாசி நிலங்களின் வளங்களை, அங்கீகரிக்கப்பட்ட வழிகளின் மூலம் சுரண்டும் கார்பரேட் சுரண்டல் பரவாயில்லை, அதற்கு ஒரு அரசியல்வாதி லஞ்சம் வாங்குவதுதான் பிரச்சனை என்று நினைக்கும் நடுத்தர வர்க்க பொதுப்புத்தியை விமர்சிக்காமல், இந்த 'மக்கள் இயக்கத்தை' ஆதரிப்பது, கார்ப்பரேட் சுரண்டலை பேசிவரும் பலருக்கு சாத்தியமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அன்னாவை எதிர்ப்பவர்களில் பலர் மட்டும் அவதூறும் வசையும் பேசுவதாக சொல்ல முடியாது (அதுவும் உண்மைதான் எனினும்). அருந்ததியை வசைபாடி (ஜெயமோகன் உட்பட) இணையத்தில் எழுதப்பட்டுள்ளவைகளையும் பார்க்க வேண்டும். அதில் மிகச் சில அறிவு பூர்வமான அணுகல் கொண்டவை; பல வெறும் வசை குப்பைகள். ஆகையால் ஏதோ வசைக்கு ஒரு அணி மட்டும் உரிமை கொண்டாடுவதாக சித்தரிக்கக் கூடாது.

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் நான் அன்னாவை மூர்க்கமாக எதிர்க்கவில்லை. குறைந்த பட்சம் தீவிரமான எதிர்ப்பை காட்ட வேண்டிய ஆபத்தான பரிமாணம் எனக்கு பிடிபடவில்லை. ஆனால் அன்னாவிற்கு ஆதரவாக பேசுவதென்பதில் பல பிரச்சனைகள் இருக்கிறது. ஊழல் மிக தீவிரமான பிரச்சனைதான் எனினும், என்னைப்போன்றவர்களின் ஊழல் பற்றிய புரிதலும், அரசியல் கரிசனங்களும் வேறு. ஊழலை அரசியல்வாதிகள், அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக மட்டும் பார்க்க முடியாது; ஊழலை மற்ற பிரச்சனைகளிடம் இருந்து வேறு படுத்தியும் பார்க்க முடியாது.

நான் அருந்ததியின் ரசிகனோ ஆதரவாளனோ அல்ல; அவரை எதிர்த்து வருபவன். அவர் மீதான ஓர்மைசார் நம்பிக்கையும், அறிவுசார் மதிப்பும் கலைந்து போய்விட்டதை ட்விட்டரில் பதிவு செய்துள்ளேன். நாம் எழுத முடியாத இடத்தில், நாம் எழுப்ப விரும்புவதை ஒரு செலிபிரிடியாக அவர் எழுதுவதால், அவருக்கு ஆதரவாக எழுத வேன்டியுள்ளது. இவை இப்போதைக்கான கருத்துக்கள், இதை மேலே எடுத்துச் செல்ல முடியுமா என்று பார்க்கலாம்.

Friday, August 19, 2011

அரசியல் தூய்மையும், அரசியல் செயல்பாடும், உரையாடலும்.

ஃபேஸ் புக்கில் ஷோபாசக்தி எழுதிய பதிவை தொடர்ந்து, நடந்த குறுவிவாத்தை (நண்பர் அனாதை கேட்டுக் கொண்டதாலும், ராஜன்குறையின் இந்த‌ கருத்துக்களை தற்போதய தமிழ் சூழலில் மிக முக்கியமான ஒன்றாக நான் கருதுவதாலும்) இங்கே பதிவு செய்கிறேன்.

'அரசியல் நேர்' என்பதன் பிரச்சனைகள் குறித்து, என்னளவில் அமச்சூர் பாணியில், தொடர்ந்து ட்விட்டரிலும், சில பதிவுகளிலும் எழுதியுள்ளேன். ரவிகுமாரும், வேறு சில தலித்தியவாதிகளும் முன்வைக்கும் அரசியல் தூய்மைவாதம் குறித்து 2006 தேர்தலின் போது எழுதியிருந்தேன். ரவிக்குமார் தேர்தல் அரசியலில் ஈடுபடுவதன் மூலம் அவரது அரசியல் தூய்மைவாதம் மாசுபடும், அது மிக வரவேற்கத்தக்கது என்று எழுதியிருந்தேன். பெரியார் சிலை உடைக்கப்பட்ட போது ரவிக்குமார் கிளர்ந்து கைதானதை, அவரின் அரசியல் தூய்மைவாதம் மாசடைந்ததன்முக்கிய குறியீட்டு உதாரணமாக சொல்லலாம். நான் கணித்த‌தை விட எதிர்வேகத்தில் ரவிக்குமார் பயணித்தார் என்பது வேறு விஷயம்.
அன்று ரவிக்குமார் பாணியில் பேசிக்கொண்டிருந்த (உதாரணம் சாக்யா மோகன்) இன்னமும் தங்கள் அரசியல் தூய்மைவாதத்தை தொடர்வதை காணலாம்.

இந்த பிரச்சனைகளை நன்கு அறிந்த ராஜன்குறை, எந்த விமரசனத்தையும் பல சந்தர்ப்பங்களில் முன்வைக்காததே அவர் மீதான விமர்சனமாக எனக்கு இருந்தது; ட்விட்டரில் ஒருமுறை குறிப்பிட்டிருந்தேன். இப்போது அவர் வெளிப்படையாக, ஷோபாசக்தியை விமர்சித்திருப்பதை நல்ல துவக்கமாக பார்க்கிறேன். அவர் இன்னும் வெளிப்படையாக சில விமர்சனங்களை முன்வைக்க தேவை இருக்கிற‌து என்பது என் அபிப்பிராயம். குறிப்பாக அ.மார்க்ஸ் குறித்த முக்கிய விமர்சனங்களை, காலத்தேவையான பொறுப்புணர்வு கலந்து ராஜன்குறையால் முன்வைக்க முடியும் என்று நம்புகிறேன்.

