Sunday, May 8, 2016

பொலமிக்ஸ்-2 07/04/2016

கிண்டலாயினும் பேரறிஞர் என்று என்னை அழைத்ததற்கு நன்றி. நான் என்னை அறிஞனாக, அறிஞனாக மட்டுமே கருதுகிறேன். நண்பரையும் நான் அறிஞராகவே (கிண்டலின்றி) கருதுவதாலேயே எதிர்வினை. 
//எழுதியதை ஒழுங்காகப் படிக்காமல் பக்கம் பக்கமாக எதிர்வினையாற்றுவது சிலருக்கு கை வந்த கலை.//
அறிஞர் நண்பர் எழுதிய ஒரு வரி மட்டுமின்றி, மற்றவர்கள் எழுதியதையும் சேர்த்து பொதுவாக எதிர்வினையாற்றியது அது. இம்முறை நண்பர் எழுதியதை நேரடியாக எதிர்கொண்டு எதிர்வினை ஆற்றினால் போச்சு!
//"தமிழக அரசியலில் யாராவது, ஒரு பார்பனரை நோக்கி 'இவர் புரோகிதம் செய்யப்போகலாம்" என்று இழிவு படுத்தும் நோக்கில் சொல்லியுள்ளார்களா" என்று ஒரு பேரறிஞர் கேட்கிறார். நான் அப்படிக் கேட்கிறார்கள் என்று எங்கே சொல்லியிருக்கிறேன்?//
அப்படி கேட்கிறார்கள் என்று நண்பர் சொன்னதாக சொல்லி நான் எங்கே கேள்வி எழுப்பியுள்ளேன்? வைகோ கலைஞரை சொன்னதை போல, அல்லது அதற்கு இணையான ஒன்றை -சாதிய நோக்கில் பார்பனர்கள் குறித்து - யாரவது சொல்லியுள்ளார்களா, அப்படி சொன்னாலும் அதில் இழிவான சாதிய மதிப்பீடு இருக்கிறதா, இருப்பது சாத்தியமா என்பது நேரடியாக தற்போதய பிரச்சனையுடன் தொடர்புள்ள ஒரு கேள்வி. கலைஞரை சாதித்தொழில் செய்யப்போகச் சொல்லி திட்டுவதைப் போல, ஒரு பிராமண சாதியை சேர்ந்த ஒருவரை திட்டுவதில்லை என்பதையும், அப்படி திட்டினாலும் கூட அதில் இழிவான மதிப்பீடு இல்லை என்பதையும் தான் சுட்டியுள்ளேன். எழுதியதை படித்தாலும், அதன் அடிப்படையான தர்க்கத்தை புரிந்து கொள்ளாமல், எதிராளியை "எழுதியதை ஒழுங்காகப் படிக்காமல் பக்கம் பக்கமாக எதிர்வினையாற்றுவதாக' சொல்வது என்ன வகை கலையோ!
//நான் சொல்வது மிகவும் எளிமையானது. தமிழகத்தில் பிராமணர் ஒருவர் எந்தத் தவறு செய்தாலும் அவரது சாதி குறித்துப் பேசுவது, திட்டுவது மிகவும் சாதாரணமானது. திட்டுபவர்களை யாரும் கண்டிப்பதில்லை. //
முதலில் இந்த கூற்றை நான் முற்றிலுமாக மறுத்துள்ளேனா என்பதை கவனிக்கவும். 'அரசியல் சார்ந்த முத்திரை', 'போலெமிகல் வசை' 'அரசியல் சார்ந்த வெறுப்பு', 'கருத்தை எதிர்கொள்ள முடியாமல் எதிர்வினையாற்றிய வசை', 'ஒத்துவாராதவர்களை எதிர்கொள்ள செய்த முத்திரை குத்தல்'' என்றெல்லாம் எதை பற்றி சொல்லியுள்ளேன்? திட்டுபவர்களை யாருமே கண்டிப்பதில்லை என்பது உண்மையா? எத்தனை பேர்கள் கண்டிக்கிறார்கள், ஏற்கிறார்கள் என்று ஒரு கணக்கு உள்ளதா? என்னளவில் நான் கண்டித்து எழுதியுள்ளேன். சாதிக்கு சம்ப்ந்தமில்லாத ஒரு மேட்டரில் சாதியை இழுத்து பேசுவது கண்டிக்கத் தக்கதுதான். அப்படி ஒரு போக்கு தமிழகத்தில் இருப்பதை ஏற்கிறேன்; எதிர்க்கிறேன். அ.மார்க்ஸ் ராஜன்குறையை, ராமானுஜத்தை திட்டியதை மட்டுமல்ல, பத்ரியை திட்டியதற்கும் என் எதிர்ப்பை தெரிவித்துள்ளேன்; நிறைய பேர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு பக்‌ஷிராஜனையும், ராஜன்குறையையும் 'மெகாலேயிஸ்ட் பார்ப்பனர்' என்று அரவிந்தன் நீலகண்டன் திட்டினாலும் நான் எதிர்க்கிறேன். ஜெயமோகன் தர்க்கம் ஒத்துழைக்காத போது, ராஜன்குறையின் ஜாதியை சுட்டி எதிர்வினையாற்றியதையும் கண்டிக்கிறேன். பெரியாரிஸ்டுகளுக்கு மட்டுமல்ல, இந்துத்வவாதிகளுக்கும், ̀காந்திய'வாதிகளுக்கும் கூட இப்படி கருத்தை பார்ப்பனராக மாற்றும் அணுகுமுறை வசதியாக உள்ளது. ஆனால் பெரியாரிஸ்ட்டுகளை பொறுத்தவரை அது கருத்தியலுடன் ஒத்து அவர்கள் காட்டும் நேர்மை; இந்துத்வவாதிகளுக்கு அது ஹிபாக்ரசி. 
