Sunday, May 8, 2016

அசல் + நகலின் கலவை 25/03/2016

ஜெயலலிதா மீதான அடித்தட்டு மக்களில் ஒரு பகுதியினரின், குறிப்பாக பெண்களின் தூய்மையான அன்பு மேலோட்டமான புரிதலுக்கு அப்பாற்பட்டது. நானிருக்கும் அடுக்ககத்தில் வேலை செய்யும் இரு பெண்கள், வெள்ள அனர்த்தத்தில் தீவிரமாக பாதிக்கப்பட்ட பிறகும், அதே மாறா அன்புடன் இருப்பதை அறியாமை என்பதா, ஏதோ ஒன்றின் வடிகால் என்பதா என்று புரியவில்லை. இந்த வெள்ள அழிவிற்கு காரணமே இந்த அரசுதான், வேறு எந்த அரசும் இவ்வளவு மோசமாக நடந்து கொண்டிருக்காது என்று என் கருத்தை விளக்க முயற்சித்தேன். எது சொன்னாலும் அதற்கு ஒரே பதிலாக கருணாநிதியை திட்டிக் கொண்டு இருந்தவர்கள், ஒரு கட்டத்தில் என்னையும் சபிக்க தொடங்க பேச்சை நிறுத்த வேண்டியதாகிவிட்டது. அவர்கள் அப்படி இருப்பது எனக்கு உவப்பாக இல்லையெனினும், அவர்கள் - எம்ஜியார் மீது, அதன் தொடர்சியாக - ஜெயலலிதா மீது வைத்திருக்கும் அன்பில் எந்த போலித்தனமும் கிடையாது.
இன்னொரு தரப்பு இருக்கிறது; இந்த சமுகத்தின் அதிகாரத்தை பெருமளவு நுகர்ந்து கொண்டிருக்கும் தரப்பு. ஒரு பக்கம் ஊழல் குறித்தும், சமூக சீர்கேடுகள் குறித்தும், இன்னும் ஜாதி வெறியில் சிலர் வெட்டிச்சாவது குறித்தும் கூட ரொம்ப தார்மிகமாக கருத்துக்கள் இவர்களுக்கு உண்டு. இந்த கருத்துக்களுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் ஜெயலலிதாவை ஆதரிப்பார்கள். இவர்களும் எல்லாவற்றிற்கும் தங்கள் தரப்பின் ஒரே நியாயமாக திமுகவின் சீர்கேடுகளை முன்வைப்பார்கள். ஆனால் அடித்தட்டு மக்களின் உண்மைக்கு நேர் எதிரான அளவு பொய்மை கொண்ட தரப்பு இவர்களுடையது.
மேலே சொன்ன இரண்டு தரப்பினரின் கலைவையாக - முதல் தரப்பின் அறியாமையும், இரண்டாம் தரப்பின் பொய்மையும் உருக்கி சேர்ந்ததுபோல் - விஜய்காந்தை மாற்றத்தின் பிரதிநிதியாக முன்வைப்பவர்கள் எனக்கு தோன்றுகிறார்கள்.

No comments:

Post a Comment