அரசியல் நேர், அரசியல் தூய்மைவாதம் இவற்றை எதிர்ப்பதையே, ஒரு தூய்மைவாதமாக ஜெயமோகனைப் போல (அதுவும் சந்த்ர்ப்பத்திற்கு ஏற்ப) முன்னிறுத்த இயலும் என்கிற எச்சரிக்கையுடன் இந்த முன் குறிப்பை முடிக்கிறேன்.


சோபாசக்தியின் பதிவு: பேரறிவாளனுக்கு உறுதிப்படுத்தப்பட்ட மரணதண்டனையைக் கடுமையாக எதிர்க்கிறேன். 'குற்றத்தைவிட அதற்கு வழங்கும் தண்டனையே வெறுக்கத்தக்கது' என்பார் காம்யூ. பேரறிவாளனுக்கு உறுதி செய்யப்பட்ட மரணதண்டனை மட்டுமல்லாமல் அல்பிரட் துரையப்பா முதற்கொண்டு அமிர்தலிங்கம் ,பத்மநாபா, சிறீ சபாரத்தினம், சரோஜினி, சபாலிங்கம் ,கேதீஸ், சின்னபாலா, ராஜினி திரணகம, செல்வி ,விமலேஸ், தில்லை, புதியதோர் உலகம் கோவிந்தன், மாத்தையா, முள்ளிவாய்காலிலிருந்து தப்பிக்க முயன்ற பொதுமக்கள் வரைக்கும் வழங்கப்பட்ட மரணதண்டனைகள் குறித்தும் சிந்திக்க வேண்டிய தருணமிது. அப்போதுதான் 'மரண தண்டனை எதிர்ப்பு 'என்ற குரலுக்கு நேர்மையான பொருளிருக்கும். புலிகளால் வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான மரண தண்டனைகளை எதிர்த்து ஒரு சொல்லும் பேசாத பேஸ்புக், ட்விட்டர் கருத்துப் போராளிகள் சற்றே சிந்திக்க தண்டனிட்டு வேண்டுகிறேன்.


Prakash Venkatesan: உட்பொருளில் உடன்பாடுண்டு. ஆனால் மரண தண்டனை=கொலை சமன்பாடு ஏற்புடையதல்ல. கொலையை சட்டப்பூர்வமாக ஆக்குவதில் உள்ள ஆபத்துகள் பற்றிய விவாதமும்/ மனித உரிமை மீரல்களுக்கு எதிரான விவாதமும் ஒன்றென்று எனக்கு தோன்றவில்லை.

Shoba Sakthi ‎@prakash venkatesan,தமிழீழ ஒறுப்புச் சட்டம், தமிழீழ நீதிமன்றம், தமிழீழ காவற்துறை,தமிழீழ சிறை எல்லாம் அப்போ என்னவாம்? அவையெல்லாம் வெறும் கொலை நிறுவனங்கள் என்றே 'நீங்களும்' கருதுகிறீர்களா?

Prakash Venkatesan: ”நீங்கள்” தமிழீழத்தை நாடாக ஒப்புக்கொள்ளும் வகையில் நானும் இப்படி கருதிவிட்டுப்போகிறேன்.

இலங்கையை நாடாக கருதுகிறீர்கள் என்றே நினைக்கிறேன். அங்கே இரானுவம் செய்த கொலைகளும் மரண தண்டனைகளல்ல, கொலைகள். துரையப்பா தமிழீழ காவற்துறையினரால் கைது செய்ப்பட்டு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டவரா?

ஜனநாயக நாட்டில், உலகநாடுகளில் எந்த நாட்டின் சாசனத்துக்கும் குறைவில்லாத நாட்டில், சட்டப்படி கொலையை தண்டனையாக அனுமதிப்பது ஏற்கவியலாதது. ஆகவே மரண தண்டனை என்ற ஒன்றே நீக்கப்படவேண்டியது.

போர் சூழலில் செய்யப்பட்ட கொலைகள், மரண தண்டனைகள் அல்ல (அவற்றை நான் ஞாயப்படுத்தவில்லை, சமனான விஷயத்தை நீங்கள் பேசவில்லை என்கிறேன்)


Shoba Sakthi: ‎//ஜனநாயக நாட்டில், உலகநாடுகளில் எந்த நாட்டின் சாசனத்துக்கும் குறைவில்லாத நாட்டில், சட்டப்படி கொலையை தண்டனையாக அனுமதிப்பது ஏற்கவியலாதது// அப்படியானால் புலிகளின் சிவில் நிர்வாகம் நிலவிய தமிழீழப் பகுதியை சனநாயகமற்ற நிலப்பரப்பு எனக் கொள்ளலாமா? தயவு செய்து உங்களோடு மல்லுக்கு நிற்கிறேன் எனக் கருதாதீர்கள்.உங்களது பாயின்டுகளை தெளிவான அறிந்து கொண்டு விரிவாக கருத்தெழுத விரும்புகிறேன். அவ்வளவே.

Shoba Sakthi: ‎//துரையப்பா தமிழீழ காவற்துறையினரால் கைது செய்ப்பட்டு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டவரா? //இல்லை! ஆனால் தமிழீழ காவற்துறையால் கைது செய்யப்பட்டு நாயிலும் கீழாக வதைக்கப்பட்டு தமிழீழ நீதிமன்றில் நிறுத்தப்பட்டு மரண தண்டனை ( புலிகளின் சட்டச் சொல்லில் சாவொறுப்பு) வழங்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்

Prakash Venkatesan: நீங்கள் மல்லுக்கு நிற்கிறீர்களாத்தெரியாது, ஆனால் நீங்கள் சொல்லியதை அதனளவில் நான் ஏற்றப்பின்னும் நான் சொல்வதை கணக்கிலேயே எடுத்துக்கொள்ளாமல் கடந்து செல்கிறீர்கள்.