ஆனால் பார்பன அடையாளம், பார்பனிய அரசியல் என்று பேசவே கூடாது என்பது ஏற்கக்கூடியது அல்ல. சோவின் 'எங்கே பிராமணன்?' நூலை இதையெல்லாம் பேசாமல் அலச முடியுமா? ஒரு எக்ஸ்ட்ரீம் உதாரணமாக இதை சொன்னேன். மற்றபடி சமூகத்தில் இருப்பதன் பிரச்சனைகளை சம்ப்ந்தத்துடன் பேசித்தான் ஆகவேண்டும்.
//ஆனால் மற்றச் சாதிகளைச் சார்ந்தவர் தவறுகள் செய்தால் அவர்கள் சாதிகள் அடையாளம் காணப்பட்டு திட்டப்படுவதில்லை. திட்டினாலும் கண்டனங்கள் உடனே வருகின்றன கலைஞர் விஷயத்திலும் அவ்வாறே நடந்தது. அவரது சாதி குறித்துப் பேசக் கூடாது என்று சொல்லப்பட்டது. .///
ஒருவேளை பிராமணர்கள் அளவுக்கு மற்றவர்கள் திட்டப்படவில்லை என்று ஒரு வருத்தம் நண்பருக்கு இருந்தால் அதில் நியாயம், இருக்கலாம். மற்றபடி கடந்த இருபது வருடங்களில் பலரது சாதியும் விலாவாரியாக பேசப்பட்டுள்ளது. தங்கர் பச்சான், கோணங்கி, எஸ்ரா, புதுமைப்பித்தன், பாலா, சசிக்குமார்… எழுதும்போது உடனடியாக வந்த உதாரணங்கள். எந்த ஜாதிக்கு உதாரணம் வேண்டுமானாலும் எடுத்துக் காட்ட முடியும். 
//பேரறிஞர் மேலும் சொல்கிறார் -"சாதிய இழிவு படுத்தலுக்கும், அரசியல் சார்ந்த சாதிய முத்திரைக்கும் வித்தியாசம் தெரியாத மட்டையடி தர்க்கம், ஒரு போலெமிக்ஸ்ஸிற்கு முகாந்திரமான இன்னொரு போலமிக்ஸ் மட்டுமே."
அப்படியா?நாதசுரத்தைப் பற்றிச் சொன்னால் அது சாதிய இழிவு படுத்தல். பூணூலை உருவிக் கொண்டு ஒரு கூட்டம் கிளம்பி விட்டது என்று கருணாந்தி சொன்னால் அது பாராட்டு.//
நான் இரண்டாவதை பாராட்டு என்றா சொல்லியுள்ளேன்? நாதஸ்வரத்தை பற்றியும், உலகின் ஆதித் தொழில் பற்றியும் சாதியமாக பேசுவதும் "பூணுலை உருவிக்கொண்டு ஒரு கூட்டம் கிளம்பி விட்டது என்று சொல்வதும் ஒன்றல்ல என்பதுதான் என் நிலைபாடு. இரண்டையும் எதிர்க்கலாம். ஆனால் இரண்டும் ஒன்றல்ல, இரண்டின் மதிப்பீட்டு சட்டகங்களும் வேறு. 
பார்ப்பனியம் என்று ஒன்று இந்த சமூகத்தில் இல்லை என்றும், அதை பற்றி பேசுபவர்கள் பெரியாரிய லூனாடிக்ஸ் என்று அறிஞர் நினைக்கலாம். ஆனால் பார்ப்பனியம் என்கிற ஒரு மானிட விரோத பண்பும், அது சார்ந்த அரசியலும் இருப்பதாக சிலர் நினைக்கலாம்; அப்படி நினைப்பவர்கள் அதை எதிர்த்து செயல்படும் அரசியலுக்கான ஒரு சாத்தியம் உள்ளது என்பதையாவது அறிஞர் ஏற்கவேண்டும். அந்த அரசியல் நியாயமான பல எதிர்ப்புகளையும் செய்யலாம்; பல தனிப்பட்ட வெறுப்புகளையும் அது சார்ந்த வசைகளையும் - எல்லா எதிர்ப்பு அரசியல்களையும் போலவே - உருவாக்கவும் சாத்தியம் உள்ளது. ""பூணுலை உருவிக்கொண்டு ஒரு கூட்டம் கிளம்பி விட்டது" என்று சொல்வது இந்த இரண்டின் வெளிபாடாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்பது என் பார்வை. உதாரணமாக திமுக ஆட்சியின் ஊழலை விமர்சிக்கும் போது அப்படி சொன்னால் அது இரண்டாவதன் வெளிபாடு; கலைஞர் ராமானுஜன் டீவி தொடர் எழுதுவதற்கு ஒரு கூட்டம் திட்டுவதையும், நக்கல் அடிப்பதையும் முன்வைத்து சொன்னால் முதலாவதன் வெளிபாடு. இந்த இரண்டு வகை வெளிபாடுகளும், ஜாதித்தொழிலை முன்வைத்து ஒருவரை திட்டுவதும் நிச்சயம் ஒரே தரமானது அல்ல, அல்ல. 
