Sunday, May 8, 2016

கலைஞரின் ராமானுஜர் 09/01/2016

கலைஞரின் ராமானுஜரை நான் பார்க்கவில்லை. எனக்கு மந்திரி குமாரிக்கு பிறகான கலைஞரின் எழுத்தாக்கங்கள் சுவாரசியம் கொண்டதில்லை (அரசியல் பேச்சை ரசித்ததுண்டு); ராமானுஜரையும் என் கலை இலக்கிய பார்வையில் ரசித்திருக்க மாட்டேன் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் கலைஞர் ராமானுஜர் என்று ஒரு தொலைக்காட்சித் தொடரை எழுதினார் என்கிற நிஜம் வரலாற்றுக்கும் சமுகத்திற்கும் முக்கியம். அவரது அரசியலுக்கு இயைந்து அவர் ஒருவேளை திரித்திருந்தாலும் கூட, அவர் ராமானுஜர் பற்றி தான் நல்லதாக கருதுவதைத்தான் சொல்லியிருப்பார். அந்த வகையில் தனது நாத்திகம் சார்ந்த வறட்டு அரசியல் நேருக்கு எதிராக அவர் செயல்படுகிறார். இதை சமரசமாக பார்க்கமுடியாது; தீபாவளி மேட்டரில் கூட சமரசம் செய்யாத அவருக்கு, இப்படி ஒரு சமரசம் தேவையுமில்லை; அப்படியே சமரசமாக இருந்தாலும், அதை பார்ப்பன மற்றும் இந்துத்வ மனம் ரசிக்கக்கூட இல்லை. இதை சமரசம் என்பதை விட அரசியல் இறுக்கத்திற்கு எதிரான நெகிழ்வு என்றுதான் கொள்ள வேண்டும். துரதிர்ஷ்டவசமாக கலைஞரின் இந்த நெகிழ்வின் மீது திராவிட கருத்தியலுக்கு எதிரானவர்கள் வெறுப்பை கக்கினர். நெகிழ்வின்றி அமையா அரசியல் புரியாத சில 'பகுத்தறிவு' பற்றாளர்களும், இதற்கும் அவர் வீட்டில் வேதம் ஒலித்ததற்கும் இப்போது திட்டுகிறார்கள். ராமானுஜர் தொடர் எழுதியதை போன்றே, கலைஞரின் தொடரை திருமலா டீவி ஒளிபரப்புவதும் வரலாற்று சமூக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு.

No comments:

Post a Comment