”கொலையின் சட்ட ரீதியான அங்கீகாரம் ஆபத்தானது”, அது புலிகள் நிறைவேற்றினாலும் தான். மற்றபடி, “நிலபரப்பில் ஜனநாயகம்” எல்லாம் சுவாரசியமானது. காஷ்மீரிலே, நந்திக்ராமிலே, இப்பொழுது அளவெட்டியிலே பூத்துக்குலுங்குவது கூட ஜனநாயகமல்ல, அது விவாதப்பொருளென்றும் தோன்றவில்லை.

Institutionalizing murder என்பதே என்னளவில் மாற்றப்பட வேண்டிய ஒன்று. அதற்கான முயற்ச்சிகளை மாற்றுக்கருத்துடையோரும் இணைந்து எடுக்கவேண்டும்.

Shoba Sakthi: ராமன் எத்தனை ராமனடி என்பதுபோல கொலையில் எத்தனை வகை என விவாதிப்பது துயரமே. கொலை எனில் கொலைதான். ஒரு அரசு வழங்கும் மரணதண்டனையைவிட விடுதலைப் போihட்ட இயக்கம் வழங்கும் மரணதண்டனையே தார்மீகரீதியாக மோசமானது. நீதி என்பது அரசின் வன்முறை என்பது நமக்குத் தெரிந்ததுதானே. ஆனால் அதை ஒரு போராட்ட அமைப்புச் செய்யும்போதுதான் அறவீழ்ச்சி நேரிடகிறது. தமிழீழ நீதிமன்றத்தால் கொல்லப்பட்டவர்கள் 20 பேர்கள என்பது சரிதான். ஆனால் துணுக்காய் இராணுவ நீதிமன்றத்தையும் நீங்கள் கணக்கில் எடுக்க வேண்டும். நீதி வழங்கப்படும் இடமென்வோ வேறுவேயாயிருக்கலாம்.. ஆனால் நீதிதேவனாக சூரியதேவன் தானேயிருந்தார்!

Rajan Kurai Krishnan: ஷோபா சக்தி மரண தண்டனை எதிர்ப்பின் அடிப்படைகளை கவனத்தில் கொள்ளாமல் பேசுகிறார். மக்களாட்சியில் அமைந்த ஒரு அரசு, அணைத்து மக்களின் அதாவது தேசத்தின் சார்பாக ஒருவரைக் கொல்வது மரண தண்டனை. அதனையும் ஒரு ராணுவமயமான அரசியல் இயக்கமான புலிகளின் அரசியல் கொலைகளையும் இணைத்துப் பேசிக் குழப்புவது தவறு. இந்திய மரண தண்டனை எதிர்ப்புப் போராளிகள் பேரறிவாளனுக்கு வழங்கப்படும் தண்டனைக்கு எதிராக போராடுவதை இலங்கை அரசியலுடன் தொடர்புபடுத்துவது அனாவசியமானது என்று நினைக்கிறேன். பிறகு, இனிவரும் எல்லாக் காலங்களிலும் எல்லா நாடுகளிலும் எல்லா அநீதிகளையும் எதிர்ப்பவர்கள் முதலில் புலிகளை கண்டித்துவிட்டுதான் எதிர்க்கவேண்டும் என்று சொல்வதும் பொருத்தமல்ல. இலங்கையை பொறுத்தவரை வேண்டுமானால் ஷோபா அதை எதிர்பார்ப்பது அவர் பார்வையில் தேவையாயிருக்கலாம்.

Mss Pandian: Mahinda Rajapakshe would have just loved Shoba Sakthi's comment.

Shoba Sakthi: இங்கே இப்படியொரு சிறு விவாதம் நடந்திருப்பது சற்று முன்னர் பிரகாஷ் வெங்கடேசன் சொல்லித்தான் அறிந்து படித்தேன். ராஜன்குறை உங்களது கருத்துகள் எனக்கு மிகவும் ஏமாற்றத்தை அளிக்கின்றன.

வாங்க வாங்க எம். எஸ்.எஸ்.பாண்டியரே..பேஸ்புக்கில் விளையாடும் விடலைப் பயல்கள் ரேஞ்சுக்கு நீங்கள் comment செய்திருப்பது உங்களது வயதுக்கும் கல்விசார் தகமைக்கும் சற்றும் பொருத்தமில்லாமலிருப்பது வருத்தமே. எனினும் தமிழகத்தின் இரு முதன்மையான அறிவுஜீவிகளின் கருத்துகள் இதுகுறித்து சற்று விரிவாக எழுத என்னைத் தூண்டியிருக்கின்றன. விரைவில் எழுதுவேன். இடம், காலம் பார்த்து பேசவேண்டிய தேவை அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் இருக்கலாம். உண்மையைப் பேசுபவனுக்கு அது இழுக்கு. பேசுவேன்..


Shoba Sakthi: தோழர்களே! இந்தியாவில் மரணதண்டனை ஒழிப்புக்காக குரல் கொடுக்கும் நாம் முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் அப்சல் குருவுடன் அதை நிறுத்திவிடக் கூடாது. அஜ்மல் கசாப்,தர்மபுரியில் மூன்று மணவிகளைக் எரித்த வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் மற்றும் இந்திய சிறை 'கண்டங்களில்' மரணதண்டனையை எதிர்நோக்கிக் காத்திருப்பவர்கள் அனைவரையும் உள்ளடக்கி அவர்களுக்காகவும் நமது குரலை ஒலிப்போம். நாம் அனுப்பும் பெட்டிஷன்களிலும் நாம் எழுதும் கட்டுரைகளிலும் நிலைத் தகவல்களிலும் வெளியிடும் சுவரொட்டிகளிலும் துண்டுப் பிரசுரங்களிலும் இவர்கள் எல்லோரையும் குறித்து நாம் பேசியாக வேண்டிய தருணமிது. ஒரு உயிர் கூட மரணதண்டனையாலோ அல்லது அரசியற் கொலையாலோ அல்லது அழித்தொழிப்பாலோ பறிக்கப்பட கூடாது என்று கூட்டாக ஒலிப்போம்.

