Monday, March 5, 2012

இரு குறிப்புகள்

குறிப்பு 1: கூடங்குளம் போராட்டத்தில் களத்தில் நிற்பவர்கள் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறார்கள்; போரடுவதன் அணுகுமுறையும், முன்னெடுப்புகளும், அவர்கள் அளவிற்கு நமக்கு தெளிவிருக்காது. என் கரிசனம் அவர்கள் ஏதோ ஒரு நெருக்குதலில் வன்முறைக்கு மாறக்கூடாது என்பதே; இதுவரை வன்முறையற்று இருக்கும் போராட்டம் வன்முறையாவதை அரசாங்கம் மிக விரும்பும்; வன்முறையை சமாளிப்பதும், ஒடுக்குவதும், அந்த ஒடுக்குதலை நியாயப்படுத்துவதும் அரசுக்கு இலகுவானது. மேலும் இப்போதிருக்கும் சூழலில் வலிமை கொண்ட அரசு அதிகாரத்தை வன்முறை மூலம் பணிய வைக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக தெரியவில்லை. வன்முறையில் இறங்குவதற்கான நெருக்குதல் எல்லவகையிலும் இருக்கிறது. ஆனால் இந்த இறுதி சந்தர்பத்திலும், இருக்கும் ஜனநாயக முறைகளில் தொடர்ந்து அரசை இழுத்தடிக்கும் வாய்ப்பு நிச்சயம் உள்ளது. அதற்கான உறுதியும் தளராமையும் போராடுபவர்களுக்கு இருப்பதையும் காணமுடிகிறது. என்ன நடக்கப்போகிறது என்று பார்போம்.


குறிப்பு 2: இன்று சென்னையில் நடக்கவிருக்கும் என்கவுண்டருக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு தமிழ் தேசியம் பேசுபவர்கள் கலந்து கொள்கின்றனர்; இது வேறு எங்கும் பார்க்காத மிக ஆரோக்கியமான நிகழ்வு. ஒரு சபால்டர்ன் மக்கள் கூட்டத்தின் மீதான வன்முறையை, இடதுசாரிகளும் மற்ற மனித உரிமையாளர்களும் எதிர்ப்பது இயல்பாக நாம் காணக்கூடியது. ஆனால் இன்னொரு தேசிய அடையாளத்தின் மீது நிகழ்ந்த வன்முறைக்கு எதிராக, அதற்கு எதிரான தேசியம் பேசுவோர் திரள்வது என்பது (குறைந்த பட்சம் இந்திய அளவில்) நான் பார்த்ததில்லை. தேசியத்தின் பாசிசம் என்பது, அது குறிவைத்து எதிர்க்கும் தேசிய அடையாளத்தைக் கொண்ட எளிய மக்களின் மீதான வன்முறையாகத்தான் முதலில் இருக்கும். மும்பை மற்றும் கர்நாடகாவில் தாக்கப்பட்ட தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் சேரிகளின் வசித்தவர்கள். இப்போது முல்லை பெரியார் விவகாரத்திலும் கூலிக்கு சென்ற மக்களும், ஐயப்பன் கோவிலுக்கு போகும் எளிய மக்களும்தான் கேரளாவில் தாக்கப்பட்டு உள்ளனர். இயல்பாக பேசவேண்டிய மனித உரிமையாளர்களின் குரலும், இடதுசாரி செயல்பாடும் இந்த வன்முறைக்கு எதிராக நிகழ்ந்து நான் அறியவில்லை. இந்த யதார்த்தத்தில் வட இந்தியர்கள் மேலான இந்த வன்முறையை தமிழ்தேசியர்கள் எதிர்ப்பது தமிழக அரசியல் சூழல் குறித்து நாம் பெருமிதம் கொள்ளவேண்டிய விஷயம். இது திடீரென நிகழ்ந்து விடவில்லை. ஏராளமான அரசியல் விவாதங்களின் விளைவாகவே இப்படி ஒரு அரசியல் சூழல் இங்கே முகிழ்ந்திருக்கிறது.

இன்று சென்னையில் இருக்கக்கூடிய (அல்லது இருப்பதாக சொல்லக்கூடிய) வட இந்தியர்களுக்கு எதிரான மனோபாவம் என்பது, போலிஸ் வழிமுறைக்கு ஆதரவான பொதுப்புத்தியும், அரசியலற்ற அரசு வன்முறையுமே தவிர, எந்த அரசியல் சார்ந்தும் நிகழ்வில்லை. இந்த நிலையில் தமிழ் தேசியம் உட்பட எல்லா எதிர்ப்பு அரசியல் பேசும் அனைவரும் இந்த மனோபாவத்திற்கு எதிராக இருப்பது மிக ஆரோக்கியமானது. இந்த ஆரோக்கிய சூழல் குறித்த பிரஞ்ஞை கூட இல்லாமல் தமிழகத்தை பாசிச பூமியாக சிலர் சித்தரிக்க முயலும் போது, இதை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. மற்றபடி தமிழ்தேசியம் மீது எப்போதும் இருக்கும் விமர்சனங்கள் இப்போதும் உள்ளது.

No comments:

Post a Comment