Monday, May 27, 2013

இன்று இப்படித்தான் யோசிக்க முடிகிறது!

ஜெயமோகன் கருத்தியல்ரீதியாக எதிர்க்கப்பட வேண்டியவர் என்பதுதான் என் நிலைபாடும்; என்னால் ஆன அளவு நானும் எதிர்த்திருக்கிறேன்; எதிர்க்கிறேன். ஆனால் ஜெமோ சொன்னதன் எதிர்வினையாக தமிழ் வெகுசமூகத்தின் ஆழ்நோயை புறக்கணிக்கவோ, அப்படி ஒன்று இல்லையென்று மறுக்கவோ முடியாது. சமத்துவம் சார்ந்ததாக தன் நிலைபாட்டை கற்பித்துக் கொண்ட ஞாநியின் பதிவு வழக்கம் போல அபத்தமானது. அதற்கு ஜெமோவின் (அவரது வார்த்தையில்) தமிழ் 'பரப்பியல் கலாச்சார' சாடுதலே மேல். அறிவுபூர்வத்தை மலினப்படுத்துவதை எதிர்ப்பது பாசிசமாகாது. இந்த மலினப்படுத்தலை தமிழ் சமூகத்தில் எல்லா தளங்களிலும்-பல்கலைகழக்த்திலிருந்து, ட்விட்டர்வரை- காண்கிறோம். கேரளத்தில் இப்படி இல்லையா, கர்நாடகத்தில் இல்லையா என்கிறார்கள். நிச்சயம் தமிழ்நாட்டு சாலைகளில் கேட்கும் ஹார்ன் ஒலிபோல இவ்வளவு நாராசமாக வேறு எங்கும் இல்லை என்பதுதான் என் திடமான மனப்பதிவு. ஜெமோ சொல்லிவிட்டார் என்பதற்காக, அறிவுக்கு எதிரான அதிகாரம் கொண்ட பாமரத் திமிருக்கு கருத்தியல் நியாயம் கற்பிப்பது அறிவுடமை ஆகாது.

ஜெமோவிற்கு இதை சொல்ல அருகதை இல்லை என்றால் இருந்துவிட்டு போகட்டும். தமிழ் சமூகம் மீது அக்கறை உள்ளவர்கள் ஜெமோவை புறக்கணித்து விட்டாவது இந்த நோயை அணுகித்தான் ஆகவேண்டும். இதற்கு திராவிட இயக்கமும் திரைப்பட கலாச்சரமும்*தான்* காரணம் என்று நான் ஜெமோ போல் எண்ணவில்லை; ஒருவேளை அவைதான் காரணம் என்றால், ஜெமோ முன்வைக்கும் அறிவியக்கத்தை விட திராவிட அரசியலும், தமிழ் வெகுஜன கலாச்சாரமும் முக்கியம் என்பதுதான் என் எண்ணம். ஆனால் இவை இரண்டிற்கும் பங்கில்லை என்றும் உறுதியாக சொல்லி காலத்தின் தேவையான விமர்சனத்தையும் மறுக்க முடியாது.

திமுகவின் எல்லவகை ஊழலுக்கும், பிஜேபியுடன் கூட்டுச் சேர்ந்தது உடப்பட்ட எல்லாவகை சந்தர்ப்பவாத அரசியலுக்கும், துரோகங்களுக்கும் அளிக்ககூடிய கருத்தியல் நியாயத்தை, தமிழ் சமூகத்தின் தீராத நோய்களுக்கும் மருந்து என்று எண்ணி இடலாகாது.

No comments:

Post a Comment