Rajan Kurai Krishnan: மரணதண்டனையை பற்றி மட்டும் பேச ஒருவருக்கு உரிமை இருக்கிறது. அத்துடன் அரசியற் கொலை, அழித்தொழிப்பு எல்லாவற்றையும் இணைப்பது ஷோபா சக்திக்கு தேவை என்றால் அது அவரது விருப்பம்.ஆனால் அனைவரும் அப்படி செய்யவேண்டும் என்பது வேண்டுமென்றே விஷயத்தைக் குழப்பும் செயலாக கணிக்கப்பட வாய்ப்பு உண்டு. மேலும், மரண தண்டனை யாருக்கு வழங்கப்பட்டாலும் எதிர்க்க வேண்டும் என்பது சரிதானென்றாலும், அது முற்றிலும் அநீதியாக வழங்கப்படும் தருணத்தில் (பேரறிவாளன்) அந்த எதிர்ப்பு கூர்மைப்படுவது இயல்பானதுதான். இந்த தருணத்தில் மரண தண்டனைக்கெதிராக மக்களை திரட்டுவது போல தர்மபுரி வழக்கின் தருணத்தில் செய்ய இயலாது என்பதுதான் யதார்த்தம். மேலும் பேரறிவாளன் தமிழன் என்ற காரணத்திற்காகவும் அவரது தமிழ்த்தேசிய உணர்வுக்காகவும் மட்டும் இந்திய மைய அரசால் தண்டிக்கப்படும்போது அதற்கான அரசியல் எதிர்வினை தமிழகத்தில் தமிழ்த்தேசிய உணர்வினை ஒட்டி அமையாமல் வேறெப்படி இருக்க முடியும்? அரசு மையமான தேசிய உணர்விற்கும் ஒடுக்கப்படும் மக்களின் எதிர்நிலை தேசிய உணர்விற்கும் வித்தியாசமுண்டு என்பதை ஏற்றுக்கொள்ளாமல் அரசியலை புறிந்து கொள்வது சாத்தியமல்ல. வெறும் அரசியல் சரி சூத்திரங்களை வைத்துக்கொண்டு இயங்குவது தன்னையே முற்றிலும் தூய்மையான புரட்சியாளனாக சொல்லிக்கொள்ளத்தான் உதவுமே தவிர பிர்ச்சினைகளை முன்னெடுக்க உதவாது. ஷோபா சக்தி விரிவாக எழுதினால் அதினினும் விரிவாக எழுதுவேன்

Rajan Kurai Krishnan: ஒவ்வொரு அரசியல் தருணத்தையும் அதன் தனிப்பட்ட வரலாற்று சந்தர்ப்பங்களை கணக்கில் கொண்டுதான் எதிர்கொள்ள முடியுமே தவிர பொத்தாம்பொதுவில் எல்லா ராணுவ, தற்காலிக நீதிமன்றங்கள் அனைத்தையும் எதிர்த்தால்தான் பேரறிவாளன் தீர்ப்புக்கு எதிராக பேச வேண்டும் என்றெல்லாம் கூறிக்கொண்டிருப்பது எதற்காக என்று எனக்குப் புரியவில்லை. மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை ஏற்றுக்கொண்டவன் என்ற முறையில் எனக்கு தமிழுணர்வும், தமிழ் தேசிய உணர்வும் இந்திய "இறையாண்மைக்குள்" தமிழின் வித்தியாசத்தை தக்க வைத்துக்கொள்ள அவசியமானவை என்பதில் தீவிர நம்பிக்கையுண்டு. அந்த உணர்வினை தண்டிப்பதற்காக ஒருவன் தூக்கிலிடப்படுவானென்றால் அதற்காக பிறருடன் இணைந்து எதிர்ப்பைத் தெரிவிக்கத்தான் வேண்டும். அவ்வாறு செய்பவர்களிடம் பிரபாகரன், இடி அமீன், போல் பாட் எல்லோரையும் கண்டித்தீர்களா என்று கேட்பதன் அவசியம் புரியவில்லை. அவர்களையும் கண்டிப்பது அவசியம் என்று கூறுவதில் தவறில்லை. ஆனால் எல்லோரையும் குற்றவுணர்ச்சியில் ஆழ்த்திவிட்டு குறையற்ற அரசியல் ஜோதியாக பிரகாசிக்க முனைவது ரசிக்கத்தக்கதல்ல