நேரடியான ஒரு உதாரணம் தருகிறேன். 13 வருடங்கள் முன்பு, திருமாவும் ராமதாசும் இணைந்து அரசியல் செய்து கொண்டிருந்த போது, வலைப்பதிவில் ஒருவர் 'திருமா ராமதாசிற்கு மலம் சுமக்கும் வேலையை செய்வதாக' எழுதினார். கவனிக்கவும் அவர் ராமதாஸ் திருமாவிற்கு செய்வதாக எழுதவில்லை, அப்படி எழுதியிருந்தாலும் அது ராமதாசை இழிவு செய்யாது என்பதுதான் நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது. என்ன கோபம் வந்தாலும் நண்பர் பக்‌ஷிராஜனையோ, ஜெயலலிதாவையோ யாரும் இப்படி வர்ணிக்கமாட்டார்கள். மிஞ்சிப்போனால் 'பூணுல் வெளிவந்துவிட்டது' என்றுதான் சொல்லமுடியும். பூணுலை பெருமையாக நினைப்பவர்கள் அதில் புண்பட என்ன உள்ளது! பூணுலை துறந்தவர்கள் இதற்கு - ஒரு சாதிய வசையின் அளவிற்கு - புண்படும் முதிர்ச்சியற்றவர்கள் எனில் யார்தான் என்ன செய்ய முடியும்! மற்றபடி திருமாவிற்கு நிகழ்ந்த இழிவுடன் இதை ஒப்பிட முடியுமா? 
//அரசியல் சார்ந்த சாதிய முத்திரையா? அது என்ன?
ஒருவர் செய்த தவறுக்கு அவன் பார்ப்பான், அவன் குலமே இப்படித்தான் செய்யும் என்று சொல்வது சாதிய இழிவு படுத்துதல் என்றுதான் நான் நினைக்கிறேன். இது தமிழகத்தில் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு வருகிறது. இப்படிச் சொல்வது குலத்தொழிலைக் குறித்துச் சொல்வதைப் போலவே இழிவானது என்று நான் கருதுகிறேன்.
இது மட்டுமல்ல. தவறே செய்ய வேண்டிய தேவையில்லை. பார்ப்பனக் குலத்தில் பிறந்ததே தவறு என்கிறார்கள் பெரியாரடியார்கள்.
இது விடுதலையிலிருந்து:"நெருப்பு மட்டும், தான் எந்தப் பொருளுடன் சேர்கிறதோ, அந்தப் பொருளை எரித்து அழித்துவிடும். சேர்ந்தாரைக் கொல்லும் குணம் நெருப்புக்கு இருப்பதனால் அதைச் சேர்ந்தாரைக் கொல்லி என்றார் வள்ளுவர்.
பார்ப்பனர்களின் குணமும் அதுதான் என்பதால்தான் தந்தை பெரியார் பார்ப்பனர்கள் எவ்வளவு முற்போக்கானவர்களாக இருந்தாலும், தன்னுடன் சேர்க்காமலே இறுதிவரை இருந்தார். இதில் தீண்டாமையும் இல்லை, வேறுபாட்டுக் கொள்கையும் இல்லை.!"
இது அரசியல் சார்ந்த சாதி முத்திரையா? அல்லது சாதிய இழிவு படுத்தலா?//
இதில் அரசியல், அரசியல் சார்ந்த சாதிய முத்திரை இருந்தாலும், அதன் விளைவான இனவாதத்தை ஒத்த கருத்து இருப்பதாக தோன்றினாலும், இது சாதிய இழிவு படுத்தல் இல்லை; அரசியல் சார்ந்த முத்திரை என்றும் சுருக்கி விட முடியாது. அதே நேரம் ஏற்கவோ, அங்கீகரிக்கவோ கூடிய கருத்தும் அல்ல. சிக்கலான பல பிரச்சனைகளை கொண்டது என்பது என் கருத்து. நிஜமாகவே விரிவாக பக்கம் பக்கமாக முழு கட்டுரைதான் எழுத வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இப்போது முடியாது.

No comments:

Post a Comment