தூவானம்: மரணதண்டனை குறித்து சில துளிகள். -
ரோஸாவசந்த்

Shoba Sakthi: ‎@Rajan Kurai Krishnan, ஏன் ராஜன் இந்தக் கொலைவெறி? புலிகளின் கொலைகளைக் கண்டித்தால்தான் பேரறிவாளனின் கொலையைக் கண்டிக்க வேண்டுமென்றெல்லாம் நான் நிபந்தனை ஏதும் விதிக்கவில்லையே. புலிகளின் கொலைகளை நியாயப்படுத்தகிகொண்டிருந்தவர்கள் அல்லது கண்டுகொள்ளாமலிருந்தவர்கள் இந்தத் தருணத்தில் அவை குறித்தும் சிந்திக்க வேண்டும் எனத்தானே சொல்லியிருக்கிறேன். சிந்திக்கச் சொல்லுவது ஒரு குற்றமா என்ன? குற்றவுணர்ச்சிக்கு யாராவது ஆட்பட்டால் அதற்கு நான் பொறுப்பாளியல்லவே. தவிரவும் குற்றவுணர்வு கொள்வதும் தன்னளவில் முன்னோக்கிய அரசியல் நகர்வுக்கு ஒரு ஊக்கியல்லவா. உங்களது கருத்துகளிற்கும் ரோஸா வசந்தின் கருத்துகளுக்கும் நன்றிகள். எனினும் உங்களிருவரது கருத்துகளோடும் எனக்கு ஒவ்வாமையே உண்டு. எம்.எஸ.எஸ். பாண்டியனின் கமென்டின் மீது கடுப்பே உண்டு.சில நாட்களில் விரிவாக எழுதுவேன்.


Shoba Sakthi: ‎@Rajan Kurai Krishnan, தமித் தேசியவாதிகள் கூட்டங்களில் "ராஜீவ் படுகொலை செய்யப்படவில்லை..அவருக்கு மரணதண்டனையே வழங்கப்பட்டது" என்றெல்லாம் பேசுவதைக் கேட்டுள்ளீர்களா? ஒரு தரப்பு அநீதிகளை ஆதரித்துக்கொண்டு இன்னொரு தரப்பு அநீதிகளை எதிர்ப்பதாகச் சொல்பவர்களிடமிருப்பது அரசியல் குயுக்தியே தவிர அறம்சார்ந்த முனைப்பல்ல என்பதில் நான் உறுதியாகவேயுள்ளேன். குறிப்பான தருணம் குறிப்பான விடயம் என்றெல்லாம் நீங்கள் சொல்வதுவும் சரியே. ஒவ்வொரு குறிப்பான தருணங்களையும் பொதுவாக இணைத்திருக்கும் கண்ணியையும் பார்க்க வேண்டுமென்கிறேன் நான். முக்கியமாக எனது நிலைத் தகவல் கிருஷ்ணய்யரையோ பாலகோபாலையோ நோக்கி எழுதப்பட்டதல்ல என்பது உங்களுக்குப் புரிந்துதானேயிருக்கும்!!!

Rajan Kurai Krishnan: ஷோபா, இப்படி சிந்திக்க முயற்சி செய்து பாருங்கள். முதலில் நீதி என்ற கருத்தாக்கத்தையும், தண்டனை என்ற கருத்தாக்கத்தையும் பிரித்துக்கொள்ளுங்கள். நீதியைப் பற்றிய சிந்தினையின் விளைவாக அதை நடைமுறைப்படுத்த தண்டனை என்ற செயல் பயன்படுகிறது. நாம் தூக்கு தண்டனை என்ற செயல் வடிவம் எப்போது நடைமுறைக்கு வந்தாலும் எதிர்க்கிறோம். அந்த செயல் வடிவத்தை பொறுத்தவரை எல்லா வழக்குகளும் சமம்தான். ஆனால் அந்த செயல் வடிவத்தை நியாயப்படுத்தும் நீதியைப் பற்றிய சிந்தனை எல்லா வழக்குகளிலும் சமமானவை அல்ல. வங்காளத்தில் எட்டு அல்லது ஒன்பதாண்டுகளுக்கு முன்னால் ஒரு பள்ளிச் சிறுமியை வன்புணர்ச்சி செய்த (அவள் மரணத்திற்கு காரணமான) லிஃப்ட் ஆப்பரடேரை தூக்கில் போடச்சொல்லி வெகுமக்கள் இயக்கமே நடந்தது. முதலமைச்சர் புத்ததேப் பட்டாச்சார்யாவின் மனைவியே அதற்கு தலமை தாங்கினார். அப்போதும் நான் இணைய தள ஆங்கில வலைப்பின்னல் ஒன்றில் மரண தண்டனையை கண்டித்துத்தான் எழுதினேன். ஆனால் இந்த வங்காள வழக்கின் பின்னாலுள்ள நீதி பற்றிய கருத்தாக்கமும், பேரறிவாளன் வழக்கின் பின்னாலுள்ள நீதி பற்றிய கருத்தாக்கமும் வேறு வேறானவை. இதை கருத்தில் கொண்டுதான் "முற்றிலும் அநீதியான" மரண தண்டனை என்று எழுதிவிட்டேன். முற்றிலும் அநீதியான காரணங்களால் விதிக்கப்படும் மரண தண்டனை என்று அதற்கு பொருள் கொள்ளவும். பேரறிவாளன் வழக்கு நீதியைப் பற்றிய பல கருத்தாங்களை, கற்பிதங்களை அம்பலப்படுத்தும் வழக்கு. உங்கள் இடையீடுகள் அசந்தர்ப்பமானவை என்பதே என் கருத்து மேலும் குற்றவுணர்ச்சி என்பது அவரவர்களாக உணரவேண்டியது. அதை வெளியிலிருந்து திணிக்க யத்தனிப்பது பயன் தரும் செயலல்ல. குதிரையை நீர்நிலைக்கு கொண்டு செல்லலாம். தண்ணீரை அதுதான் குடிக்க வேண்டும். அதைத்தாண்டி பிறரை சாடி தன்னுடைய நிலைபாட்டை உயர்த்திக்கொள்ளும் மனோபாவமே முற்போக்கு சக்திகளை எல்லா காலத்திலும் பிளவு படுத்தி வந்திருக்கிறது. அதற்கு மாறாக நம்முடைய சுயவிமர்சனத்தை முன்மாதிரியாக்கி உரையாடலை வளர்ப்பதே இவ்வளவு பாரிய இழப்புகளுக்குப்பின் நாம் மேற்கொள்ள வேண்டிய அரசியல் அறம்

Rajan Kurai Krishnan: ஷோபா, தமிழ்த் தேசியவாதிகளுடனான சம்வாதமே ("polemics") நமது அரசியல் அக்கறைகளின் எல்லையாக இருக்க முடியாது. மேலும் இலங்கை தமிழ்த்தேசியமும், இந்தியத் தமிழ்தேசியமும் முற்றிலும் வித்தியாசமான வரலாற்றுப்பின்புலம் கொண்டவை என்பது வெளிப்படையானது. இந்த உண்மை நீங்களும் அறிந்ததுதான் என்றாலும் முழுமையாக கோட்பாட்டு ரீதியாக உள்வாங்காமல் திணறுவது உங்கள் பல இடையீடுகளில் தெளிவாகிறது. இன்று பல இந்திய தமிழ்த்தேசியவாதிகள் இலங்கைத் தமிழ்த்தேசியத்தை தங்களுடைய அவாக்களின் முன்னெடுப்பாக பார்த்துப் பேசுவதை மட்டும் வைத்து நாமும் இரண்டையும் ஒன்றாக்கி எதிர்ப்பது சாத்தியமல்ல. என்னைப்பொறுத்தவரை "மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி" என்ற அடிப்படையில் இந்தியத் தமிழ்த் தேசிய உணர்வு அகண்ட பாரத கற்பிதங்களுக்கு எதிராக பாதுக்காக்கப்படுவதை ஒரு வரலாற்றுத் தேவையாக நினைப்பவன். பெரியார்-"இய"-"வாதியாக" பல சமயம் வெளிப்படும் உங்களுக்கு "இந்தியா ஒரு நேஷனா?" என்ற பெரியாரின் பிர்சுரம் எப்படி வரலாற்றில் இன்றியமையாததானது என்பதை காண்பது கடினமல்ல. இன்று இந்தியத் தமிழ் தேசீயம் பேசி இலங்கைத் தமிழ்த் தேசீய் போராட்டத்தில் நிகழ்ந்த தவறுகளை எந்த விமர்சனமுமின்றி மூடி மறைப்பவர்களின் கண்ணாடி பிரதிலிப்பாக நீங்கள் இந்தியத் தமிழ்த் தேசியத்தின் பரவலான நியாயங்களை உணராததுபோல பேசுவது ஒரே மொழியை பகிர்ந்துகொள்ளும் இந்த இரண்டு நிலப்பரப்புகள் ஒன்றையொன்று புரிந்துகொள்ள உதவாது.

Shoba Sakthi: ராஜன் அகன்ற இந்து பாரதத்திற்கு எதிராக நிறுத்த்ப்பட்ட தமிழகத் தமிழ்த் தேசியத்தினை அதன் வரலாற்று சூழல்களுடன் நான் உள்வாங்கியிருக்கிறேன் என்றுதான் நம்புகிறேன். பெரியாரிலிருந்து அறுபதுகளின் முற்பகுதி வரை தி.மு.கவும் ஒலித்த தமிழ்த் தேசியத்திற்கும் இன்றைய மணியரசன், குணா, சீமான் வகையான தமிழ்த் தேசியத்திற்குமான உள்ளடக்கம் ஒன்றல்ல என்பது நீங்கள் அறிந்ததுதானே. பெரியார் மரபுத் தமிழ்த் தேசியவாதிகள் இப்போது எங்காவது தமிழகத்திலிருக்கிறார்களா என நான் அறியேன். கடைசிப் பெரியாரிஸ்டும் 1973ல் இறந்ததாகத்தான் பேசிக்கொள்கிறார்கள்.

தவிரவும் நான் ஈழத் தமிழ்த் தேசியத்தின்மீது கொண்டுள்ள கசப்பால் அதை அவ்வாறே தமிழகச் சூழலில் பொருத்திப் பார்க்கிறேன் என நீங்கள் கருதுவதாகத் தெரிகிறது. நான் எந்தக் காலத்திலும் ஈழத் தமிழ்த் தேசியத்தையோ அதன் சுயநிர்ணய உரிமையையோ (கவனிக்கவும் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி அல்ல) மறுத்ததில்லையே. புலிகளையோ வேறு தமிழீழப் போராட்ட இயக்கங்களையோ எதிர்த்தால் அதை ஈழத் தமிழ்த் தேசிய மறுப்பு எனக் கொள்ளத் தேவையில்லை. அதை யுத்தப் பிரபுக்களை எதிர்த்தாகவே நீங்கள் கொள்ள வேண்டும். சுத்தத் தமிழில் பெயரும் வைத்து புலிக்கொடியும் ஏந்தி சிங்களவர்களிற்கு எதிராக யுத்தம் செய்தால் மட்டும் அது தேசிய பிரதிநிதித்துவம் ஆகிவிட முடியாது. எனவே நான் புலிகளுடனான அனுபவத்தை வைத்து தமிழகத் தேசியத்தை எதிர்க்கிறேன் எனக் கருதிவிடாதீர்கள். இன்னும் சொல்லப் போனால் சாதியொழிப்பு, கடவுள் மறுப்பு போன்ற பணபுகளின் காரணமாக கொளத்தூர் மணி, தியாகு போன்றவர்கள் ஈழவிடுதலைப் போராட்டத் தலைவர்களைக் காட்டிலும் (பிரபாகரனையும் சேர்த்தத்தான்) பன்மடங்கு மேலானவர்கள். அந்த மதிப்பு எனக்கு என்றுமுண்டு.

Shoba Sakthi: Rajan Kurai Krishnan, வங்காள எடுத்துக்காட்டு நாம் பேசும் விடயத்திற்கு சற்றே தூரமானது. நெருங்கிய எடுத்துக்காட்டு அஜ்மல் கசாப்புடையது. முருகனும் சாந்தனும் பேரறிவாளனும் தாங்கள் நேசித்த ஓர் அரசியல் இயக்கத்திற்காக வேலை செய்திருக்கிறார்கள். இதில் பேரறிவாளனின் பங்கு குறைவாக இருந்திருக்கலாம். கசாப்பும் தான் நேசித்த ஓர் இயக்கத்திற்காக வேலை செய்கிறார். இந்த நால்வருக்கும் தாக்குதல் இலக்கு எதுவென்றே கடைசிவரை தெரிந்திருக்காமலிருக்க எல்லாவித தர்க்கமும் உண்டு. இரகசிய பயங்காரவாத இயக்கங்களின் நடைமுறையது. நீங்கள் சொல்லும் நீதி என்பது கசாப்புக்கும் பேரறிவானுக்கும் இடையில் எங்கு வேறுபடுகிறது?

Shoba Sakthi: ‎Rajan Kurai Krishnan//குற்றவுணர்ச்சி என்பது அவரவர்களாக உணரவேண்டியது. // அதற்கு முதலில் குற்றத்தை உணர்த்த வேண்டியிருக்கிறதல்லாவா. குற்றம் உணர்த்தப்படாத போது குற்றவுணர்வு தோன்றுவதில்லை. குற்றத்தையும் தானேகவே உணரவேண்டும் எனச் சொல்லமாட்டடீர்கள் என நம்புகிறேன்.

Rajan Kurai Krishnan: ஷோபா சக்தி, உங்களுடன் உரையாடும் தருணத்தில்தான் வார்த்தைகள் எவ்வளவு வியர்த்தமானவை என்பதே புரிகிறது. பிறரை புரிந்துகொள்வது என்ற அடிப்படையில் ஒரு அரசியல் இருக்கிறது. உண்மையில் அதுதான் அரசியலின் சாராம்சம். அது உங்களுக்கு சித்திக்க பிரார்த்தனை செய்ய முடிவு செய்து விடைபெறுகிறேன். முடிவாக ஒரு வார்த்தை. நீங்கள் இந்த நிலைத்தகவலில் என்ன சொல்கிறீர்கள் என்பது "தர்க்கரீதியாக" சரியென நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாம்; உங்களது அரசியல் பார்வைகளுடன் பெரிதும் உடன்பாடுள்ள நானும் ஆமோதிக்கலாம். ஆனால் இந்த நிலைத்தகவல் அசந்தர்ப்பமானது, வேண்டுமென்றே தமிழ்நாட்டு அரசியல் உணர்வாளர்களை சீண்டிப்பாற்பது என்பதை நீங்களாக முயற்சி செய்துதான் புரிந்துகொள்ள வேண்டும். அது தர்க்கத்தின் உயர்நிலை. முயற்சி செய்து பாருங்கள். தூய எண்ணங்களால்தான் நரகத்தின் பாதை உருவாக்கப்படுகிறது என்பதை இலங்கையின் சோகத்திலிருந்து நான் புரிந்துகொள்கிறேன். உங்களுக்கும் அது சாத்தியமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் இலங்கையின் கொடுமையான அரசியல் சகாப்தத்தில் உருவான உங்கள் மொழியால் "நன் சொல்வதே சரி- நான் அதிகச் சரியானவன்" என்ற தர்க்க வகைமையைத் தாண்டி செயல்பட முடியாததை வருத்ததுடன் பதிவுசெய்கிறேன். அரசியலிலும் தூய்மையற்றவற்றை நேசிக்கப் பழகவேண்டும் என்ற எனது நிலைப்பாட்டை வலியுறுத்தி விடைபெறுகிறேன்.


Shoba Sakthi: ‎Rajan Kurai Krishnan,//அரசியலிலும் தூய்மையற்றவற்றை நேசிக்கப் பழகவேண்டும் என்ற எனது நிலைப்பாட்டை வலியுறுத்தி..// அது எனக்குச் சுட்டுப் போட்டாலும் வராது என்பதை நானும் வலியுறுத்தி இப்போதைக்கு விடைபெறுகிறேன். நான் சொல்வதே சரி என்ற இறுமாப்பல்ல,
நான் ஈழத்து அரசியலில் நசுக்கப்பட்ட ஒரு தரப்பின் குரல் என்ற பொறுப்புணர்வே என்னிடமிருப்பது. # ஆதியில் வார்த்தை இருந்தது.

Rajan Kurai Krishnan: பின்குறிப்பாக ஒரு விளக்கம்:

அரசியல் தூய்மைவாதம் என்றால் என்ன?

தூய்மை என்ற வார்த்தை “கறை””அழுக்கு””ஆரோக்கியமற்றது” போன்ற வார்த்தைகள் சுட்டும் பொருள்களுக்கு எதிரானது, அவற்றைக் களைந்தது.

அரசியலில் ஒருவர் அல்லது ஒரு இயக்கம் எடுக்கும் நிலைப்பாடு முற்றிலும் சரியானது, சமரசமற்றது என்று வலியுறுத்துவதும், நம்புவதும் அதற்கு மாற்றான கருத்துள்ளவர்களை ஓயாமல் சாடித்திரிவதும் அரசியல் தூய்மைவாதம் என அழைக்கப்படுவது பொருத்தமென நினைக்கிறேன். ஆங்கிலத்தில் “political correctness” என்றழைக்கப்படும் “அரசியல் சரித்தன்மை” இந்த தூய்மைவாதத்தின் ஒரு பகுதியாக அமையலாம்.

பொதுவாக ஒரு அரசியல் நிலைபாடு இன்னொரு அரசியல் நிலைபாட்டை தூய்மையற்றதாகத்தான் பார்க்க நேரும். ஆனால் அவற்றிற்கிடையிலான உரையாடலே அரசியலை சாத்தியப்படுத்தும் என்பதால் தூய்மைவாதிகள் முதலில் உரையாடலை சாத்தியமற்றதாகச்செய்து விடுவார்கள். எனவே நாம் அரசியலில் நிகழும் பிழைகள், நாம் தூயமையற்றதாகக் கருதும் மாற்றுக் கருத்துக்கள், போக்குகள் ஆகியவற்றுடன் உரையாடும் சந்தர்ப்பங்களை இழக்காமல் அவர்கள் தரப்பு நியாயங்களை எப்போதும் கவனத்தில் கொண்டிருக்கத்தான் வேண்டும்; அந்த நியாயங்களை ஏற்றுக்கொள்ளாத போதும். அதுவே அரசியல் தூய்மையின்மையின்மையை நேசிப்பது. அதாவது அரசியல் தூய்மை என்பது சாத்தியமில்லை என்று உணர்வது.

Vasanth Srinivasan: ‎'நீதி என்பது கசாப்புக்கும் பேரறிவாள‌னுக்கும் இடையில் எங்கு வேறுபடுகிறது?' என்று ஒரு வெடிகுண்டுக் கேள்வியை கேட்பவர், தன் 'நோஞ்சான் எதிரி'களின் தர்க்க அபத்தங்களை பிரித்து மேய்வது ஒரு இலக்கிய பிரதியில் நிகழ்திருந்தால் சிரிப்பதோடு சிந்திக்கவும் செய்திருக்கலாம்

Saturday, August 13, 2011

மரணதண்டனை குறித்து சில துளிகள்.

(ட்விட்டரில் எழுதியது; எதிர்கால வசதி கருதி இங்கேயும்.)

யாருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டிருந்தாலும் அதை நான் எதிர்க்கிறேன்; ஏற்கனவே ஒருமுறை என்பதிவில் சொன்னதுபோல், வீரப்பனுக்கானாலும், சிறுமியை பலாத்காரம் செய்து கொன்னவனாலும், ஒரே இரவில் 20 பேரை கொன்றவனுக்கும் இதே நிலைபாடுதான். ஏனெனில் மரண தண்டனை என்பது அந்த செய்த குற்றங்களை விட கொடுமையானது. நாகரீக சமூகத்தில் ஏற்க இயலாதது. இது குறித்த என் கருத்தை விரிவாக என் வலைப்பதிவில் எழுதியிருக்கிறேன். ஆகையால் கொள்கையளவில் எல்லாவித மரணதண்டனைக்கும் எதிராகவும்தான் குரல் கொடுக்க வேண்டும்.

ஆனால் நடைமுறை அரசியல் என்பதன் எல்லைகள் வேறு. மரணதண்டனை என்பதையே ஒழிக்கும் அளவிற்கு நம் சமூகமும், அதை ஆதரிக்கும் அளவிற்கு நம் பொதுபுத்தியும் நாகரீகம் அடைவதை எதிர்ப்பார்த்திருப்பதை விட, இன்றய சூழலில் செய்யக்கூடியதை நாம் யோசித்தும் பேச வேண்டும். ஒரு பக்கம் கொள்கையளவில் எல்லா மரண தண்டனைகளையும் எதிர்த்தாலும், நடைமுறையில் குற்றத்துடனான தொடர்பையும், தீவிரத்தையும் முன்வைத்தும் பேசவேண்டும். அஃபசல் பற்றிய என் பதிவில் இந்த கருத்தை பதிவு செய்துள்ளேன். நடைமுறையில் ஒன்றை முன் எடுப்பதால் கொள்கையளவில் அதையே எல்லையாக ஏற்பதாகாது. எதிர்கால லட்சியமாகவோ, அடுத்த கட்ட நோக்கமாகவோ அதை கொள்வதாக மட்டுமே ஆகும்.

அந்த வகையில் கஸாப் நேரடியாக ஒரு பெரும் பயங்கராவத குற்றத்துடன் தொடர்புடையவாராகிறார். அஃப்சல் நாம் அறிந்தவரையில் சில சந்தர்ப்ப சாட்சியங்களால் மட்டும் குற்றத்துடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளார். பேரறிவாளன் மிக மிக அல்ப காரணத்திற்காக, பேட்டரி விற்றதாக சொல்லப்படும் காரணத்திற்காக, எல்லாவகையிலும் அவர் முழுக்க முழுக்க நிரபராதியாக இருக்கக் கூடிய சாத்தியத்துடன், (பயங்கரவாதத்தை ஒழிக்க வந்ததாக சொல்லப்படும்) ஒரு பயங்கரவாத சட்டத்தால் அநியாயமாக தொடர்பு படுத்தப்பட்டவர். அவருக்கான மரண தண்டனையையே நாம் அதிகமாக எதிர்க்க வேண்டும். பொதுப்புத்தியும் அதற்கு உதவக்கூடும் எனில் அதை பயன்படுத்தவும் முயலவேண்டும்; இதற்கான வெகுஜனக் கருத்தை உருவாக்குவது எளிது என்றால், அதில் கவனம் செலுத்தி முன்னெடுப்பதே சரியான நடைமுறை அரசியலாக இருக்கும்.

நிராபராதிக்கு மரண தண்டனை அளிப்பதை தடுப்பது என்பது, சந்தர்ப்பவாத சாட்சியங்களால் குற்றம் சாட்டபட்டவரிலிருந்து, பெருங்குற்றம் செய்தவர் வரை, எல்லாவற்றிற்குமான மரணதண்டனையை ஒழிப்பதற்கான முதல் படியாக இருக்கும்.

இந்த நீள் ட்வீட்டை எழுத உந்துதாலாய் இருந்தவர் சோபாசக்தி. அவருக்கு அதற்கு நன்றி.